Wednesday, October 27, 2010

எந்திரன் 2.0 - the ROBOT is back!

கி.பி.2030:
‘ஏன்னா நான் சிந்திக்க ஆரம்பிச்சுட்டேன்’ எனச் சொல்லும் அந்த ரோபோவின் தலையைப் பார்த்தபடியே செல்லும் சிறுமி, மெதுவாக அந்த காட்சிக் கூடத்தைக் கடந்து செல்கிறாள். தூரம் அதிகரிக்க அதிகரிக்க, ரோபோ பார்வையாளர் கண்களில் இருந்து மறைகிறது(சிறுமியின் கண்களிலிருந்து கேமரா கோணம்!).

கி.பி.2011:
*தேவதர்ஷினி கையில் இருந்த பையன், ரோபோ பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறான்(உபயம் - எந்திரன் முதல் பாகத்தில் எந்திரன்1.0 கொடுத்த அட்வைஸ்).
*எந்திரன் 1.0 வைத் தயாரித்த வசீகரனுக்கும் சனாவிற்கும் ஒரு பெண்குழந்தை பிறக்கிறது 
(ஐஸ்வர்யா ராய் 2.0?!).

கி.பி.2035:
*எந்திரனில் சாட்சியாக இருந்த ‘ரெட் சிப்’ ஆவணக் காப்பகத்தில் இருந்து காணாமல் போகிறது.
*சிறுவன் சிட்டி வளர்ந்து பெரியவனாகிவிட்டான். ரோபோக்களைப் பற்றி நிறையப் படித்துக்கொண்டிருக்கிறான். (இவன்தான் செகன்ட் ஹீரோ என்பதால், உங்களுக்குப் பிடித்த ஹீரோவை வைத்து இந்த கதாப்பாத்திரத்தைக் கற்பனை செய்துகொள்ளலாம்).
*இறந்துபோன ப்ரொஃபசர் Bhora-வின் பாழடைந்த ஆராய்ச்சிக் கூடத்தில் சில மர்ம உருவங்கள் எதையோ தேடி அலைகின்றன. (எந்திரன்1.0 அதே கூடத்தில் எந்திரன்2.0 என்ற தற்காலிக வில்லனாக மாறிய காட்சிகள், கஜினி ஸ்டைலில் ஃபிளாஷ்பேக்கில் காட்டப்படுகின்றன). அந்த மர்ம கும்பல் அங்கிருந்த கைவிடப்பட்ட கணிணிகளிலிருந்து எந்திரன் 1.0 வின் ‘நியூரல் ஸ்கிமா’வை லவட்டிக்கொண்டு எஸ்ஸாகிறது.
*ஐஸ்வர்யா 2.0 ஒரு கல்லூரியில் எதையோ படித்துக்கொண்டிருக்கிறார்(?!). சிட்டிக்கும் இவருக்கும் இடையே காதல் வருகிறது (எப்படி வருகிறது? என்றெல்லாம் கேள்வி கேட்கக்கூடாது! அது அப்படித்தான்).

இதேநேரம்,
எந்திரனில் கடைசிக் காட்சியில் காட்டப்பட்ட கண்காட்சிக் கூடத்தில் இருக்கும் சிட்டியின் பாகங்கள், Oceans 10,11 & 12 மற்றும் The Heist படங்களில் வருவது போன்று ஒரு ஹைடெக் திட்டத்தின் மூலம் திருடப்படுகின்றன.

விசயம் தெரிந்ததும் பரபரப்பாகிறது பத்திரிகை உலகம். வசீகரனின் (வயதான ரஜினி) வீட்டு முன்பு பத்திரிகையாளர்கள் குழுமுகின்றனர். கேள்விகள் கேட்டுத் துளைக்கின்றனர். ரோபோ தீவிரவாதிகள் கையில் சிக்கினால் உலகமே ஆபத்தில் சிக்கும் வாய்ப்பு இருக்கிறது என ஊடகங்கள் அறிவிக்கின்றன. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார். இந்த நேரத்தில், செகன்ட் ஹீரோ சிட்டி, வசீகரனைச் சந்தித்து ரோபோக்கள் மீது தனக்குள்ள ஆர்வத்தைப் பகிர்ந்துகொள்கிறார்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு தனது ஆய்வகத்தை மீண்டும் திறக்கிறார் வசீகரன்(ரஜினி). எந்திரன்2.0-வை உருவாக்குகிறார். அவருக்கு உதவுகிறார் நம்ம செகன்ட் ஹீரோ. இந்த நிலையில் எந்திரன்1.0 சீன உளவுத்துறையின் கைகளில் சென்று சேர்கிறது(எவ்வளவு நாளைக்குத்தான் பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்று சொல்லிக்கொண்டிருப்பது?! ஒரு மாறுதல் வேண்டாமா?).. ‘ரெட் சிப்’ உதவியால் எந்திரன்2.0 வில்லனை மீண்டும் உருவாக்குகிறார்கள், சீன உளவுத்துறையினர். மேலும், அவர்கள் வில்லன் ரோபோக்களின் கட்டுப்பாடுகளைத் தங்கள்வசமே வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். இதற்கான அட்வான்ஸ்ட் மென்பொருளைச் சீனாவிற்குத் தயாரித்து வழங்குகிறது ஓர் இந்தியன் எம்.என்.சி. கம்பெனி(!) . அதற்கான நிரல் கட்டமைப்பு, டெஸ்டிங், டெலிவரி எல்லாமே அதன் பின்னணி புரியாமல் செய்து கொடுக்கிறது இந்த நிறுவனம். வில்லன் ரோபோ தன்னைத்தானே தயாரித்துக்கொண்டு பல்கிப் பெருகுகிறது. சீனா, இந்தியாவின் மீது படையெடுக்கத் தயாராகிறது!

எந்திரன்2.0 வில்லன் தலைமையில் சீனப் படைகளுக்கும் ரஜினி உருவாக்கும் எந்திரன்2.0 விற்கும் இடையே நடக்கும் பயங்கர யுத்தங்கள் இரண்டாம் பாதியை ஆக்கிரமிக்க டெர்மினேட்டர் ஸ்டைலில் கிளைமாக்ஸ்.
இறுதியில் ரஜினி தயாரித்த எந்திரன்2.0 (நல்ல ரோபோ) சீனப் படைகளை வென்றுவிட, செகன்ட் ஹீரோ ஐஸ்வர்யா2.0 வை மணமுடிக்க - சுபம்!

*************
ஐஸ்வர்யா2.0 விற்குப் பதில் வேறு யாரையேனும் வைத்து கற்பனை செய்துகொள்ளலாம். 
*ரஜினி, எந்திரன்2.0 வை ஆய்வகத்தில் உருவாக்கும்போது, அவர் மகள் காஃபி கொடுக்கிற சாக்கில் செகன்ட் ஹீரோவை சைட் அடித்துவிட்டு ஒன்று இரண்டு டூயட் பாடல்ளுக்கு ஆடிவிட்டுச் செல்வது,
*வில்லன் ரோபோ நல்ல ரோபோவுக்கு விர்ச்சுவல் கான்ஃபரன்ஸில் தோன்றி பஞ்ச் டயலாக் பேசிவிட்டுச் செல்வது, 
*இமயமலையிலிருந்து படைகள் வந்து இறங்குவதால் ‘பரமசிவன் கோபாக்னியைக் கக்குகிறார், அவரைச் சாந்திப்படுத்த யாகம் நடத்துவோம்’ என்று ஒரு கும்பல் கிளம்புவது, 
*வில்ல எந்திரன்களைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட மென்பொருளைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காக ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியரை ரஜினி வரவழைப்பது, 
*அந்த ஸ்மார்ட்டான பையன், சாஃப்ட்வேரில் கண்டுபிடிக்கப்படாத ஒரு ‘பிழை’(Defect) இருப்பதை உன்னைப்போல் ஒருவன் ஸ்டைலில் கண்டுபிடித்து வசீகரனிடம் சொல்வது, 
*அந்த வீக்னஸை வைத்தே எந்திர வில்லன்களைச் சமாளிப்பது, 

என்று மசாலா ஐட்டங்களை இட்டு நிரப்பி ஒரு சூப்பர் ‘அறிபுனை’[Sci Fi] கதையை உருவாக்கலாம். 
***********
இந்தக் கதை பற்றி, இயக்குனர் சங்கரிடமோ, பீட்டர் ஜாக்ஸனிடமோ, ஜேம்ஸ் கேமரூனிடமோ இல்லை ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்-கிடமோ சொல்லி அவர்களை இதை இயக்குவதற்குச் சம்மதிக்க வைப்பவர்களுக்கு, தக்க சன்மானம் வழங்கப்படும் என்று கூறி முடிக்கிறேன்! 

படத்தில் வரும் மென்பொருள் சோதனையாளனாக (?!) (சாஃப்ட்வேர் டெஸ்டர்) நானேதான் நடிப்பேன் என்பதையும் கூறிக்கொள்கிறேன். :)

Wednesday, August 4, 2010

மேக் புக்கும் தமிழும் - MacBook Pro and Tamil

கடந்த மூன்று வாரங்களாக 'மேக்புக் ப்ரோ' எனப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கணிணியை (MacBook Pro), பணிநிமித்தம் பயன்படுத்தி வருகிறேன்.  இது என் கையில் கிடைத்ததும் முதல் நாள் பணிமுடிந்ததும் நான் செய்தது தமிழ் இணையதளங்களை வாசிக்க முயற்சி செய்தது. ஆனால், எல்லாமே கட்டம் கட்டமாகத் தெரிந்தன. இதோ பாருங்கள்...


நானும் என்னவெல்லாமோ செய்து பார்த்தேன். கூகிளாண்டவரிடம் கெஞ்சி கூத்தாடி கேட்டேன். ஆனால், என்னால் முடிந்தது எல்லாம் ஆங்கிலத்திலேதான் செய்ய முடிஞ்சது. அப்போதுதான் 'மேக்' குழுமத்தில ஒருவர் 'தமிழ் யுனிகோட் எழுத்துரு' ஏதாவது ஒன்றை நிறுவினால் போதும் என்றார். நானும் கையில் கிடைத்த தமிழ் எழுத்துருக்களையெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நிறுவிப் பார்த்தேன். இப்போது, கட்டம் கட்டமாக இல்லாமல் ஒரு புதிய வரிவடிவத்தில் எழுத்துக்கள் தோன்றின. ஒருவேளை நடைபெற்றுக்கொண்டிருக்கும் விவாதங்களைக் கருத்தில் வைத்து, தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை ஆப்பிள் மேக் நிறுவனத்தார் இப்போதே நடைமுறையில் கொண்டுவந்துவிட்டார்களோ! என்று ஒரு சந்தேகம் வந்துவிட்டது.  இதோ பாருங்கள் இந்தப் படத்தை!


'இப்படியே படித்துக்கொண்டிருந்தால், தமிழ் வரிவடிவ மாற்றம் வந்தாலும் எந்தச் சிக்கலும் இல்லாமல் வாசிக்க முடியும்' என என்னக்கு நானே நினைத்துக்கொண்டேன். இருந்தாலும் மூன்று வாரம் ஆகிவிட்டபடியாலும், அதற்கு மேல் கூகிளுவதற்குப் பொறுமையில்லாமலும் பதிவர்கள் சிலரிடம் உதவி கோரினேன். அப்போதான் செந்தழல் ரவி அண்ணா இந்த சுட்டியை அனுப்பினாங்க.

