Tuesday, November 3, 2009

கண்டேன்(சன்) காதலை

சன் டீவியின் கடும் தொந்தரவிற்குப்(!) பிறகு, பல கல் தூரம் பிரயாணம் செய்து கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்தப் படத்தைப் பார்த்தேன். :)

உங்களுக்கு நான் சொல்லித் தெரியவேண்டியது இல்லை 'கண்டேன் காதலை' என்கிற தமிழ்ப் படம் 'ஜப் வி மெட்' (ஹிந்தி) படத்தின் மறுபதிப்பு என்று. ''மகிழ்ச்சியாக இருக்கும் கதாநாயகி - துயரத்தில் நாயகன் - நாயகியைப் பார்த்து மனமாற்றம் - நாயகன் வெற்றி - நாயகிக்கு ஒரு சோகம் - நாயகன் உதவி - இருவருக்கும் காதல்'' இப்படி ஏற்கெனவே இதில் பல பரிணாமங்களை நாம் தமிழ்சினிமாவில் பார்த்துவிட்டோம் என நினைக்கிறேன்(ஒரே படத்தில் இல்லையென்றாலும் வேறுவேறு படங்களில்). மேற்கூறிய சங்கிலி ஒன்றாக வருவது இந்தப் படத்தில்.


திரைக்கதை, இயக்கம் - கண்ணன்:
ஹிந்திப் படத்தின் திரைக்கதையை (பெரும்பாலும்) அப்படியே வெளிக்கொண்டுவந்திருக்கிறார் கண்ணன், அதனால் கதைக்கு எந்தக் குந்தகமும் இல்லை. நமக்கு மிகவும் பழக்கப்பட்ட ரயில்பயணம், அதில் ஓர் பெண்ணுடன் சந்திப்பு என்று ஆரம்பித்து பயணத்தை இனிதே தொடர்கிறது கதை. நாயகன் சோகமே வடிவாக இருக்க நாயகியோ சின்னக்குழந்தாக துள்ளிக்குதிக்கிற ஒரு பெண்.


முதல்பாதியில் சோகம் நிரம்பித் ததும்பும் அந்தக் கதாப்பாத்திரத்தோடு நம்மையும் ஒன்ற வைத்துவிடுகிறார் பரத். தமன்னா 'கரீனா கபூரின்' துள்ளலைக் கொண்டுவர மெனக்கெட்டு கொஞ்சம் வெற்றியும் பெற்றிருக்கிறார் - பரவாயில்லை. தமன்னாவின் சில முகபாவங்கள் சற்று செயற்கையாய்த் தெரிகின்றன, மற்றபடி கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். இரண்டாம் பாதியில், பரத்திடம் இருந்திருக்க வேண்டிய அந்த சந்தோஷம், புதுத் தெம்பு ஏனோ கொஞ்சம் குறைந்திருப்பது போல ஒரு உணர்வு.

திருச்சிக்கான பயணம், திருச்சியிலிருந்து தேனிக்கான பயணம் இவற்றை இன்னும் கொஞ்சம் யதார்த்தமாக படமாக்கியிருக்கலாம். திடீர்த் தடீரென்று கூட்டமாக ஆடுவதும் எங்கெங்கோ போவதும் ஏனென்று தெரியவில்லை! குறும்புப் பெண் தமன்னாவிடம் கற்றுக்கொண்ட மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதை வெளிக்காட்டுவதில் இரண்டாம் பாதியில் பரத் சற்றே சறுக்கியிருக்கிறார். வசனங்கள் கொஞ்சம் உணர்வுப்பூர்வமாக இருந்திருந்தால் சற்றே தேவலை. 'சத்யம்' போல சரிந்துகிடக்கும் ஒரு நிறுவனத்தை மீட்கவேண்டிய நேரத்தில், பேசும் பேச்சுபோல அது இல்லை!

