Wednesday, October 27, 2010

எந்திரன் 2.0 - the ROBOT is back!

கி.பி.2030:
‘ஏன்னா நான் சிந்திக்க ஆரம்பிச்சுட்டேன்’ எனச் சொல்லும் அந்த ரோபோவின் தலையைப் பார்த்தபடியே செல்லும் சிறுமி, மெதுவாக அந்த காட்சிக் கூடத்தைக் கடந்து செல்கிறாள். தூரம் அதிகரிக்க அதிகரிக்க, ரோபோ பார்வையாளர் கண்களில் இருந்து மறைகிறது(சிறுமியின் கண்களிலிருந்து கேமரா கோணம்!).

கி.பி.2011:
*தேவதர்ஷினி கையில் இருந்த பையன், ரோபோ பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறான்(உபயம் - எந்திரன் முதல் பாகத்தில் எந்திரன்1.0 கொடுத்த அட்வைஸ்).
*எந்திரன் 1.0 வைத் தயாரித்த வசீகரனுக்கும் சனாவிற்கும் ஒரு பெண்குழந்தை பிறக்கிறது 
(ஐஸ்வர்யா ராய் 2.0?!).

கி.பி.2035:
*எந்திரனில் சாட்சியாக இருந்த ‘ரெட் சிப்’ ஆவணக் காப்பகத்தில் இருந்து காணாமல் போகிறது.
*சிறுவன் சிட்டி வளர்ந்து பெரியவனாகிவிட்டான். ரோபோக்களைப் பற்றி நிறையப் படித்துக்கொண்டிருக்கிறான். (இவன்தான் செகன்ட் ஹீரோ என்பதால், உங்களுக்குப் பிடித்த ஹீரோவை வைத்து இந்த கதாப்பாத்திரத்தைக் கற்பனை செய்துகொள்ளலாம்).
*இறந்துபோன ப்ரொஃபசர் Bhora-வின் பாழடைந்த ஆராய்ச்சிக் கூடத்தில் சில மர்ம உருவங்கள் எதையோ தேடி அலைகின்றன. (எந்திரன்1.0 அதே கூடத்தில் எந்திரன்2.0 என்ற தற்காலிக வில்லனாக மாறிய காட்சிகள், கஜினி ஸ்டைலில் ஃபிளாஷ்பேக்கில் காட்டப்படுகின்றன). அந்த மர்ம கும்பல் அங்கிருந்த கைவிடப்பட்ட கணிணிகளிலிருந்து எந்திரன் 1.0 வின் ‘நியூரல் ஸ்கிமா’வை லவட்டிக்கொண்டு எஸ்ஸாகிறது.
*ஐஸ்வர்யா 2.0 ஒரு கல்லூரியில் எதையோ படித்துக்கொண்டிருக்கிறார்(?!). சிட்டிக்கும் இவருக்கும் இடையே காதல் வருகிறது (எப்படி வருகிறது? என்றெல்லாம் கேள்வி கேட்கக்கூடாது! அது அப்படித்தான்).

இதேநேரம்,
எந்திரனில் கடைசிக் காட்சியில் காட்டப்பட்ட கண்காட்சிக் கூடத்தில் இருக்கும் சிட்டியின் பாகங்கள், Oceans 10,11 & 12 மற்றும் The Heist படங்களில் வருவது போன்று ஒரு ஹைடெக் திட்டத்தின் மூலம் திருடப்படுகின்றன.

விசயம் தெரிந்ததும் பரபரப்பாகிறது பத்திரிகை உலகம். வசீகரனின் (வயதான ரஜினி) வீட்டு முன்பு பத்திரிகையாளர்கள் குழுமுகின்றனர். கேள்விகள் கேட்டுத் துளைக்கின்றனர். ரோபோ தீவிரவாதிகள் கையில் சிக்கினால் உலகமே ஆபத்தில் சிக்கும் வாய்ப்பு இருக்கிறது என ஊடகங்கள் அறிவிக்கின்றன. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார். இந்த நேரத்தில், செகன்ட் ஹீரோ சிட்டி, வசீகரனைச் சந்தித்து ரோபோக்கள் மீது தனக்குள்ள ஆர்வத்தைப் பகிர்ந்துகொள்கிறார்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு தனது ஆய்வகத்தை மீண்டும் திறக்கிறார் வசீகரன்(ரஜினி). எந்திரன்2.0-வை உருவாக்குகிறார். அவருக்கு உதவுகிறார் நம்ம செகன்ட் ஹீரோ. இந்த நிலையில் எந்திரன்1.0 சீன உளவுத்துறையின் கைகளில் சென்று சேர்கிறது(எவ்வளவு நாளைக்குத்தான் பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்று சொல்லிக்கொண்டிருப்பது?! ஒரு மாறுதல் வேண்டாமா?).. ‘ரெட் சிப்’ உதவியால் எந்திரன்2.0 வில்லனை மீண்டும் உருவாக்குகிறார்கள், சீன உளவுத்துறையினர். மேலும், அவர்கள் வில்லன் ரோபோக்களின் கட்டுப்பாடுகளைத் தங்கள்வசமே வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். இதற்கான அட்வான்ஸ்ட் மென்பொருளைச் சீனாவிற்குத் தயாரித்து வழங்குகிறது ஓர் இந்தியன் எம்.என்.சி. கம்பெனி(!) . அதற்கான நிரல் கட்டமைப்பு, டெஸ்டிங், டெலிவரி எல்லாமே அதன் பின்னணி புரியாமல் செய்து கொடுக்கிறது இந்த நிறுவனம். வில்லன் ரோபோ தன்னைத்தானே தயாரித்துக்கொண்டு பல்கிப் பெருகுகிறது. சீனா, இந்தியாவின் மீது படையெடுக்கத் தயாராகிறது!

எந்திரன்2.0 வில்லன் தலைமையில் சீனப் படைகளுக்கும் ரஜினி உருவாக்கும் எந்திரன்2.0 விற்கும் இடையே நடக்கும் பயங்கர யுத்தங்கள் இரண்டாம் பாதியை ஆக்கிரமிக்க டெர்மினேட்டர் ஸ்டைலில் கிளைமாக்ஸ்.
இறுதியில் ரஜினி தயாரித்த எந்திரன்2.0 (நல்ல ரோபோ) சீனப் படைகளை வென்றுவிட, செகன்ட் ஹீரோ ஐஸ்வர்யா2.0 வை மணமுடிக்க - சுபம்!

*************
ஐஸ்வர்யா2.0 விற்குப் பதில் வேறு யாரையேனும் வைத்து கற்பனை செய்துகொள்ளலாம். 
*ரஜினி, எந்திரன்2.0 வை ஆய்வகத்தில் உருவாக்கும்போது, அவர் மகள் காஃபி கொடுக்கிற சாக்கில் செகன்ட் ஹீரோவை சைட் அடித்துவிட்டு ஒன்று இரண்டு டூயட் பாடல்ளுக்கு ஆடிவிட்டுச் செல்வது,
*வில்லன் ரோபோ நல்ல ரோபோவுக்கு விர்ச்சுவல் கான்ஃபரன்ஸில் தோன்றி பஞ்ச் டயலாக் பேசிவிட்டுச் செல்வது, 
*இமயமலையிலிருந்து படைகள் வந்து இறங்குவதால் ‘பரமசிவன் கோபாக்னியைக் கக்குகிறார், அவரைச் சாந்திப்படுத்த யாகம் நடத்துவோம்’ என்று ஒரு கும்பல் கிளம்புவது, 
*வில்ல எந்திரன்களைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட மென்பொருளைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காக ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியரை ரஜினி வரவழைப்பது, 
*அந்த ஸ்மார்ட்டான பையன், சாஃப்ட்வேரில் கண்டுபிடிக்கப்படாத ஒரு ‘பிழை’(Defect) இருப்பதை உன்னைப்போல் ஒருவன் ஸ்டைலில் கண்டுபிடித்து வசீகரனிடம் சொல்வது, 
*அந்த வீக்னஸை வைத்தே எந்திர வில்லன்களைச் சமாளிப்பது, 

என்று மசாலா ஐட்டங்களை இட்டு நிரப்பி ஒரு சூப்பர் ‘அறிபுனை’[Sci Fi] கதையை உருவாக்கலாம். 
***********
இந்தக் கதை பற்றி, இயக்குனர் சங்கரிடமோ, பீட்டர் ஜாக்ஸனிடமோ, ஜேம்ஸ் கேமரூனிடமோ இல்லை ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்-கிடமோ சொல்லி அவர்களை இதை இயக்குவதற்குச் சம்மதிக்க வைப்பவர்களுக்கு, தக்க சன்மானம் வழங்கப்படும் என்று கூறி முடிக்கிறேன்! 

படத்தில் வரும் மென்பொருள் சோதனையாளனாக (?!) (சாஃப்ட்வேர் டெஸ்டர்) நானேதான் நடிப்பேன் என்பதையும் கூறிக்கொள்கிறேன். :)