http://tamilcpu.blogspot.com/2010/04/106.html

இதப் படிச்சதுக்கு அப்புறம்தான் புரிஞ்சது. மேக் இயங்குதளத்தை நிறுவும்போது,  விருப்பத் தேர்வுகள் பிரிவில் இருக்கும் ஒரு எழுத்துருதான் 'Inaimathi.tff'. இதுதான் யுனிகோட் தமிழ் எழுத்துருக்களை மேக்புக் ப்ரோவில் காண்பிக்கும் வேலையைப் பார்க்கிறது. அது என்னுடைய கணிணியில் இல்லை - அதனுடனே சேர்ந்து இன்னும் சில தமிழ் எழுத்துருக்களும். பின்னர் அதற்கான குறுவட்டை எடுத்து இவற்றையெல்லாம் சேர்த்து நிறுவியதும் கணிணியில் தமிழ் எழுத்துக்கள் எந்த வரிவடிவ குளறுபாடும் இல்லாமல் தெளிவாகத் தெரிந்தன. இப்போது இந்த இடுகையை(ஒரு வாரத்திற்குப் பிறகு) எழுதி முடித்துவிட்டேன்.

மேற்கண்ட சுட்டியில் மேக்புக்் 10.6 ல் இருக்கும் மிக எளிமையான தமிழ் உள்ளீடு முறை பற்றி அழகாக விளக்கியிருக்கிறார் ந.ர.செ. ராஜ்குமார்.

''அப்போ நீ என்னடா சொல்ல வர்றே؟'' என்கிறீர்களா....

இங்கு நான் சொல்ல வருவது ஒன்றே ஒன்றுதான். மேற்கண்ட சுட்டியைப் பயன்படுத்தி உள்ளீடு முறையைத் தேர்ந்தெடுத்த பின்பு ஆங்கிலம் மற்றும் தமிழுக்கு மாறுவதற்கு சில 'சுருக்கு விசை' களை நீங்கள் வைத்துக்கொள்ளலாம். எப்படியெனில்,

System Preferences -> Keyboard -> Keyboard Shortcuts -> Keyboard & Text Input -> Select the Previous Input Source

இங்கு உங்களுக்குப் பிடித்தமான 'சுருக்கு விசை(களை)' தேர்வு செய்து கொள்ளலாம். நினைத்த நேரத்தில் தமிழ் - ஆங்கிலத்தில் மாறி மாறி தட்டச்சலாம்.

"அது சரி 'ஆப்பிள் மேக்' னா என்ன؟" என்பவர்களுக்கு..... இதோ
நானும் இதப்பார்த்து கொஞ்சநாள்தாங்க ஆச்சு....

Friday, July 2, 2010

30 ரூபாய் பயணச்சீட்டும் மாநகர காவல்துறையும்

கடந்த வாரத்தில் ஒருநாள்:

அண்ணா சாலையில் டி.எம்.எஸ். நிறுத்தத்தில், நான் வந்துகொண்டிருந்த பேருந்து நீண்ட வரிசையில் நின்றது. முன்னால் ஏற்கெனவே சில பேருந்துகள். திடீரென்று சில காவலர்கள் பேருந்தினுள் நுழைந்து ஒவ்வொருவரது பை, மற்ற பொருட்களைச் சோதித்தார்கள். அதற்குப் பிறகுதான் அது நடந்தது. ஒவ்வொருவரது டிக்கெட்டையும் பரிசோதித்தார்கள். எனக்கு திக் திக்கென்றது.

பார்ப்பதற்கு 'காவல்துறையின் உயர் அதிகாரிகள் போல...!' என யோசிக்கும்போதே... அங்கு என்ன?..  அது கலைஞர் தொலைக்காட்சியின் செய்திப்பிரிவின் ஒரு அணி. இந்த திடீர் பரிசோதனையை கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்காக.

*****
காவலர்: டிக்கெட்ட காமி.
நான்: இந்தாங்க சார்

காவலர்: தம்பி 30 ரூபாய் பாஸ்ல எங்க போறீங்க?!
நான்: இல்ல வீட்டு ஓனர் இங்கேதான் இருக்காங்க, வாடகைய குடுத்துட்டு போக வந்தேன்.

காவலர்: அதுக்கு எதுக்கு 30 ரூபா பாஸு? தம்பி கீழ இறங்குங்க. ஐயாவ வந்து பாருங்க... சார் இங்க ஒருத்தன் இருக்கான் சார் (கீழே இருந்தவரைப் பார்த்து).

