Wednesday, December 9, 2009

திருமண வாழ்த்து - நிறைய புத்தகங்கள் படிக்கும் அக்னி பார்வைக்கு

சக பதிவர் 'அக்னி பார்வை' வினோத்திற்குக் கடந்த மாதம் 27-ம் தேதி திருமணம் நடைபெற்றது. அன்று ஈரோட்டுப் பதிவர்களோடு (முந்தைய இடுகையில் குறிப்பிட்டபடி) பின்மண்டைத்துவ நண்பரின் திருமணத்தில் பங்குபெற்றதால் அக்னி பார்வையின் திருமணத்தில் கலந்துகொள்ள முடியவில்லை.

வரவேற்பு நிகழ்ச்சி 29-ம் தேதி திருவள்ளூரில் நடைபெற்றது. கோயம்பேட்டில் இருந்து 'பயணிகளின் நண்பனில்' திருவள்ளூர் சென்று சேர்ந்தபோது மணி மாலை 5:20. சரி நேரத்தைப் போக்கலாம் என்று பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் இருந்த ஒரு குறுவட்டு விற்பனை நிலையத்திற்குள் நுழைந்தேன். பாடல்கள் படங்கள் என்று வரிசைப்படுத்தி வைத்திருந்தார்கள். திருட்டு (!) (திருட்டு என்பது சரியாகப் படவில்லை. வேறு எங்கிருந்தோ திருடிய குறுந்தகடுகள் என்ற பொருள் தருகிறதல்லவா?!) போலிக்குறுந்தகடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. முந்தாநாள் வெளியான படம்கூட அங்கு கிடைத்திருக்க வாய்ப்புண்டு.

சரி, தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து ஒரு முடிவெடுத்திருக்கிறார்களாமே, ''சுமாரான படத்தின் குறுந்தகடு 50 நாட்களிலும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிற படத்தின் குறுந்தகடு 100 நாட்களிலும் வெளியிடலாம்'' என்று! இப்படி எண்ணிக்கொண்டே "திருதிரு துறு துறு ஒரிஜினல் இருக்கா?" என்றேன். தெரியாத ஏதோ ஒரு சந்திற்குள் நுழையும்போது அங்கிருப்பவர்கள் பார்க்கும் ஒரு வினோதமான பார்வைபோல என்னைப் பார்த்துவிட்டு "அங்க அடுக்கி வைச்சிருக்கிறதுதான் சார் ஒரிஜினல், பார்த்து எடுத்துக்குங்க" என்றார் கடைக்காரர். 80-களில் வெளிவந்தவையும் ஒருசில 90களும் இருந்தன.

சர்தான், நடையைக் கட்டி மண்டபத்திற்கு வந்தேன். நல்ல பெரிய மண்டபம். முன்னால்(ள்) பழைய அம்பாசிடரில் இருந்து ஹுண்டாய் i20 வரை பலவகை வாகனங்கள் மண்டப முகப்பில் அணிவகுத்து நின்றன. அத்தனை பேரும் தம்பதியரை வாழ்த்த வந்திருந்தார்கள். இரண்டு 'கேமரா'க்கள் மூலம் வரவேற்பு நிகழ்ச்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருக்க, கூச்சத்தில் கொஞ்சநேரம் வெளியிலேயே நின்றுகொண்டேன் (அங்குதான் நிறைய வாலிப நண்பிகள் அரட்டையடித்துக்கொண்டிருந்தார்கள், மணமகனுக்கோ மணமகளுக்கோ நண்பர்களாக இருக்க வேண்டும் என்பது என் கணிப்பு!).

அப்புறம் ஒரு வழியா உள்ளே போகலாம் என்று முடிவெடுத்து(கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சு!) நேராக மேடைக்குச் சென்று இரண்டு மூன்று புகைப்படங்கள் எடுத்து வினோத்திற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தேன். என்னைப் பார்த்ததும் மிகுந்த சந்தோசம் வினோத்திற்கு. பின்பு ஒரு இருக்கையில் வந்து அமர்ந்தகொண்டேன். கடைசி நபராகச் சென்று கையில் வைத்திருந்த இரண்டு புத்தகங்களைப் பரிசளித்தபோது, மணமகள் என்னைப் பார்த்து ''இங்கேயும் புத்தகமா?!'' என்று ஆச்சரியத்தில் (சற்று சந்தோசமான சலிப்புடனும்) புருவம் உயர்த்தி இயல்பாகப் பேசினார்.

''நாங்கல்லாம் ஒரு புத்தகப் பெருசாளி(புழு என்ன பாவம் பண்ணிச்சி!), புத்தகத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாது - கழிவறையில் கூட புத்தம் படித்துக்கொண்டிருப்போம்'' என்கிற மாதிரி சும்மா அடித்துவிட்டு விட்டு விடைபெற்றேன் தம்பதியரிடமிருந்து. :)

உங்கள் வாழ்த்துக்களை இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் agnipaarvai@gmail.com. ஆர்வமுடன் என்னைத் தொடர்புகொள்ளும் தெரிந்த நண்பர்களுக்கு புகைப்படத் தொகுப்பு மின்னஞ்சலில் அனுப்பப்படும்.