Monday, February 26, 2007

ஆலைகள் வைப்போம், கல்விச் சா(ஆ)லைகள் வைப்போம்?!

கல்லூரியில், நான் படித்த துறைக்கு, வரும் ஆண்டுகளுக்கான அங்கீகாரம் பெரும் வேலைகள் நடந்து கொண்டிருந்தன. இதன் ஒரு பகுதியாக, பழைய மாணவர்களுடனான "கலந்துரையாடலில்" பங்கு பெற, கடந்த சனிக்கிழமை கல்லூரிக்கு சென்றிருந்தேன்.
நான் பொறியியல் கல்லூரியில் நுழைந்த முதல் நாளில் வகுப்பு எடுத்த பேராசிரியரை அன்றும், முதலாகச் சந்திதேன். நான் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் பயின்றிருந்ததாலும், கணக்கு எனக்கு கனாவில் மட்டுமே எளிதாகத் தெரிந்ததாலும், எனக்கு இருந்த தயக்கங்களை நீக்கியவர் அவர். எப்போதும் சுறுசுறுப்புடன், முகத்தில் புன்னகையுடன் இருப்பவர். மாணவர்களுடன் எளிதாகப் பழகுபவர்.

அன்று நண்பர்கள் சிலரோடு சேர்ந்து, அவரோடு உரையாடிக்கொண்டிருந்த போது, ஏதோ ஒன்று அவரிடம் தொலைந்து போயிருப்பதை கண்டேன்................சற்று நேரத்தில் அவரே அனைத்தையும் விளக்கினார்.

அவர் கூறியவை,

" முன்பு போல் இல்லை. இப்போது, கல்விச் சாலைகள், கல்வி ஆலைகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. வெறும் புத்தகத்தை மனனம் செய்து மாணவர்களிடம் ஒப்பித்து, அதை அவர்கள் தேர்வில் எழுதினால் போதும், தோல்வி இல்லாமல் கடந்து சென்றால் மட்டும் போதும் என்றாகிவிட்டது.
இதற்கு முக்கிய காரணமாக பெற்றோர்களும் இருக்கிறார்கள். பள்ளிகளில் பாடம் நடத்தியது போலவே கல்லூரிகளிலும் நடத்த வேன்டும் என்று நினைக்கிறார்கள். தன் பிள்ளை கண்டிப்போடு வளர வேன்டும், தேர்வு நன்றாக எழுதுவதற்கு மட்டும் படிக்க வேண்டும், ஒரு நல்ல வேலைக்கு போக வேண்டும் என்று எல்லா "வேண்டும்" களையும் 'பெற்றோர் ஆசிரியர் சந்திப்ப்லும்' கூறுகிறார்கள்.
இதனால், புரிய வேண்டும், படிப்பில் ரசனை வேண்டும், ஆர்வம் வேண்டும், அறிவு வளர வேண்டும், சுயமாக சிந்திக்க வேண்டும் என்ற "வேண்டும்"கள் ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும் காணாமல் போய், கடைசியில் இப்போது தொலையும் நிலையில் உள்ளது".

அவர் பேச்சிலிருந்த உண்மையை ஒப்புக்கொண்டு (ஓரளவிற்கு நானும் இவற்றை எல்லாம் அனுபவித்து இருந்ததால்), கல்லூரியை விட்டு வெளியேறும் போது கனத்த உள்ளத்தோடு வரவேண்டியதாயிற்று.

Wednesday, February 21, 2007

வாருங்கள், எல்லோரும் ஏமாற்றுவோம்!!!

உஙள் அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் 'சரியான நேரத்திற்கு வேலைக்கு வருகிறார்களா?' என்பதை தெரிந்து கொள்ள(ஒரு முதலாளியாக)ஆசைப்படுவீர்கள்தானே?!

ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உங்கள் ஊழியர்கள் போராட்டம் நடத்தினால்??? :(

அப்படி ஒரு சம்பவம் நம் அருகிலேயே அம்பத்தூர் நகராட்சியில் நடந்துள்ளது. "நாஙள் எப்போது வேலைக்கு வருகிறோம் என்று சொல்ல மாட்டோம்" என்று போராட்டம் நடத்தியுள்ளனர், அந்த மாநகராட்சியின் துப்புரவுப் பணியாளர்கள்.


வாருங்கள் விஷயம் என்னவென்று பார்ப்போம்....

"அம்பத்தூர் மாநகராட்சியின் 500க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்களின் வருகையை பதிவு செய்ய 'கணிணி வருகை பதிவு முறை' அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி ஊழியர்கள் தங்கள் விரல் ரேகையை அலுவலக எந்திரத்தில் பதிவு செய்ய வேன்டும்(வருகை பதிவு). இந்த முறையில் ஒவ்வொரு ஊழியரின் வருகை நேரமும் பதிவாகிவிடும்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவ்வூழியர்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்."

இதற்கு அவர்கள் கூறும் காரணம் "காலை, மதியம், பிற்பகல் மற்றும் மாலை என்று 4 முறை பதிவு செய்ய வேன்டியுள்ளது. தொலைவில் பணியில் இருப்பவர்களுக்கு இது மிகவும் கடினம்" என்பது.

இவர்கள் தங்கள் உபகரணங்களை எடுத்துச் செல்லவும் திரும்ப வைக்கவும் அலுவலகத்துக்கு வந்துதானே செல்வார்கள்?. எனவே 2 முறை பதிவு செய்தால் போதும் என்ற கோரிக்கையை முன் வைக்காமல், இந்த முறையே வேன்டாம் என்று போராடுவது, "நாங்கள் எப்போது வேன்டுமானாலும் வேலைக்கு வருவோம். நாஙள் தாமதமாக வருவதை கண்டுபிடிக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம்" என்று கூறுவது போல் உள்ளது.

இது "அவ்வளவு வேலையையும் முழுமையாக செய்ய வேன்டாம், இவ்வளவு செய்தால் 'போதும்' " என்ற நமது 'உயர்ந்த'(?) மனோநிலையை காட்டுகிறது.(மேல்மட்டத்திலிருந்து கடைசி மட்டம் வரை)

இவர்கள்தான் இன்னொரு இடத்தில் "அரசியல்வாதி எவனும் வேலையை ஒழுஙா செய்யவே மாட்டனுங்கய்யா" என்று அங்கலாய்ப்பார்கள்.


தமிழருவி மணியன் அவர்கள் தன் பேச்சில் பயன்படுத்தும் 'ஆட்சியாளர்களின் நீட்டுப்போக்கு' என்ற கருத்து கடைசி மட்டம் வரை பரவி விட்டது என்பதை இது உறுதிப்படுத்துகிறது. மேலும் சுஜாதவின்(எழுத்தாளர்) 'டெக்னாலஜியால் மட்டுமே இந்த மாதிரி விஷயங்களை கையாள முடியும்' என்ற நம்பிக்கையும் (எனது நம்பிக்கையும் கூட) தகர்ந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.


ம்ம்ம்.. என்ன செய்ய!! வாருங்கள்


அரசியல்வாதிகள் மக்களை
பணக்கார போலி சாமியார்கள் பக்தர்களை
ஊழியர்கள் முதலாளிகளை
முதலாளிகள் அரசாங்கத்தை
நாம் நம்மையே

ஏமாற்றுவோம்...!

Monday, February 19, 2007

மருங்கூருக்கு நன்றி.....

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் இருந்து சற்று தொலைவில் அமைந்திருக்கும் இந்த மருங்கூர்தான் இணையத்தமிழ் உலகில் பலருக்கும் அறிமுகமான மா.சிவகுமார் அவர்களின் சொந்த ஊர்.

என்னுடன் பணிபுரியும் நண்பர் பகவதியின் சொந்த ஊராகிய இதே மருங்கூரைப் பற்றி இணையத்தில் தேடும் போது கிடைத்த வலைப்பதிவுதான் மா.சிவகுமார் அவர்களுடையது. இதுதான் நான் தமிழில் வாசித்த முதல் வலைப்பதிவு. எனக்கு வாசிக்கக் கிடைத்த முதல் வலைப்பதிவே, "தமிழில் எப்படி எழுதுவது?" என்ற கேள்விக்கு விடையை இணைப்பாகக் கொடுத்ததில் இருந்து பொருளாதாரம், அரசியல், சமூகம் என்று பல தலைப்புகளில், சிறந்த படைப்புகளை அளித்தது வரை என்னை மிகவும் கவர்ந்து விட்டது.

என்னுடைய இந்த பயணத்தை தொடங்க காரணமாக இருந்த நண்பர் பகவதிக்கும், மா.சிவகுமார் அவர்களுக்கும், மருங்கூருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடன் சக பயணிகளாக பயணித்துக் கொன்டிருக்கும் மற்ற வலைப்பதிவாளர்களுக்கு என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.