காவலர்: தம்பி பர்ஸ எடுங்க, பாக்கெட்ட செக் பண்ணுங்கய்யா... தம்பி எங்கயிருந்து வர்றீங்க?
நான்:வேளச்சேரியிலயிருந்து.


காவலர்: சரி என்னது இது? 30 ரூபா பாஸ்ல வர்றீங்க? மார்கெட்டிங்ல இருக்கீங்களோ?
நான்: இல்ல சார். சும்மாதான்.

காவலர்: எங்க போறீங்க?... பர்ஸ்ல ஒண்ணும் இல்லியா? (பர்ஸ் செக் பண்ணினவரைப் பார்த்து). எங்க காமிங்க. என்னய்யா போட்டா, யாரு இது?
நான்: "வேகா" சார்! இந்த 'பசங்க' படத்துல வருமே, அந்த பொண்ணு!

காவலர்: அதெல்லாஞ் சரி, 30 ரூபா பாஸுக்கு இன்னும் பதில் வரலியே! தம்பி எங்க வேல செய்றீங்க. ஐடி கார்ட காமிங்க!
நான்: (எ.கொ.இ.!!! இன்னிக்கு பார்த்து ஐடி கார்ட எடுத்துட்டு வரலியே! - மனதிற்குள் நினைத்துக்கொண்டே). சார் ஐடி கார்ட எடுத்துட்டு வரல சார். இன்னிக்கு நான் ஆஃபிஸ்க்கு போகல. வீட்டு ஓனரைப் பார்க்கத்தான் வந்தேன்.

காவலர்: அதான...., ஐடி கார்ட் இருக்காதே!
*****

இந்த மாதிரி நிச்சயம் நடந்திருக்கும் - அன்றைக்கு 30 ரூபாய் பயணச்சீட்டில் பயணித்திருந்தால்! வழக்கமாக, நேரம் கிடைக்கும் சனிக்கிழமைகளில் 30 ரூபாய் (ஒருநாள் விருப்பம்போல் பயணம் செய்யும் சீட்டு) பயணச்சீட்டு எடுத்துக்கொண்டு சென்னையை வலம்வருவது எனது பழக்கம். பொழுதுபோகாமல் அண்ணா நகர் மேற்கு, மணலி, காலேஜ் ரோடு என்று சம்பந்தமே இல்லாத இடங்களில் சுற்றிய அனுபவங்கள் உண்டு. இதுவரை 50-க்கும் மேற்பட்ட ஒருநாள் பயணச்சீட்டுகள் வாங்கியிருப்பேன்.

***** (விட்ட இடத்திற்கு வருவோம்) - டி.எம்.எஸ். நிறுத்தம்:

உயர் அதிகாரி ஒருவர் கலைஞர் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவு குழுவினருக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தார்.

"பஸ்ல திருட்டு போகுதுன்னு நிறைய கம்ப்ளெயின்ட் வருது. இப்ப ரீஸன்டா பார்த்தீங்கன்னா, இது கொஞ்சம் அதிகமாயிருக்குது. ஏதாவது பொருளை உங்ககிட்ட வச்சிகிடுங்கன்னு கொடுக்கிறது. அத கொடுக்கும்போது வாங்கும்போது உங்க பொருள் எதையாவது திருடுறது, இப்படி. இதுல பார்த்தீங்கன்னா, திருடிகிட்டு மாட்டிக்கிறவங்க பெரும்பாலும் ஒன்டே பாஸ்ல வர்ற ஆட்கள். இந்த ஒரு நாள் பாஸ் வைச்சிருக்கிறவங்க நினைக்கிற இடத்துல இறங்கி வேற பஸ்ல ஏறிக்கலாம். இது திருடறவங்களுக்கு வசதியாப் போகுது. அதனால இந்த மாதிரி திடீர் சோதனைகள் நடத்துறோம். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துற விதமா இது சம்பந்தமா அறிவுரையும் கொடுக்கிறோம்..... " 

இன்னும் பேசிக்கொண்டே இருந்தார். பயணிகளிடமும் இது குறித்து கருத்து கேட்கப்பட்டது!

