Wednesday, November 25, 2009

நடிகர் விஜய் மீது நடத்தப்படும் மின்-வன்முறைகள்

தினமும் நான்கைந்து மின்னஞ்சல்கள், ஏழெட்டு குறுஞ்செய்திகள் - நடிகர் விஜயைக் கலாய்த்து வராவிட்டால் அன்றைய பொழுதில் ஏதேனும் பிழையோ என்று எண்ணத் தோன்றுகிறது. அந்த அளவிற்கு மின் ஊடகங்களில் விஜய் பற்றி ஏகப்பட்ட கதைகள், துணுக்குகள், கிண்டல்கள்.

இவற்றை உட்கார்ந்து பொறுமையாகத் தயாரிப்பவர்கள், யோசிப்பவர்கள் ஏன எத்தனைபேர் தங்கள் பொன்னான(!) நேரத்தைச் செலவிடுகிறார்கள். ஏன் இவர்களுக்கு இந்த ஆர்வம்? விஜய் பற்றி கடுமையாகக் கிண்டலடித்து குறுஞ்செய்தி அனுப்புவதிலோ, அல்லது மின்னஞ்சல் அனுப்புவதிலோ இவர்களுக்கு என்ன இன்பம் கிடைக்கிறது?!


  • தமிழகத்தில் தனக்கென அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகர்
  • ஒருசில ப்ளாப்புகள் கொடுத்த நேரத்திலும் மற்ற நடிகர்களைப் போல் மார்க்கெட் சாயவில்லை
  • அரசியலுக்கு வரலாம் என்று தகவல் வெளியானதுமே பரபரப்பானது பத்திரிகை உலகம்
  • நன்றாக நடிக்கத் தெரியாதவர் என்று விமர்சிக்கப்படுபவர்
  • மூன்றாம் தலைமுறை நடிகர்களில் முதலில் டாகடர் பட்டம் பெற்றவர்

இப்படி எத்தனையோ முகங்கள் நடிகர் விஜய்க்கு. இவற்றில் பெரும்பாலாக கிண்டலடிக்கப்படுபவை, விஜயின் நடிப்பு, டாக்டர் பட்டம் மற்றும் அரசியல். இந்த மூன்றிலும் விஜயை விட பல படிகள் மேலே கிண்டல் அடிக்கப்படவேண்டிய பிரபலங்கள் நம் தமிழகத்திலேயே உண்டு. அவர்களை விட்டு விட்டு, விஜய் மேல் மட்டும் அதிகம் தாக்குதல் நடத்தப்படுவதற்குக் காரணம் என்ன?

விஜய் பற்றி கிண்டலடித்து வரும் மின்-செய்திகளில் வெறும் கிண்டல் மட்டும் இல்லாமல் ஒருவித கடுப்புணர்வு(காண்டு) இருப்பதை நன்றாகக் காணமுடிகிறது. அது ஏன்?

விஜய் பற்றி பகடையடித்து பரவிவரும் விசயங்களில், கடந்த ஒருமாதமாகவே சற்று அதிகமான தாக்குதல் இருப்பதையும் உணரமுடிகிறது(வேட்டைக்காரன் கூடிய விரைவில் வெளவிரவிருப்பதால் இருக்குமோ?).

விஜய் பற்றி நையாண்டி செய்யப்படும் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள், யூடியூப் விடியோக்கள் - இவற்றை மெனக்கெட்டுத் தயாரிப்பவர்களின் மனநிலை என்னவாக இருக்கும்?

''சூர்யா மாதிரி சிக்ஸ் பேக் கிடையாது, அஜித் மாதிரி தன் திறமையால் சினிமா உலகத்திற்குள் நுழையவில்லை, விக்ரம் மாதிரி பல கெட்-அப் கிடையாது, படங்கள் கூட அப்பப்போ பிளாப் ஆகுது - இருந்தாலும் இவனுக்கு எப்படிய்யா இத்தனை ரசிகர்கள்?'' இந்த மாதிரியான எண்ணமாக இருக்குமோ?!!!

ஒரு விசயம்:
அந்த வன்முறை பின்னூட்டங்களில் வெளிப்படுவதைத் தவிர்க்க பின்னூட்ட மட்டுறுத்தல் செய்யப்படுகிறது.