திரைக்கதையில் முக்கியமான மாற்றம் 'சந்தானம்' என்கிற கதாப்பாத்திரம். இதற்காக இயக்குனருக்கு ஒரு சபாஷ். சந்தானம் மட்டும் இல்லையென்றால் சன் டீவி இந்தப் படத்தை நிச்சயமாய்ச் சீண்டியிருக்காது என்பது என் எண்ணம்.


படம் முழுக்க வண்ணங்களை வரவி விட்டிருக்கிறார்கள். உடை, பின்னணி, இடங்கள் எல்லாமே வண்ணங்களால் நிறைந்திருக்கின்றன - அழகு. ஹிந்திப் படத்தைக் காப்பியடித்திருப்பது தமன்னாவின் உடைகளிலும், பரத்-தமன்னா இருவரும் தனிமையில் இருக்கும் ஒருசில காட்சிகளிலும் பளிச்செனத் தெரிகிறது. அதுவும் படத்திற்கு அழகே!

நான் என்னதான் விமர்சனம் எழுதினாலும் சன் டீவியில் இது முதலிடம் பெறுவது திண்ணம்! ஜப் வி மெட்(மன்னிக்க) கண்டேன் காதலை - பார்க்கலாமுங்கோ!

Sunday, November 1, 2009

சிறு இடைவேளைக்குப் பிறகு

அவ்வப்போது சிறிய இடைவெளி விடுவதுதான் என்றாலும் என்னைப் பொறுத்தவரை கடந்தமாத இடைவெளி, சற்று அனுபவம் நிறைந்தது. எழுதுவது என்பது 'பசி', 'தாகம்' மாதிரி என்பார் வைரமுத்து (சிகரங்களை நோக்கி புத்தகத்தில்). நம்மில் அதிகம்பேருக்குப் பரிட்சயமான நிலாரசிகன் - ''எழுத்து மூளையில் தோன்றி, கையில் வரும்போதே எழுதிடணும்ங்க'' என்றார் (செப்டெம்பர் மாத மழையோடு கூடிய பதிவர் சந்திப்பில்). அந்தமாதிரி பசியோ தாகமோ எதுவும் தோணவில்லையா அல்லது வேலையிலோ குழப்பத்திலோ என்னை நானே மூழ்கவிட்டு விட்டேனா என்றும் தெரியவில்லை. வலையில் எழுதுவது என்பதையும் தாண்டி வழக்கமாக நான் செய்துவந்த உருப்படியான ஒருசில விசயங்களும் மிஸ்ஸிங். எங்கு தவறு நடந்தது என்பதைக் கண்டுபிடித்து, அதைச் சரிசெய்துவிட்டு இப்போது 'மனதில் புத்துணர்ச்சியோடு மீண்டும் (மென்டலி ரிஃப்ரெஷ்ட்)'.

இந்த நேரத்தில் என் மௌனத்தைப் புரிந்துகொண்ட என் நண்பர்களுக்கு என் நன்றிகள். அவ்வப்போது ட்விட்டியது அங்கு கற்றுக்கொண்ட சில விசயங்கள் -மற்றபடி புதிதாக எதுவும் கற்றுக்கொள்ளவில்லை என்பது, பல நாட்களைத் தொலைத்துவிட்ட உணர்வைக் கொடுக்கிறது.

இந்த நேரத்திலும் நான் செய்த உருப்படியான சில விசயங்கள்,

வைரமுத்து அவர்கள் எழுதிய 'சிகரங்களை நோக்கி' என்ற கவிதை நடையிலான கதையைப் படித்தேன். என்னை மிகவும் கவர்ந்துவிட்டது வைரமுத்துவின் வார்த்தைப் பிரயோகம். ஒவ்வொரு பொருட்களையும் வர்ணிக்கும் வார்த்தைகளும் விவேகமான விவாதங்களும் நிறைந்தது. படித்து ரசிக்க ஒரு இனிமையான புத்தகம். ஒரே நாளில் மூன்று முறை படித்து இன்புற்றேன். சில பக்கங்கள் எத்தனை முறை வாசித்தாலும் சலிக்கவில்லை.