*****

நல்ல வேளையாக அன்று நான் 30 ரூபாய் (ஒருநாள் பயணச்சீட்டு) வாங்கவில்லை. வாங்கியிருந்தால்....வாங்கி கட்டியிருப்பேன்!

படம்:http://velang.blogspot.com/2009/01/30.html 
(இப்போது பழக்கத்தில் இருக்கும் ஒருநாள் பயணச்சீட்டு வண்ணமயமாக இருக்கிறது!)

Sunday, June 13, 2010

செம்மொழி மாநாடும் - சில உறுதிமொழிகளும்!

பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் தமிழ் மொழிக்கான ஒரு உலக மாநாடு - 'செம்மொழி' என்ற கூடுதல் தகுதியோடு! அது தொடர்பான விவாதங்களெல்லாம் இருக்கட்டும், நான் பேசவருவது வேறுவிசயம்!  இப்போதெல்லாம் நான் கூகிளில் தமிழில் கூட நிறைய விசயங்களைத் தேட ஆரம்பித்துவிட்டேன். "கோழி சமைப்பது எப்படி?", "கேரட் பொறியல் செய்வது எப்படி?", ''வத்தக்குழம்பு செய்யும் முறை'' என்று ஆரம்பித்து "அண்டம் தோன்றியது எப்படி?" வரைக்கும்!

தேடல் முடிவுகளில் பெரும்பாலும் தனிநபர் வலைப்பக்கங்களும் சில செய்தித் தளங்களின் தொடுப்புகளும் வருகின்றன. அதாவது, பதிவர்களாகிய நாம் எழுதுவது ஏதோ விளையாட்டுக் காரியமல்ல - அது மொக்கையாகவே இருந்தாலும்! நாம் எழுதிய வரிகளை நமக்குப் பின்னாஆஆஆஆல் வரும் சந்ததிகள் 10 பேரோ, 100 பேரோ ஏன் 10 இலட்சம் பேரோ கூட படிக்கலாம். அப்படி அவர்கள் படிக்கும்போது ஏகப்பட்ட பிழைகள் இருந்தால்(?!), அதே பிழைகள் அவர்களுடைய எழுத்துக்களிலும் பிரதிபலிக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. கூகிள் ப்ளாக்கர் சேவையை இலவசமாகத் தரும் வரையிலும் உங்கள் வலைப்புக்கள் தனித்தனி 'கல்வெட்டுகள்' என்பதை மறந்துவிடாதீர்கள்! - வரலாறு மிக முக்கியம்!

எனவே,

'செம்மொழி மாநாட்டை' முன்னிட்டு நான் எடுக்கும் உறுதிமொழிகள்:

*****
*முடிந்தவரை, பிழைகள் இல்லாமல் எழுதுவது. எங்காவது சந்தேகம் வந்தால் எஸ்.ரா, ஜெயமோகன், சாரு என எழுத்தாளர்களின் தளங்களில் படித்து, எனது எழுத்துக்களைத் திருத்திக் கொள்வது.

*மாதத்தில் ஒருவருக்காவது 'தமிழ் மென் எழுதிகள்' பற்றியும் 'இணையத்தில் தமிழ்' குறித்தும் அறிமுகப்படுத்துவது, அவர்களை இணையத்தில் தமிழில் எழுத வைப்பது.

*தமிழ் விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது.

*பிழைகளோடு எழுதும் சக பதிவர்களைத் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு அவர்கள் எழுதிச்சென்றுவிட்ட எழுத்து/இலக்கணப் பிழைகளை உணர்த்துவது. [நான் எங்காவது தப்புபோட்டா கூட மின்னஞ்சல் அனுப்புங்க மக்களே!]
*****

இந்த உறுதிமொழிகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்களும் எடுத்துக்கொள்ளலாம்!
தமிழ்மொழி தப்பும் தவறுமாக இணையத்தில் பதியப்படுவதில் ஒரு 5(%)சதவீதத்தையாவது கட்டுப்படுத்த உதவலாம்!

-வலைப்பக்கம் வந்து 6 மாதங்கள் ஆகின்றன. இந்த இடைப்பட்ட காலத்தில், தமிழ்மண விருது வாங்கியதற்காக வாழ்த்திய, மின்னஞ்சலிலும் அரட்டையிலும் விசாரித்த, ஒன்றுமே எழுதாவிட்டாலும் 'என்னத்தையாவது எழுதுவான்யா' என்று பின்தொடர்ந்த அன்பு உள்ளங்களுக்கும்,  குறுஞ்செய்தி மூலம் பதிவர் சந்திப்பு குறித்து தகவல் சொல்லிய டாக்டர் புரூனோ அவர்களுக்கும் (நான் கலந்துகொள்ளவில்லை என்பது வேறு விசயம்!) என் மனமார்ந்த நன்றிகளைப் பதிந்து கொள்கிறேன்.

Tuesday, January 5, 2010

ஐ மிஸ்ட் யூ டா - உண்மையில் கதை

வளுடன் ஒருநாள் முழுவதும் செலவிடப் போகிறேன் என்ற உணர்வே என் மயிர்க்கால்களை புல்லரிக்க வைத்தது. அதுவும் இரயில் நிலையத்தில் அவளைப் பார்த்த பின்பு -  மாலை, இரவு என தொடர்ந்து அவள் ஞாபகம்தான். எப்படியெல்லாம் மாறிவிட்டாள், எவ்வளவு சகஜமாக இனிமையாகப் பேசினாள்! கைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு, அவள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் கொண்டு(என் மனதையும்) விட்டுவிட்டு வீடு வந்தேன்.

க்கத்து ஊர் பள்ளிக்கூடத்தில் ஒன்றாகப் படிப்பு, அவளது அப்பாவின் வேலை நிமித்தம் அவர்கள் குடும்பம் மும்பை பயணம், ஊடகத்துறையில் பட்டப்படிப்பு, விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் இளைஞர்களுக்கான நான்கு பக்க வாரவெளியீட்டில் பங்களிப்பு, உலக அளவில் பிரபலமான ஒரு எழுத்தாளரின் இந்தியப் பயணத்தின்போது அவரைப்பேட்டி எடுக்கத் திட்டம், பேட்டிக்கு நேரம் ஒதுக்கப்பட்டது அவர் சென்னையில் இருக்கும் தினங்கள் - இதுதான் புவனா சென்னை வந்ததற்கான காரணம். சென்னையில் தெரிந்தவர்கள் பற்றி உறவுக்காரர்களிடம் விசாரித்ததில் என்னைப் பற்றியும், அவள் ஊரிலிருந்து சென்னையில் உள்ள இன்னும் சிலரைப் பற்றியும் தெரியவர, என்னைத் தொடர்புகொண்டிருந்தாள் புவனா. பேட்டிக்கான நாளுக்கு ஒருநாள் முன்னதாகவே பயணச்சீட்டு கிடைக்க, ஒருநாள் சென்னையைச் சுற்றிக்காட்ட என்னைக் கேட்டிருந்தாள்.

றுநாள் முழுவதும் என்னுடனேயே இருக்கப்போகிறாள்! பயணத்திட்டங்கள் வகுத்தாயிற்று. நண்பனது 'பைக்'கையும் ஏற்பாடு செய்தாகிவிட்டது. எனது அலுவலகத்தில் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக இருப்பதால் பெண்களுடன் பழகுவது பற்றிய எனது கூச்சம் என்றோ போயிருந்தது. இதை நினைத்து எனக்குள்ளேயே ஒரு கர்வம் இருந்தது. 'பள்ளிப்பருவத்தில் பார்த்த அந்த கூச்சம் நிறைந்த 'ஜோன்ஸ்' இவன் இல்லை' என்று அதிசயிக்கப் போகிறாள் என்று எனக்கு நானே எண்ணிக்கொண்டேன்.

