Sunday, June 13, 2010

செம்மொழி மாநாடும் - சில உறுதிமொழிகளும்!

பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் தமிழ் மொழிக்கான ஒரு உலக மாநாடு - 'செம்மொழி' என்ற கூடுதல் தகுதியோடு! அது தொடர்பான விவாதங்களெல்லாம் இருக்கட்டும், நான் பேசவருவது வேறுவிசயம்!  இப்போதெல்லாம் நான் கூகிளில் தமிழில் கூட நிறைய விசயங்களைத் தேட ஆரம்பித்துவிட்டேன். "கோழி சமைப்பது எப்படி?", "கேரட் பொறியல் செய்வது எப்படி?", ''வத்தக்குழம்பு செய்யும் முறை'' என்று ஆரம்பித்து "அண்டம் தோன்றியது எப்படி?" வரைக்கும்!

தேடல் முடிவுகளில் பெரும்பாலும் தனிநபர் வலைப்பக்கங்களும் சில செய்தித் தளங்களின் தொடுப்புகளும் வருகின்றன. அதாவது, பதிவர்களாகிய நாம் எழுதுவது ஏதோ விளையாட்டுக் காரியமல்ல - அது மொக்கையாகவே இருந்தாலும்! நாம் எழுதிய வரிகளை நமக்குப் பின்னாஆஆஆஆல் வரும் சந்ததிகள் 10 பேரோ, 100 பேரோ ஏன் 10 இலட்சம் பேரோ கூட படிக்கலாம். அப்படி அவர்கள் படிக்கும்போது ஏகப்பட்ட பிழைகள் இருந்தால்(?!), அதே பிழைகள் அவர்களுடைய எழுத்துக்களிலும் பிரதிபலிக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. கூகிள் ப்ளாக்கர் சேவையை இலவசமாகத் தரும் வரையிலும் உங்கள் வலைப்புக்கள் தனித்தனி 'கல்வெட்டுகள்' என்பதை மறந்துவிடாதீர்கள்! - வரலாறு மிக முக்கியம்!

எனவே,

'செம்மொழி மாநாட்டை' முன்னிட்டு நான் எடுக்கும் உறுதிமொழிகள்:

*****
*முடிந்தவரை, பிழைகள் இல்லாமல் எழுதுவது. எங்காவது சந்தேகம் வந்தால் எஸ்.ரா, ஜெயமோகன், சாரு என எழுத்தாளர்களின் தளங்களில் படித்து, எனது எழுத்துக்களைத் திருத்திக் கொள்வது.

*மாதத்தில் ஒருவருக்காவது 'தமிழ் மென் எழுதிகள்' பற்றியும் 'இணையத்தில் தமிழ்' குறித்தும் அறிமுகப்படுத்துவது, அவர்களை இணையத்தில் தமிழில் எழுத வைப்பது.

*தமிழ் விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது.

*பிழைகளோடு எழுதும் சக பதிவர்களைத் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு அவர்கள் எழுதிச்சென்றுவிட்ட எழுத்து/இலக்கணப் பிழைகளை உணர்த்துவது. [நான் எங்காவது தப்புபோட்டா கூட மின்னஞ்சல் அனுப்புங்க மக்களே!]
*****

இந்த உறுதிமொழிகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்களும் எடுத்துக்கொள்ளலாம்!
தமிழ்மொழி தப்பும் தவறுமாக இணையத்தில் பதியப்படுவதில் ஒரு 5(%)சதவீதத்தையாவது கட்டுப்படுத்த உதவலாம்!

-வலைப்பக்கம் வந்து 6 மாதங்கள் ஆகின்றன. இந்த இடைப்பட்ட காலத்தில், தமிழ்மண விருது வாங்கியதற்காக வாழ்த்திய, மின்னஞ்சலிலும் அரட்டையிலும் விசாரித்த, ஒன்றுமே எழுதாவிட்டாலும் 'என்னத்தையாவது எழுதுவான்யா' என்று பின்தொடர்ந்த அன்பு உள்ளங்களுக்கும்,  குறுஞ்செய்தி மூலம் பதிவர் சந்திப்பு குறித்து தகவல் சொல்லிய டாக்டர் புரூனோ அவர்களுக்கும் (நான் கலந்துகொள்ளவில்லை என்பது வேறு விசயம்!) என் மனமார்ந்த நன்றிகளைப் பதிந்து கொள்கிறேன்.