வானத்தில் வியாழன் மற்றும் சில கோள்களின் இடங்கள்,
நிலவைப் பொறுத்து அவற்றின் தூரம் இவற்றை
சிலநாட்களுக்குக் கவனித்தேன். உதவிய சுட்டி இங்கே.
ஆர்வமூட்டியது, கலிலியோ வியாழனின் நான்கு
துணைக்கோள்களைக் கண்டுபிடித்த 400-ம் ஆண்டு
கொண்டாட்ட நிகழ்வுகள். - "கலிலீயன் இரவுகள்" என்ற
இந்த வானியல் கொண்டாட்டத்தில் இந்தியாவில்
நடந்த நிகழ்வுகளுக்கான சுட்டி இங்கே.

இப்போதைக்கு முதல் வேலை,
படிக்காமல் கூகிள் ரீடரில் தேங்கிக்கிடக்கும் இடுகைகளைப்
படித்து பின்னூட்டமிடவேண்டும். :)

Wednesday, October 7, 2009

2012 ல் உலகம் அழியுமா - லார்ஜ் ஹாட்ரான் கொலைடர் என்ன சொல்கிறது

உலகம் 2012ல் அழிவதற்கான ஏழு காரணங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.
இந்த விசயம் தொடர்பாக எனது முந்தைய இடுகை 1.

முந்தைய இடுகையில் "'பைபிள்' என்ன கூறுகிறது?" என்று எனக்குத் தெரிந்த விசயங்களைக் கூறியிருந்தேன். இந்த இடுகை 'CERN" எனப்படும் அமைப்பினால், கூடிய விரைவில் மீண்டும் பயன்பாட்டிற்கு வரவிருக்கும் உலகின் மிகப்பெரிய அணுக்கருத் துகள் ஆய்வுக் கருவியான LHC (Lorge Hadron Collider - லார்ஜ் ஹாட்ரான் கொலைடர்) பற்றியது.

LHC ன்னா என்ன?:
நமக்கு அணுக்களைப் பற்றித் தெரியும். அணுவைச் சுற்றி வருவது எலக்ட்ரான். அணுக்களின் கருவில் உள்ள துகள்கள் 'நியூட்ரான் மற்றும் புரோட்டான்'. இந்த அணுக்கருவில் உள்ள துகள்கள் 'ஹாட்ரான்கள்' என்று அழைக்கப்படுகின்றன. நம்மூர் படங்களில் காட்டப்படும் கோழிச்சண்டை ஆட்டுச்சண்டைபோல இந்த துகள்களை நேருக்கு நேர் மோதவிட்டு ஆராய்ச்சி செய்வதுதான் இந்த மிஷினின் வேலை.

LHC க்கும் உலகம் அழியறதுக்கும் என்ன சம்பந்தம்?:
"இந்த மிஷின் வேலைசெய்ய ஆரம்பித்து துகள்கள் மோதும்போது சிறிய சிறிய கருந்துளைகள் உருவாகும். கருந்துளைகள் அதிக ஈர்ப்பு ஆற்றல் கொண்டவை. எனவே அவை சுற்றியுள்ள பொருட்களை ஈர்த்து பெரிதாக வளர்ந்துவிடும். ஆராய்ச்சி பண்ணுவதற்காக உள்ள இந்த மிஷினையேகூட அனகோண்டா பாம்புபோல விழுங்கிவிடும். இன்னும் சக்தியுள்ள கருந்துளையாக மாறி 'ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா' என ஒவ்வொரு கண்டமாக விழுங்கி பூமியையே ஏப்பம் விட்டுவிடும். கடைசியில் பூமி இருந்த இடத்தில் ஒரு கால்பந்து அளவிலான 'கரும்பொருள்' மட்டுமே இருக்கும்" என்கிறார்கள் சிலர் (அடங்கொண்ணியாஆஆஆ!).

கரும்பொருள் என்றால் என்ன? - சூரியன் எப்படி நம் கண்ணுக்குத் தெரிந்து மிகப் பெரிய சக்தியாக இருக்கிறதோ அதைவிட அதிகமாக கண்ணுக்குத் தெரியாத சக்திகள் பிரபஞ்சத்தில் நிறைய இருக்கின்றன. இவற்றின் ஈர்ப்பு சக்தி மிக அதிகமாக இருப்பதால் தன்னைச் சுற்றியுள்ள எல்லா பொருட்களையும் தன்னுள் ஈர்த்து வைத்துக்கொள்ளும். ஒளிகூட இதிலிருந்து வெளிவருவது கடினம்.

LHC-னால் கருந்துளைகள் உருவாகுமா?
"ஐன்ஸ்டினின் சார்பியல் தத்துவத்தின்படி நிர்மாணிக்கப்பட்ட, 'ஈர்ப்பு விசை'யின் பண்புகளின்படி இத்தகைய சிறிய அளவிலான கருந்துளைகள் LHC ல் உருவாக சாத்தியமில்லை" - இது CERN விஞ்ஞானிகளின் வாதம்.

ஆனாலும் சில தியரிகளின்(Theory) படி சிறிய அளவிலான கருந்துளைகள் உருவாகலாம். ஆனால் சில தியரிகள் இத்தகைய கருந்துளைகள் உடனடியாக அழிந்துவிடும் என்றும் கூறுகின்றன.

இதற்கு முன்பு இதுபோன்று துகள் மோதல்கள் நடந்துள்ளனவா?:
ஆம். LHC உருவாவதற்கு முன்பு சிறிய அளவிலான கருவி LEP 1989-ல் இருந்து 2000-ம் வரை பயன்பாட்டில் இருந்தது. இது பயன்பாட்டில் இருந்தபோது இந்த துகள் மோதல்கள் பலமுறை நடந்துள்ளன. அந்த மோதல்கள் மூலம் எந்த விதமான ஆபத்துகளும் உருவாகவில்லை.

ஆனால் அவற்றின் ஆற்றல் அளவுகள் கொஞ்சம் கம்மி. இப்போது தயார் நிலையில் உள்ள LHC-ன் செயல்பாட்டு ஆற்றல் மிக அதிகம்.

எவ்வளவு அளவு அதிக ஆற்றல்?:
பழைய LEP திட்டத்தில் 100 GeV பயன்படுத்தினார்கள். லேட்டஸ்ட் LHC-ல் அதிகபட்சமாக 7 TeV ஆற்றலில் துகள்களை முடுக்க திட்டமிட்டுள்ளார்கள். இது 70மடங்கு அதிகம்.


இத்தனை மடங்கு அதிக ஆற்றல் இருந்தாலும் 'கருந்துகள்' உருவாவது மற்ற கதிர்வீச்சுகள் உருவாவது, அதனால் பாதிப்பு ஏற்படுவது இது எதுவும் நடந்துவிடாது என்று உறுதியளிக்கின்றார்கள் விஞ்ஞானிகள்.

மீப்பெரு அணுக்கருத்துகள் முடுக்கி (LHC) & ஆன்டி மேட்டர் (Antimatter) பற்றிய எனது மற்றொரு இடுகை, ''அறிவியல் பூ''(எனது இன்னுமொரு வலைப்பூ) -ல் வெளியானது இங்கே.

LHC பற்றி படிக்க:

லார்ஜ் ஹாட்ரான் கொலைடரின் - பாதுகாப்பு பற்றி:

துகள் மோதலின் வரலாறு CERN-ல்:

1eV ன்னா - ஒரு தனித்த எலக்ட்ரான் ஒரு வோல்ட் மின்னழுத்தத்தில் பெறக்கூடிய இயக்க ஆற்றல்.
1eV = 1.602 X 10^-19 joules.
1GeV=10^9eV
1TeV=10^12eV

Monday, October 5, 2009

கொலுவுக்குப் போய் பர்ஸ் தொலைத்த கதை

பீட்டர் - ரொம்ப இங்கிலிபீஸ்ல கதைக்கிறவன்.
எப்.எம் ரேடியோ - ஒயாம பேசுறவ (ன்).

இப்படி கல்லூரியில் படிக்கும்போது எத்தனையோ குறிச்சொற்களை நீங்கள் கடந்து வந்திருப்பீர்கள்/பார்த்திருப்பீர்கள். அப்படி எங்களுக்கே எங்களுக்குன்னு ஒரு குறித்தொடர் உருவாகிய அனுபவம் இது.



கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் நண்பர்கள் வீட்டில் ஏதாவது விசேசம் என்றால் மொத்தமாகக் கிளம்பி போவது எங்களுடைய வழக்கம். இது எங்கள் வகுப்புத் தோழி ஒருத்தியின் வீட்டு கொலு & நவராத்திரி -க்கு போகிற அளவிற்கு வளர்ந்தது(!). நாங்கள் ஆண்/பெண் என்று ஒரு கும்பலே அவர்கள் வீட்டிற்கு அன்று சென்றிருந்தோம். நவராத்திரியும் அதுவுமாக தூங்காமல் இருக்க வேண்டுமாமே! எங்கள் தோழியின் சிறுவயது புகைப்பட ஆல்பம், அவளது பொம்மை கலெக்சன் இப்படி எல்லாவற்றையும் பார்வையிட்ட பின், முன்னிரவு நேரத்தில் நடந்த பாட்டுப்போட்டி முடிந்து அப்போது நள்ளிரவைத் தாண்டியிருந்தது. கொஞ்ச பேர் வட்டமாக அமர்ந்து சீட்டு ஆடிக் கொண்டிருந்தோம். மற்றவர்கள் சிலபல பதார்த்தங்களைப் பதம்பார்த்துக்கொண்டு அரட்டையடித்துக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

நண்பன் ஒருவன் திடீரென்று 'டேய் என் பர்ஸை காணோம்டா, போய் பார்த்துட்டு வந்துடறேன்' என்று சொல்லிவிட்டு மாடியில் பையன்களுக்கு என்று ஒதுக்கியிருந்த அறைக்கு கிளம்பிப்போனான். திரும்பி வந்து அமைதியாக அமர்ந்துகொண்டான். ஒருசிலபேர் 'பர்ஸ் கிடைச்சுதாடா?' என்று கேட்க 'ஆங். கிடைச்சுது' என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே சொன்னான். இரண்டு நிமிடம் கழித்து அவன் பாக்கெட்டைத் தற்செயலாக பார்த்தபோது அங்கே பர்ஸ் இல்லை. 'டேய் பர்ஸை பேக்ல வச்சிட்டு வந்திட்டியா?' என்றேன். அப்போது அவன் என் காதுபக்கம் வந்து 'பர்ஸெல்லாம் தொலைக்கலடா, ஒன்னுக்கு முட்டிகிட்டு வந்திச்சி. புள்ளங்கல்லாம் இருக்கு. அதான் இப்படி சொல்லிட்டு கிளம்பிட்டேன்' என்றான். அவ்வளவுதான் நானும் 'பர்ஸை தொலைச்சிட்டேன்'! :)

நான் திரும்பி வந்ததும் இன்னொருத்தனும் இதேமாதிரி விசாரிக்க, அவனும் பர்ஸை தொலைக்கவேண்டி வந்தது. சற்று நேரத்தில் பசங்க கூட்டமாக 'பர்ஸை காணோம்டா' என்று சொல்லிக்கொண்டு கிளம்பினார்கள். உட்கார்ந்திருந்த பசங்க முகத்தில் சின்ன சிரிப்பு இழையோடியது. பொண்ணுங்களுக்கு 'இவனுங்க ஏதோ பண்றானுங்க ஆனா என்னான்னு புரியல' - சிலபேர் புரிந்திருந்தார்கள்.

இந்த அக்கப்போரெல்லாம் ஓய்ஞ்சு பத்து இருபது நிமிடம் ஆகியிருக்கும். முதல்ல 'பர்ஸை தொலைச்ச' நண்பன் எந்திரிச்சு, பசங்க நாலைஞ்சு பேருக்கு மட்டும் கேட்கும்படி இன்னொரு நண்பன்கிட்ட 'நண்பா பேக்ஐ எங்க வச்சேன்னு தெரியலியேடா, போய் தேடிப்பார்த்துட்டு வந்துடறேன்' னுட்டு அவசரமா கிளம்பி போனான். :)

Sunday, October 4, 2009

நானும் காமன் பிளாக்கர் - என்னையும் ஆட்டையில சேர்த்துக்கங்க

நானும் உன்னைப்போல் ஒருவன் படம் பார்த்துட்டேனுங்க!

ட்விட்டரில் 'அச்சம்தவிர்' லோகு சொன்ன இந்த வார்த்தைக்காக இந்த இடுகை. :)

'காமன் மேன்' என்று தன்னை அடையாளப்படுத்தும் அந்த கதாப்பாத்திரம் 2 கிலோ தக்காளி வாங்குகிறார். அப்படியென்றால் வீட்டில் 'குளிர்பதனப் பெட்டி' (ரெஃப்ரிஜ்ரிரேட்டர்) இருக்கிறது. அலுவலகம் முடிந்து வீட்டுக்கு 7 மணிக்குள் வந்துவிடுவதாக சொல்கிறார் [நிச்சயமாக மென்பொருள் துறையில் வேலையில்லை :) ] சரி, ஒரு நடுத்தரக் குடும்பம்.

தகவல் தொடர்புக்காக அவர் பயன்படுத்தும் கருவிகளின் மதிப்பு - கூட்டி கழித்துப் பார்த்தால் சில லகரங்களைத் தொடும். அப்புறம் 5 கிலோ வெடிமருந்து - அதன் மார்க்கெட் விலையென்ன?. கடைசியில் ஒரு ஜீப் வெடிக்கப்படுகிறது. அது யாரோடது? சரி, இதெல்லாம் அவரோட செலவில் வாங்கியது என்றாலும், வீட்டில மனைவிக்குத் தெரியாமல் இதெல்லாம் எப்படி ஒரு காமன் மேனுக்கு சாத்தியம்? அந்த கதாப்பாத்திரம் எங்கேனும் திருடினாரா? ஆனால் காந்தி பற்றி பேச தனக்கு உரிமை இருப்பது போல காட்டிக்கொள்கிறாரே?

சீட்டுக் குலுக்கிப்போட்டு நாலுபேரையும் தேர்ந்தெடுத்ததாகச் சொன்னார். அப்படியென்றால் இன்னும் சீட்டுக் குலுக்கிப்போடப் போகிறாரா? 4 பேரும் இறந்தது "தப்பிக்க முயன்றதால்" என்றுதான் ஊடகங்கள் மூலமாக தகவல் வெளியாகிறது. இதைப் பார்த்து மற்ற தீவிரவாதிகள் தாக்காமல் விட்டுவிடுவார்களா? கதாப்பாத்திரத்தின் நோக்கம் என்ன - 'தீவிரவாதிகளுக்கு ஒரு அச்சம் இருந்தால் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடமாட்டார்கள்' என்பதுதானே! அதன் நோக்கம் படத்தில் எந்த வகையில் நிறைவேறியிருக்கிறது? தீவிரவாதிகளுக்கு இது எவ்வாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது? ஒண்ணையும் காணோம்.

அப்புறம் எல்லாம் முடிந்ததும், தனது உபகரணங்களை அழித்துவிடுகிறது கதாப்பாத்திரம். அப்படியன்றால் நான்கு மாதம் கஷ்டப்பட்டு இவர் எதைச் சாதித்தார்? அவரது கருத்தை மக்களுக்கு அல்லது அரசு எந்திரத்திற்கு கொண்டு சேர்த்தாரா? (ஒருசில காக்கிச் சட்டைகளைத் தவிர!).

எல்லாத்தையும் விட்டுடுங்க. படைப்பு, படைப்பாளி, பிரதி இப்படி எல்லாத்தையும் (உன்னைப்போல் ஒருவன் படத்தைக் கூட).