காலையில் சொன்ன நேரத்திற்கு அவள் தங்கியிருந்த இடத்தின் முன் நின்றேன் - நல்ல பையனாக. அவளும் தயாராகியிருந்தாள்; சில நிமிடங்களிலேயே வெளியே வந்தாள். பலருக்கும் வரமளித்த கிழக்குக் கடற்கரைச் சாலையில் நுழைந்தபோது, 'சுள்'ளென்றிருந்த வெயில் மேகங்களின் வருகையால் மிதமானது. அவளுக்காகவே வெயில் தடை செய்யப்பட்டது போல உணர்ந்தேன். பைக்கின் பின்னிருந்து பல விசயங்களைப் பற்றி பேசிக்கொண்டே இருந்தாள். மிதமான வேகத்தில் சென்றதால் நானும் 'ம்' கொட்டிக்கொண்டே சென்றேன்.

ங்கிருந்து வந்து தொற்றிக்கொண்டது என்று தெரியவில்லை. பள்ளிக்கூடத்தில் அவளுடன்(இல்லை இல்லை, எல்லா பெண்களுடனும்) பேசுவதற்கு எப்படிக் கூச்சப்பட்டேனோ அதே கூச்சம்! என் உடலும் முகமும் வழக்கமான நிலையில் இல்லை. விஜிபிக்கு அருகே காபி சாப்பிட ஐந்து நிமிடம் நின்றபோது தெளிவாக அடையாளம் கண்டுகொண்டாள், நான் கூச்சத்தில் நெளிவதை. அதன்பின் 'தெற்குப்பட்டு' வரை பேசவே இல்லை. பைக்கில் அவள் உட்கார்ந்த விதத்திலும் ஒரு வித்தியாசத்தை உணர்ந்தேன்.

'தெற்குப்பட்டில்' சவுக்கு மரத் தோப்புகள் அங்கங்கே தென்பட்டன. ''ஏய் நிறுத்துப்பா, இங்க கொஞ்சநேரம் இருந்துட்டு போகலாம்'' என்றாள். 'மாமல்லபுரம் வரை என்னால் பைக் ஓட்டமுடியுமா?' என்கிற தொனியில் இருந்தது, அவள் கேட்டது. என் வண்டி ஓட்டும் திறமை மீதான சந்தேகமாக இருக்க வேண்டும் என நினைத்துக்கொண்டேன். புகைப்படங்கள் எடுத்த பிறகு, எதிரெதிரே இரு மரங்களில் சாய்ந்து நின்றுகொண்டோம் - அவள் பேச ஆரம்பித்தாள். 'நீ இன்னுமும் இப்படி கூச்சப்படுவேன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல! சென்னை வந்து இத்தன வருசமாச்சு. இன்னும் அப்படியே இருக்கியே எப்படி?!' என்றாள். நேற்று எட்டிப்பார்த்த என் கர்வம் என்னைப்பார்த்து பல்லிளித்தது, கூடவே கொஞ்சம் கோபமும் வந்தது. 'யாருக்கு? எனக்கா கூச்சம்? இப்போ யாருக்குக் கூச்சம்னு பார்க்கலாம்!' என்று அவள் இடை நோக்கி என் கையை நீட்டினேன்; விலகி ஓடினாள். இரு நிமிடம் தொடர்ந்த விளையாட்டில் 'தோல்வி'(!)யை ஒத்துக்கொண்டாள். இயல்பு நிலைக்குத் திரும்பியதும் இயல்பாகப் பேசினாள் பேசினோம் - வீடு திரும்பும் வரையிலும்.

றுநாள், அந்த பிரபல எழுத்தாளருடனான பேட்டி நிறைவுற்றதும், கடற்கரையில் சிறிது நேரம் - அதில் மௌனமாய் அதிக நேரம். முகத்தை மட்டும் பார்த்துக்கொண்டே பாதிநேரம்.  ரயில் நிலையம் நோக்கித் திரும்பவும் பயணம். தொடர் வண்டிக்காகக் காத்திருந்தபோது அம்மாவிற்குத் தொலைபேசினாள். சிலநிமிடம் கழித்து கைபேசியை என்னிடம் கொடுத்தாள்.

''சென்னையில அவளுக்கு ஹெல்ப் பண்றதுக்கு நீ இருக்கேன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம்தாம்பா அவளைத் தனியா அனுப்புறதுக்கு ