Wednesday, July 6, 2011

போர்க்குற்றம், இனப்படுகொலைக்கு எதிராக!

சேவ்-தமிழ்ஸ் (http://save-tamils.org) முயற்சியால், கடந்த ஜூன் 2 ஆம் தேதி பெங்களூரூவில், கேரள, ஆந்திர, கர்நாடக மற்றும் தமிழக மனித உரிமை அமைப்புகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து ‘போர்க்குற்றம், இனப்படுகொலைக்கு எதிரான மன்றத்தைத்(“Forum against War Crimes and Genocide”) தொடங்கின. அதன் தொடர்ச்சியாக, மன்றத்தின் கர்நாடகக் குழு(Forum Against War Crimes and Genocide - Karnataka State Committee), சார்பில் ஜூலை 2, பெங்களூருவில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த பல்வேறு மனித உரிமை அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலை குறித்து தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து ஈழத் தமிழர்களுக்கு தம் ஆதரவை வழங்கினர்.

மன்றத்தின் கர்நாடகக் குழுவில்: மக்கள் சனநாயக முன்னணி(PDF), தலித் சுயமரியாதை இயக்கம்(DSR), பெடஸ்ட்ரியன் பிக்சர்ஸ்(Pedestrian Pictures), கர்நாடக மாணவ அமைப்பு(KSO), கர்நாடக ஜன சக்தி & கர்நாடக வித்யார்தி வேதிகே, சமதா மகிள வேதிகே (All India Progressive Women’s Association), புதிய சோஷலிச மாற்று - Tamils solidarity, மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு(NCHRO) மற்றும் அனைத்து கர்நாடக தமிழ் அமைப்புகள் உள்ளன.

மாலை 4:30 மணியிலிருந்து 8:30 வரை நடந்த நிகழ்வில் சுமார் 100 பேர் கலந்துகொண்டனர். இதில் பெரும்பாலானோர் கன்னடர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்வு முழுவதும் கன்னடம் மற்றும் ஆங்கிலத்திலேயே நடத்தப்பட்டது. இலங்கையில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்டப் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் வெளிப்படும் புகைப்படங்கள் காட்சிக்கும் வைக்கப்பட்டிருந்தன.


நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துக்களை பதிவு செய்தவர்கள்:
*மக்கள் ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த திரு.நகரிகரே ரமேஷ்
*கர்நாடகாவில் முக்கிய எழுத்தாளரும், சுயநிர்ணய உரிமை போராட்டங்களுகு ஆதரவாகத் தொடர்ந்து எழுதிவருபவருமான திரு.ஜி. இராமகிருஷணன்
*பெங்களூரூ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் திரு. பால் நியூமன்
*பெங்களூரு சட்டப் பல்கலைக் கழகத்தில் கெளவரவப் பேராசிரியராக பணியாற்றிவரும் மனித உரிமை ஆர்வலரான திரு.ஹரகோபால் (APCLC)
*புதிய சோஷலிச மாற்று இயக்கத்தைச் சேர்ந்த திரு.ஜெகதீஸ்
*காஷ்மீரைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் திரு.காலித் வாசிம்

********

No comments: