கடைசியாய் மயிலாப்பூர் 'இராம கிருஷ்ண மடத்தில்' பேசும்போது பார்த்தது.
- உங்கள் பால்ய காலத்து நினைவுகளை அசைபோடும்போது என்னவெல்லாம் மனதில் வருகிறது?
- எத்தனை மனிதர்கள் உங்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறார்கள்?
- நீங்கள் மிகவும் இரசித்த விசயம் எது?
- சிறுவனாக/சிறுமியாக இருந்தபோது நீங்கள் நண்பர்களுடன் விவாதித்த சம்பவங்கள், செய்திகள் என்னென்ன?
**************
எனது சிறுவயதை நினைவு கூறும்போது முக்கியமாக நினைவுக்கு வருவது ரேடியோவும் தென்கச்சியும். நான் முதன் முதலாக ரேடியோவைக் கவனிக்க ஆரம்பித்தது, 1994-95 ஆம் வருடங்களில் - பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது.
தூத்துக்குடி வானொலி:
- காலை 7 மணியில் இருந்து 7:15 வரை பக்திப் பாடல்கள் (இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் சமய பக்திப் பாடல்கள் ஒவ்வொன்று, நேரம் மீதமிருந்தால் ஏதேனும் ஒரு மதத்திலிருந்து இன்னும் ஒரு பாடல்).
- 7:15 - 7:25 செய்திகள் (டெல்லி அஞ்சல்).
- 7:25 - 7:30 'இன்று ஒரு தகவல்'.
சில நாட்களில், 7:28க்கே, இன்று ஒரு தகவல் முடிந்துவிடும். அத்தனை குறுகியதாக இருந்தாலும், மிகப்பெரும் அறிவியல், சமூக, பண்பாட்டு தகவல்களை வாரி வழங்கிய அற்புத நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் வரும் அறிவியல் தகவல்கள்தான் தொடர்ந்து கேட்கும்படி செய்தன. காலையில் காஃபியுடன் 'இன்று ஒரு தகவலை'க் கேட்பதற்காகவே 'ஆகாசவாணி'யின் செய்திகளைக் கேட்டுக்கொண்டிருந்த காலம் அது. இன்று அறிவியல் செய்திகளில் நான் அதிக ஆர்வம் காட்டுவதற்கு அடிப்படையான காரணம் இதுதான்.
பல வருடங்கள் வானொலியில் ஒலித்த குரல், எனக்கு மிக அருகே நடந்து சென்றது - எனக்குள் இருந்த, அவரை ரசித்த அந்த சிறுவனுக்கு எப்படி ஆச்சரியமும் பரவசமும் தராமல் இருக்க முடியும்?சென்னைக்கு வந்ததற்காக மிகவும் மகிழ்ச்சியடைந்த ஒருசில தருணங்களில் அதுவும் ஒன்று.
அவர் அந்த நிகழ்ச்சிக்கு வரவிருந்தது முன்பே தெரிந்திருக்கவில்லை. மிச்சமிருந்த கொஞ்ச நஞ்ச பேட்டரியை வைத்து, எனது கேமிராவைப் பயன்படுத்தி அன்றைக்கு எடுத்த கடைசி புகைப்படம். (அவரை கிளிக்க மட்டுமே எஞ்சியிருந்ததோ என்னவோ?)
அழியாப் புகழ் தென்கச்சியின் குரலுக்கு!