இந்த காமன் மேனுக்கு என்ன வேண்டும்? 'தீவிரவாதிகளுக்கு உடனுக்குடன் தண்டனை தரப்படவேண்டும்'. ஆனால் பெரும்பாலான வலைப்பூக்களில் விவாதிக்கப்பட்டது போல, முஸ்லிம் நண்பர்களுக்கு எதிராக ('மட்டுமே' இதை இந்த இடத்தில் பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன்) இந்த காமன் மேனின் விருப்பம் திரும்பியிருப்பது - ஏற்றுக்கொள்ளக் கூடியதா? உண்மையிலேயே இதுதான் ஒரு காமன் மேனின் ஆசையாக இருக்கிறது என்றால் 'தீவிரவாதம்' என்ற பதத்திற்கு நாம்(காமன் மேன்) கொண்டுள்ள அடையாளங்கள் என்ன?

மும்பை தாக்குதலின் போது 'தீவிரவாதம் ஒழிக்கப்படவேண்டும்' என்ற குரல் ஓங்கி ஒலித்தபோது 'அதன் மூல வேர்களும் ஒழிக்கப்படவேண்டும்' என்றும் சிலர் குரல் கொடுத்தார்கள். அப்போதுதான் எனக்குத் தீவிரவாதத்தின் பல பரிணாமங்கள் விளங்கின. இதை என் சக பணியாளர்கள் மத்தியில் பகிர்ந்துகொண்டபோது என்னை ஆமோதித்தவர்கள் ஒருசிலரே! மற்ற அத்தனை பேருக்கும் 'தீவிரவாதி' என்றவுடனே 'தாடி, காஷ்மீர், அல்லா, தானியங்கி துப்பாக்கி' மட்டுமே நினைவிற்கு வந்துவிடுவது ஏன் என்று தெரியவில்லை! இவர்கள் 'காமன் மேன்' என்கிற பதத்திற்குள் வந்துவிடுகிறார்கள் எனில், ஒரு காமன் மேனுக்கு இந்த மாதிரி எண்ணம் இருப்பது, கருத்துப் பரிமாற்றத்தில் நாம் எவ்வளவு தூரம் பின்தங்கியிருக்கிறோம் என்பதைக் காட்டுகிறதா?

நோய்நாடி நோய்முதல்நாடி அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல். (948)

விளக்கம்:
குணங்குன்றிகளால் நோயைத் துணிந்து, அதன் காரணத்தையும் தெளிந்து, தீர்க்கும் வழியையும் அறிந்து, செய்வகை பிழையாமல் மருத்துவம் செய்ய வேண்டும்.

இதுதானே ஒரு காமன் மேனுக்குத் தோண வேண்டும்?

Thursday, September 17, 2009

இன்று ஒரு தகவல் - நான் எடுத்த அவரது புகைப்படம்!

கடைசியாய் மயிலாப்பூர் 'இராம கிருஷ்ண மடத்தில்' பேசும்போது பார்த்தது.

  • உங்கள் பால்ய காலத்து நினைவுகளை அசைபோடும்போது என்னவெல்லாம் மனதில் வருகிறது?
  • எத்தனை மனிதர்கள் உங்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறார்கள்?
  • நீங்கள் மிகவும் இரசித்த விசயம் எது?
  • சிறுவனாக/சிறுமியாக இருந்தபோது நீங்கள் நண்பர்களுடன் விவாதித்த சம்பவங்கள், செய்திகள் என்னென்ன?
**************

எனது சிறுவயதை நினைவு கூறும்போது முக்கியமாக நினைவுக்கு வருவது ரேடியோவும் தென்கச்சியும். நான் முதன் முதலாக ரேடியோவைக் கவனிக்க ஆரம்பித்தது, 1994-95 ஆம் வருடங்களில் - பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது.

தூத்துக்குடி வானொலி:
  • காலை 7 மணியில் இருந்து 7:15 வரை பக்திப் பாடல்கள் (இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் சமய பக்திப் பாடல்கள் ஒவ்வொன்று, நேரம் மீதமிருந்தால் ஏதேனும் ஒரு மதத்திலிருந்து இன்னும் ஒரு பாடல்).
  • 7:15 - 7:25 செய்திகள் (டெல்லி அஞ்சல்).
  • 7:25 - 7:30 'இன்று ஒரு தகவல்'.
சில நாட்களில், 7:28க்கே, இன்று ஒரு தகவல் முடிந்துவிடும். அத்தனை குறுகியதாக இருந்தாலும், மிகப்பெரும் அறிவியல், சமூக, பண்பாட்டு தகவல்களை வாரி வழங்கிய அற்புத நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் வரும் அறிவியல் தகவல்கள்தான் தொடர்ந்து கேட்கும்படி செய்தன. காலையில் காஃபியுடன் 'இன்று ஒரு தகவலை'க் கேட்பதற்காகவே 'ஆகாசவாணி'யின் செய்திகளைக் கேட்டுக்கொண்டிருந்த காலம் அது. இன்று அறிவியல் செய்திகளில் நான் அதிக ஆர்வம் காட்டுவதற்கு அடிப்படையான காரணம் இதுதான்.


'அதிஷா'விற்கு வெகு காலத்திற்கு முன்பே ஜென் கதைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் தென்கச்சி. அவரை முதல் முதலாய் நேரில் பார்த்தது சென்னை புத்தகக் கண்காட்சியில் (2007 /2008 எது என்று நினைவில் இல்லை). அதன் பிறகு கடைசியாய் மயிலாப்பூர் 'இராம கிருஷண மடத்தில்'. 4-13-2008 அன்று 'இராமகிருஷ்ண மடம் பதிப்பகத்தின்' நூறாவது ஆண்டுவிழா' விற்குப் பேச வந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்ததும், படிக்கட்டில் அவர் (இன்னொருவர் கைத்தாங்கலாக) நடந்து செல்ல, அருகிலேயே நடந்து சென்றேன் . அவரோடு ஒருசில வார்த்தைகள் பேசவேண்டும் என்று தோணினாலும் ஏதையோ யோசிக்க (இங்கே சென்னையில்தானே இருக்கப்போகிறார், பின்னொருநாள் பார்த்துக்கொள்ளலாம் - என்ற உணர்வு) பிரமித்தபடியே நின்றிருந்தேன்.

பல வருடங்கள் வானொலியில் ஒலித்த குரல், எனக்கு மிக அருகே நடந்து சென்றது - எனக்குள் இருந்த, அவரை ரசித்த அந்த சிறுவனுக்கு எப்படி ஆச்சரியமும் பரவசமும் தராமல் இருக்க முடியும்?
சென்னைக்கு வந்ததற்காக மிகவும் மகிழ்ச்சியடைந்த ஒருசில தருணங்களில் அதுவும் ஒன்று.

அவர் அந்த நிகழ்ச்சிக்கு வரவிருந்தது முன்பே தெரிந்திருக்கவில்லை. மிச்சமிருந்த கொஞ்ச நஞ்ச பேட்டரியை வைத்து, எனது கேமிராவைப் பயன்படுத்தி அன்றைக்கு எடுத்த கடைசி புகைப்படம். (அவரை கிளிக்க மட்டுமே எஞ்சியிருந்ததோ என்னவோ?)



அழியாப் புகழ் தென்கச்சியின் குரலுக்கு!

Wednesday, September 16, 2009

தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களுக்கு அஞ்சலி!

தென்கச்சி கோ.சுவாமிநாதன்


என் மனம் கொள்ளை கொண்ட, நான் சிறுவயதில் மிகவும் நேசித்த, மதித்த ஒரு மனிதனின் இறுதிநாள் இன்று. அவருக்கு எனது இதயத்தின் ஆழத்தில் இருந்து அஞ்சலி செலுத்துகிறேன்.