Tuesday, November 24, 2009

பிடிச்சவங்க பிடிக்காதவங்க - யாரையும் விடுவதாய் இல்லை

இந்த இடுகை எழுதுவதற்கு நிறைய யோசிக்க வேண்டியிருந்தது! (மத்த இடுகையெல்லாம் மணிக்கணக்கா உட்கார்ந்து யோசிச்சி எழுதுறியாடா? என்று நீங்கள் யோசிப்பது எனக்குப் புரியும்).

பொதுவாகவே, எனக்கு ஒரு பழக்கம். பிடிச்சவங்களை சட்டுன்னு அடையாளம் காட்டுறது. ஆனா பிடிக்காதவங்கன்னு வந்தா 'பகிர்ந்துகொள்வதில்லை'.

ஆனால் மாதவராஜ் அவர்களின் இந்த வரிகளைப் (பிடிக்காதவர்களைச் சொல்வதற்கு இங்கு ஒரு தைரியம் வேண்டியிருக்கிறது. முக்கியமாக அதற்குத்தான் இந்தத் தொடர். எதாவது ஒரு இடத்தில் அவர்களைப் பிடிக்காமல் போகிறது. ஜெயமோகன் எப்போது அருந்திராயை ’குருவிமண்டை’ என்று சொன்னாரோ அப்போதிலிருந்து அவர் பிடிக்காமல் போய்விட்டார் எனக்கு. அதற்காக அவரது ரப்பரும், காடும் எனக்குப் பிடிக்காமல் போகாது. பதில்களை/ பதில் சொல்கிறவர்களை இப்ப்டி புரிந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.) படித்துவிட்ட பிறகு இதை எழுதுவதில் இருந்த குழப்பம் போய்விட்டது.


பிடித்தவர் - பிடிக்காதவர்

(காமராஜர்) ஸ்டாலின் - ஜெயலலிதா
பிரான்சிஸ் கிருபா - ஜோ.மல்லூரி
ராமகிருஷ்ணன் - இரமணிச்சந்திரன்
இளையராஜா - விஜய் ஆன்டனி(தற்போது)
பாலா - பேரரசு
கமல் - சிம்பு
வேகா - ஸ்ரேயா


என்னை அழைத்தவர்கள்:

தொடரை இழுத்துச் செல்ல நான் அழைப்பது:
3) Cheers with Jana ஜனா (ஏற்கெனவே எழுதிவிட்டார் - சுட்டி இங்கே)
விதிமுறைகள் இங்கே.
வாங்க மக்கள்ஸ், வந்து நீங்களும் பிடிச்சது பிடிக்காதது சொல்லுங்க.

படிச்சது பிடிக்காதது பற்றி....
ஜோ.மல்லூரியின் ஏகப்பட்ட பில்ட்அப்புகள் - என்ன கொடுமை சரவணா எனச் சொல்ல வைத்தன - நான் அவரது படைப்புக்களை(!) படிக்கவில்லை என்றாலும். அவரைப் பற்றிய எனது ஒரு இடுகை இங்கே. நடிகைகள்லாம் தமிழ்நாட்டுலதான் இருப்பாங்களான்னு தெரியல. இருக்கலாம்ங்கற நம்பிக்கைல இவங்க பேர போட்டிருக்கேன்.

Sunday, November 22, 2009

ஆஆஆஆஆணிபிடுங்குதல் என்றொரு வார்த்தை


தண்ணீர் குடிக்க வேண்டுமாம், அடிவயிறு குரலெடுத்துக் கூவுகிறது
தடதடதடவென ஒலியுடன் சேர்ந்து மினுமினுக்கிறது
தெருவெல்லாம் வெள்ளம், கவனிக்க முடியாமல் கண்களிலும்
தழும்புகிறது

அமைதியைக் கிழித்து வெடிக்கும் தொலைபேசி அழைப்புகள்
எப்போது வீடு திரும்புவேன் எனக்கேட்கும் தாய்.
திரையிட்டு மறைக்கிறது, மறுநாளுக்கான அலுவல்கள்
மழையை சிறைபிடிக்க வைத்திருந்த புகைப்படக் கருவி
மறைந்தே இருக்கிறது என் கால்சட்டைப் பைக்குள்!
நான்கு சதுர அடிகளுக்குள் முழு நாளே அடங்கிவிடுகிறது!
கேட்டால்,

ஆணிபிடுங்குதல் - நகைச்சுவையோடு சொல்லிவிடலாம்!

புகைப்படம்: நண்பன் 'பாலா' விடமிருந்து balasailendran@gmail.com.

Wednesday, November 18, 2009

ஈரம் இல்லாமல் ஆவியுடன் பேசிய சம்பவம் - திரைப்பட விமர்சனம் அல்ல

இந்த சம்பவத்தில் வரும் சம்பவங்கள்(!) அத்தனையும் உண்மையே(பெயர்களைத் தவிர).


அப்போதுதான் 'செல்போன்' எனப்படும் ஒரு வஸ்து அறிமுகமாகி இருந்தது. இப்போது 'மொக்கை' செர்வீஸ் என்று சொல்லப்படும் ஒரு நிறுவனம்தான் அன்றைக்கு இருந்த ஒரே செர்வீஸ் புரொவைடர். கல்லூரியில் செல்ஃபோன் வைத்திருந்த ஒத்தை கை எண்ணிக்கையில் 'சங்கரும்' ஒருவன் என்பதால் அவனுக்குத் தனி 'மாஸ்'. அரைகிலோவுக்கு அதிகமாக இருக்கும் அந்த போன் தொலைந்தது அவனுக்கு 'ஆடையில்லாமல் தெருவில் நடப்பது' போல இருந்தது. நேற்று மாலையிலிருந்து அவனுக்கு எதுவுமே புரிபடவில்லை.

ஏற்கெனவே ஒருசில திருட்டுக்களில் அடிபட்ட 'தங்கராஜ்'தான் இதெல்லாம் செய்திருக்கக் கூடும் என சிலர் தூபம் போட இவனும் அதை நம்ப ஆரம்பித்தான். இந்த நேரம்தான் அவன் ரூம்மேட் 'மாப்ள, இங்க பாரு. நீ தேடி அலையிறதுனால எந்த பிரயோஜனமும் கிடையாது. நம்ம முத்து இருக்காம்ல - ரூம் 162 - அவன் ஒரு புக் வச்சிருக்கான். ஆவி பத்தின புக். நாம ஆவிக கூட பேசி, களவாண்டது யாருண்ணு கண்டுபிடிச்சிடலாம்' என்றான். இந்த பேய் பூதத்தில் ஏற்கெனவே நம்பிக்கை வைத்திருந்த சங்கர் உடனே சரியென்றான்.



எல்லாம் தயார், ஆரம்பிக்க வேண்டியதுதான். ஹாஸ்டலில் ஒரு அறை. கதவு, ஜன்னல்கள் அவற்றில் இருந்த சின்ன ஓட்டைகள் முதற்கொண்டு முழுமையாக மறைக்கப்பட்டு அந்த பிற்பகல் நேரத்தில், அறைக்குள் இருள்கவ்வ அதிக சிரத்தை எடுக்கப்பட்டிருந்தது. ஒரு 'ஒய்ஜா போர்ட்'டைச் சுற்றி மூன்று பேர் - சங்கர், சங்கரின் ரூம்மேட், முத்து. அந்த போர்டில் ஆங்கில எழுத்துக்கள் இரண்டு வரிகளில் நல்ல இடைவெளி விட்டு எழுதப்பட்டிருந்தது. அதற்குக் கீழாக மூன்றாவது வரியில் எண்கள் மேலும் Yes & No. இன்னும் சில குறியீடுகள் இந்த எழுத்துக்களைச் சுற்றிலும் இருந்தன.

ஏதாவது நல்லது நடந்தால் சரி என்று 'தேமே' வென்று போர்டின் ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருந்தான் சங்கர். அவனுக்கு எதிரில் அவனது ரூம்மேட். அவன்தான் சும்மாயிருந்த 'சங்கரை' உசுப்பிவிட்டு இங்கு அழைத்துவந்தவன். ஆவிகளின் எக்ஸ்பெர்ட் 'முத்து', சங்கரின் ரூம்மேட் கையில் ஒத்தை ரூபாயைக் கொடுத்து ஒய்ஜா போர்டில் வைத்து அழுத்திப் பிடிக்கச் சொன்னான். பின்பு கையில் இருந்த புத்தகத்திலிருந்து சில வரிகளை வாசிக்க ஆரம்பித்தான்.

''புண்ணியலோக ஆவிகளே....! நீங்கள் எங்கள் குரலுக்கு வாருங்கள்'' என்று புத்தகத்திலிருந்து சில வரிகளை உளறியவன், சில நிமிடங்களில் 'சர்ச்சுகளில்' ஆவிவந்ததாக நம்பப்படுபவர்கள் உளறுவது போல ''வாருங்கள், வந்து பதில் சொல்லுங்கள்'' என்று தனக்குப் பிடித்தபடி கூப்பிட ஆரம்பித்தான். பின்பு ஓய்ந்து நிறுத்தினான். இப்போது எல்லாருடைய கண்களும் ஒய்ஜா போர்டில் ஒத்தை ரூபாய் காயினை ஆட்காட்டி விரலால் அழுத்தியிருந்த சங்கர் ரூம்மேட்டின் விரல்களின் மேல் குவிந்தன.

'சங்கருக்கு' எதோ நல்லது நடப்பது போல ஒரு உணர்ச்சி. எப்படியும் தனது தொலைந்துபோன மொபைல் போனைக் கண்டுபிடித்துவிடலாம் என்று ஒரு நம்பிக்கை மெதுவாக கண்களில் உதித்துக் கொண்டிருந்தது.

அப்போது,
''டேய், வார்டன்கிட்ட எவனோ போட்டுக் குடுத்துட்டாண்டா, இங்கதான் வந்துகிட்டு இருக்காரு'' - எவனோ ரூம் கதவுப்பக்கம் வந்து சிக்னல் கொடுத்துவிட்டுச் சென்றான்.

அடுத்த நிமிடம் பேயையும் காணோம், பேயைக் கான்டாக்ட் பண்ண வந்தவங்களையும் காணோம்! சங்கரோட அந்த பழைய மொக்கை மொபைல் இன்னமும் கிடைக்கவில்லை. யாராவது மீடியம் இருந்தா ஆவிகள்கிட்ட கேட்டு சொல்லுங்களேன்!

[மேல இருக்கிற படங்கள் நிறைய இடத்தில கிடைக்குது! சோர்ஸ் எதுன்னே தெரியல! :( ]

Monday, November 16, 2009

2012 (ருத்ரம்) ஒரு பார்வை - பகுதி 1

''உலகமே அழியப் போகுது, உஷாரா இருந்துக்கப்பூ.
மவனே என்ன பண்ணுனாலும் சங்குதான்.
இன்னும் இரண்டே இரண்டு வருஷம்தான், பூமித்தாய் வாயைப் பிளக்கப்போறா, நாம எல்லாரும் உள்ள போகப்போறோம்'' இப்படி உரக்க சொல்வதற்குத் தோதுவாக நல்ல விளம்பரத்தோடும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடும் வெளிவந்துள்ள படம் ('நெட்டுல ரிலீஸ் ஆகிடுச்சா'ன்னு நீங்க கேட்கிறது புரியுது!).

உலகம் அழியப் போகிறதைப் பற்றி பலரும் பலவிதத்தில் பீதியையும் பேதியையும் கிளப்பிவிடும் நேரத்தில், கண்ணுக்குள் இதையெல்லாம் கொண்டுவரும் ஒரு மாயாஜாலம்.

உலகத்தின் அழிவை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு(இப்போது, அதாவது 2009) விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கிறார்கள். அதிலிருந்து மனித இனத்தைக் காப்பாற்ற ரகசிய திட்டங்கள் தீட்டப்படுகின்றன. இதைத் தெரிந்துகொள்ளும் ஒரு சாதாரண குடிமகன் தன் குடும்பத்தை எப்படிக் காப்பாற்றுகிறான் என்பதுதான் கதை. அமெரிக்காவில் ஆரம்பித்து, இந்தியா, சீனா என்று பயணித்து ஆப்பிரிக்காவில் முடிகிறது - சொல்லப்போனால், தொடங்குகிறது!


படங்கள்:http://www.whowillsurvive2012.com/

உலக உருண்டையின் உள்ளே ஏற்படும் மாற்றங்கள், கண்ட நகர்வு, நிலப்பரப்பு உள்வாங்குதல் (அ) உருக்குலைதல், அதனால் இன்னமும் கனன்று கொண்டிருக்கும் பூமியின் உள்பகுதி வெப்பக் குழம்புகள் வெளிவருதல், கடலுக்குள் நிலம் அமிழ்ந்துபோதல், இதையெல்லாம் கடந்து ஒரு குடும்பம் ரகசியமாகத் தயாரிக்கப்பட்டு வரும் கப்பலைத் தேடிப் பயணிக்கிறது. அதை அவர்கள் எப்படி அடைந்தார்கள்? எப்படித் தப்பிக்கிறார்கள்? என்பது 2012-ல்.

படத்தில் ஏகப்பட்ட சுவாரசியங்கள். இயற்கை ஏற்படுத்தும் பேரழிவுகளை செயற்கையான கிராஃபிக்ஸில் மிரளும் விதத்தில் தந்திருக்கிறார்கள். செயற்கையான கட்டடங்கள், வாகனங்களின் பேரழிவுகள் கண்ணைவிட்டு இன்னும் அகலவில்லை. படத்தில் எல்லாமே பிரம்மாண்டம்தான். இந்த அழிவுகளைத் தரையில் இருந்து பார்ப்பது அத்தனை வியப்பைத் தராது என்பதாலோ என்னவோ, கேமரா பாதிநேரம் வானிலேயே பயணிக்கிறது. அதற்குத் தோதுவாக பயணங்களும் விமானத்தில் அமைவது பொருந்திப்போகிறது.

படம்: www.sbs.com.au/films/movie/4432/2012

முதற்பாதியின் அத்தனை பரபரப்பு இரண்டாம் பாதியில் இல்லை என்பது ஒரு குறை. ஆனால் இரண்டாம் பாதியில் மனித இனம், அன்பு, புதுவாழ்வு, இதையெல்லாம் பற்றிப் பேசி உணர்ச்சிக் கடலில் ஆழ்த்திவிடுகிறார்கள். உலகம் கடலில் ஆழ்வதும் சேர்ந்தே நடக்கிறது.

இப்படத்தைப் பற்றி எழுத இன்னும் அதிக இடம் தேவைப்படும் என்பதால் இத்தோடு முடிக்கிறேன்.

தமிழ் டப்பிங்:
இதைப் பற்றி நான் சொல்லியே தீர வேண்டும். இத்தனை அழகாக, எத்துணைப் பொருத்தமான மொழிமாற்றம். மிகச்சரியாக சில இடங்களில் ஆங்கிலத்தை அப்படியே பயன்படுத்தி, சரியான வார்த்தைகள்! அப்பப்பா! தமிழில் மாற்றிய குழுவிற்கு ஒரு சபாஷ்.

இப்படத்தைப் பற்றி மேலும் எனது உளறல்கள் வரும் நாட்களில்....
இப்படத்தின் ஆங்கில வெர்ஷனைப் பற்றி நம்ம 'ஹாலிவுட் பாலா' எழுதிவிட்டார் - இங்கிட்டு போயி படிச்சிக்குங்க.

சரி, LIC-ல இப்போ எந்த பாலிசி ரொம்ப நல்லா போய்கிட்டு இருக்கு? :)

Friday, November 13, 2009

ஊர்சுற்றி வலையுலகம் சுற்ற வந்த கதை

இந்த கொடுமையை நீங்கள் ஒருமாதத்திற்கு முன்பே படித்திருக்க வேண்டியது. தள்ளிப்போனாலும், விடுவதாக இல்லை. வலைபதிவதில் நீண்ட நெடிய அனுபவம் உள்ள பதிவர் கேவிஆர் அவர்கள் ஒருமாதத்திற்கு முன்பே அழைப்பு விடுத்திருந்தார். இதோ சொல்கிறேன், இதுவரையிலான எனது வலை வரலாற்றை. :)

சென்னை வந்த புதிது:
வேலை நிமித்தம் 2006 இறுதியில் சென்னைக்கு வந்தேன். அது சென்னைக்கான எனது இரண்டாவது பயணம். ராயபுரத்தில், அடையாறில் பின்பு 2006 டிசம்பர் இறுதியில் வேளச்சேரியில் (இன்றுவரை இங்குதான்).

ப்ராஜெக்டும் பென்ஞ்சும்:
ஒரு மாதம் கூட்டத்தோடு கூட்டமாக ட்ரெயினிங், பின்பு கூறு போட்டு விற்பதுபோல் வேறுவேறு அலுவலகங்களுக்குப் பிரிந்துசென்றோம்.
பொட்டி தட்டுபவர்கள் எல்லோரும் கடந்துவந்திருக்கும் 'வெட்டி'ப்பொழுதுகளை(பென்ஞ்) அனுபவித்துக்கொண்டிருந்த காலம். எங்கள் மேனேஜர், பல எம்.பி. அளவுள்ள பி.டி.எஃப். கோப்புகளைக் கொடுத்து 'இத நல்லா படிங்க, நம்ம ப்ராஜக்ட்ல பயன்படப்போகிற எல்லா தகவல்களும் இருக்கு' இப்படி சொல்லிவிட்டுப் போக - பொறுப்பா உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தேன். எவ்ளோ நேரம்தான் படிக்கிறது?! சும்மா கூகிளிக்கொண்டிருப்போம். அப்போதுதான் 'நம்ம ஊர் பேர' குடுத்தா கூகிள் என்ன கொடுக்கும்' என்று தேடினேன். இன்னொரு பிரபலமான ஊர் பற்றிய தகவல்கள் கிடைத்தன. பக்கத்திலிருந்த இன்னொரு 'பென்ஞ்சி'(!)லிருந்து ஒரு குரல் - 'மக்களே, எங்க ஊர குடு - மருங்கூர்'.

மாற்றியமைத்த மருங்கூர்:
2007 ஜனவரி. கூகிளின் விடைப்பக்கங்களில் முதலில் வந்தது 'மா.சிவகுமார்' அவர்களின் வலைப்பூ. மருங்கூர் - அவரது சொந்த ஊர். மருங்கூரைத் தேடிய நண்பர், வலைப்பூவிலிருந்த மின்னஞ்சல் முகவரிமூலம் அவரைத் தொடர்புகொண்டார் - நானோ, தேன்கூட்டைத் திறந்தேன். அப்படியே தமிழ்மணமும் தெரியவந்தது. வெட்டியாக உட்கார்ந்திருந்த காலங்களில் அலுவலகம் வந்ததும் முதலில் திறப்பது 'தேன்கூடு'தான். அப்போது நான் அதிகம் படித்தவர்கள் ஓசைசெல்லா - தமிழச்சி - மா.சிவகுமார் - லக்கிலுக் - செந்தழல் ரவி - 'விடாது கருப்பு'(என்ன கொடுமைங்க - எல்லாப் பிரச்சினைகளும் தெரியவந்தபோதுதான் விடாது கருப்பை விட்டுத் தொலைத்தேன்!). வலையுலகம் தவிர இதுபற்றி விவாதிக்க எனது அறையிலும் அப்போது சரியான ஆட்கள் இருந்ததால், கொஞ்ச நாட்களிலேயே தீவிர வாசகனாகி இருந்தேன். அப்போதுதான் மா.சிவகுமார் அவர்களின் அறிவுரையில் வலைப்பூவை உருவாக்கினேன், மருங்கூருக்கு நன்றி தெரிவித்து எனது முதல் இடுகையையும் இட்டேன். 2007 ல் (ஜனவரி-பிப்ரவரி) 4 இடுகைகள் - அலுவலகத்திலிருந்தே.

அலுவலகம் வேலைக்கே!:
இந்த நிலையில் - எனது நெருங்கிய நண்பன் (என் மானசீக குரு) - அலுவலக பொருட்களை நமது சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது தவறில்லையா? என்று ஒரு கேள்வியை வீசியெறிந்தான். அத்தோடு நிறுத்தினேன் எனது முதல் இன்னிங்ஸை. 2008, மே-ல் எனக்கென கணிணி வாங்கி - பிஎஸ்என்எல் இணைய இணைப்பையும் பெற்றபின்னர்தான் அடுத்த இன்னிங்ஸ். இன்றும், ஏதேனும் மிக முக்கியமான விசயம்(தலைபோகிற காரியம்) அன்றி அலுவலகத்தின் பொருட்களை சொந்த உபயோகத்திற்காகப் பயன்படுத்துவது இல்லை.

பதிவர் சந்திப்புகள்:
2008-ல் பதிவர் சந்திப்புகள் நடந்தபோது 'நாமளும்தான் பதிவராகிட்டோமே போனாத்தான் என்ன' (இரண்டு மூன்று இடுகைகள்தான் இட்டிருந்தேன்) என்ற நினைப்பில் சென்று என்னையும் அறிமுகப்படுத்திக்கொண்டேன். இன்றுவரை எதையோ எழுதிக் கிழித்துக்கொண்டிருக்கிறேன்.

ஏதோ கொஞ்சம் பேசப்பட்டவை:
நான் எழுதி, எனக்கே பிடித்த இடுகை 'காதலின் முதல் SMS (உண்மையில் கதை)'. பாதி உண்மையும் கலந்திருப்பதால் நண்பர்கள் மத்தியில் டரியலாக்கிய கதை. அப்புறம் பரவலாக (?!) பேசப்பட்டது 'வலைப்பதிவர்கள் பிழையின்றி எழுத - சந்திப்பிழைகள் ஒரு அறிமுகம்' என்று தலைப்பிலேயே பிழையோடு வந்த இடுகை.

அறிவியலில் எனக்கு அதிக ஆர்வம் என்பதால் 'அறிவியல்பூ' என்ற பெயரில் இன்னொரு வலைப்பூவையும் ஆரம்பித்து அவ்வப்போது எழுதிவருகிறேன்.

மென்தமிழும் என் அனுபவமும்:
தொடக்கத்தில் ஃபொனடிக் முறையிலான சில ஆன்லைன் எடிட்டர்களைப் பயன்படுத்தி வந்தேன். தமிழ்99 எனக்கு அறிமுகமான உடனேயே அதில் தட்டச்சப் பழகிக்கொண்டேன் (நேர மிச்சம் அதிகம்). கணிணி சொந்தமாக வாங்கிய பிறகு, அதிலேயே இன்ஸ்டால் செய்கிறமாதிரி ஏதாவது கிடைக்குமா என்று தேடி, ஈகலப்பை(தமிழ்99) இன்ஸ்டால் செய்துகொண்டேன். ஒரு பதிவர் சந்திப்பில், அண்ணன் 'தல' பாலபாரதி சொல்பேச்சைக் கேட்டு NHM Writer இன்ஸ்டால் செய்து கொண்டேன். இதில் ஈகலப்பையில் இருந்த சில தட்டச்சும் சிக்கல்கள், மொழிமாற்றும் போது ஏற்பட்ட பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் இருக்கிறது - இது எனக்குப் பிடித்திருக்கிறது. நான் பரிந்துரைப்பது NHM Writer -ம் தமிழ்99-ம் தான்.

நான் என்ன எழுதினாலும் வந்து படித்து, என்னை ஊக்கப்படுத்தும் உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகளை இந்நேரம் சமர்ப்பிக்கிறேன்.

இந்த தொடரை இழுத்துச் செல்ல அழைப்பது,
3) ஜெய்ஹிந்த்புரம் பீர் முஹம்மது.
விதிமுறைகள் இங்கே.
வாங்க மக்கள்ஸ், வந்து உங்க கதையையும் சொல்லுங்க.

Tuesday, November 3, 2009

கண்டேன்(சன்) காதலை

சன் டீவியின் கடும் தொந்தரவிற்குப்(!) பிறகு, பல கல் தூரம் பிரயாணம் செய்து கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்தப் படத்தைப் பார்த்தேன். :)

உங்களுக்கு நான் சொல்லித் தெரியவேண்டியது இல்லை 'கண்டேன் காதலை' என்கிற தமிழ்ப் படம் 'ஜப் வி மெட்' (ஹிந்தி) படத்தின் மறுபதிப்பு என்று. ''மகிழ்ச்சியாக இருக்கும் கதாநாயகி - துயரத்தில் நாயகன் - நாயகியைப் பார்த்து மனமாற்றம் - நாயகன் வெற்றி - நாயகிக்கு ஒரு சோகம் - நாயகன் உதவி - இருவருக்கும் காதல்'' இப்படி ஏற்கெனவே இதில் பல பரிணாமங்களை நாம் தமிழ்சினிமாவில் பார்த்துவிட்டோம் என நினைக்கிறேன்(ஒரே படத்தில் இல்லையென்றாலும் வேறுவேறு படங்களில்). மேற்கூறிய சங்கிலி ஒன்றாக வருவது இந்தப் படத்தில்.


திரைக்கதை, இயக்கம் - கண்ணன்:
ஹிந்திப் படத்தின் திரைக்கதையை (பெரும்பாலும்) அப்படியே வெளிக்கொண்டுவந்திருக்கிறார் கண்ணன், அதனால் கதைக்கு எந்தக் குந்தகமும் இல்லை. நமக்கு மிகவும் பழக்கப்பட்ட ரயில்பயணம், அதில் ஓர் பெண்ணுடன் சந்திப்பு என்று ஆரம்பித்து பயணத்தை இனிதே தொடர்கிறது கதை. நாயகன் சோகமே வடிவாக இருக்க நாயகியோ சின்னக்குழந்தாக துள்ளிக்குதிக்கிற ஒரு பெண்.


முதல்பாதியில் சோகம் நிரம்பித் ததும்பும் அந்தக் கதாப்பாத்திரத்தோடு நம்மையும் ஒன்ற வைத்துவிடுகிறார் பரத். தமன்னா 'கரீனா கபூரின்' துள்ளலைக் கொண்டுவர மெனக்கெட்டு கொஞ்சம் வெற்றியும் பெற்றிருக்கிறார் - பரவாயில்லை. தமன்னாவின் சில முகபாவங்கள் சற்று செயற்கையாய்த் தெரிகின்றன, மற்றபடி கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். இரண்டாம் பாதியில், பரத்திடம் இருந்திருக்க வேண்டிய அந்த சந்தோஷம், புதுத் தெம்பு ஏனோ கொஞ்சம் குறைந்திருப்பது போல ஒரு உணர்வு.

திருச்சிக்கான பயணம், திருச்சியிலிருந்து தேனிக்கான பயணம் இவற்றை இன்னும் கொஞ்சம் யதார்த்தமாக படமாக்கியிருக்கலாம். திடீர்த் தடீரென்று கூட்டமாக ஆடுவதும் எங்கெங்கோ போவதும் ஏனென்று தெரியவில்லை! குறும்புப் பெண் தமன்னாவிடம் கற்றுக்கொண்ட மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதை வெளிக்காட்டுவதில் இரண்டாம் பாதியில் பரத் சற்றே சறுக்கியிருக்கிறார். வசனங்கள் கொஞ்சம் உணர்வுப்பூர்வமாக இருந்திருந்தால் சற்றே தேவலை. 'சத்யம்' போல சரிந்துகிடக்கும் ஒரு நிறுவனத்தை மீட்கவேண்டிய நேரத்தில், பேசும் பேச்சுபோல அது இல்லை!

திரைக்கதையில் முக்கியமான மாற்றம் 'சந்தானம்' என்கிற கதாப்பாத்திரம். இதற்காக இயக்குனருக்கு ஒரு சபாஷ். சந்தானம் மட்டும் இல்லையென்றால் சன் டீவி இந்தப் படத்தை நிச்சயமாய்ச் சீண்டியிருக்காது என்பது என் எண்ணம்.


படம் முழுக்க வண்ணங்களை வரவி விட்டிருக்கிறார்கள். உடை, பின்னணி, இடங்கள் எல்லாமே வண்ணங்களால் நிறைந்திருக்கின்றன - அழகு. ஹிந்திப் படத்தைக் காப்பியடித்திருப்பது தமன்னாவின் உடைகளிலும், பரத்-தமன்னா இருவரும் தனிமையில் இருக்கும் ஒருசில காட்சிகளிலும் பளிச்செனத் தெரிகிறது. அதுவும் படத்திற்கு அழகே!

நான் என்னதான் விமர்சனம் எழுதினாலும் சன் டீவியில் இது முதலிடம் பெறுவது திண்ணம்! ஜப் வி மெட்(மன்னிக்க) கண்டேன் காதலை - பார்க்கலாமுங்கோ!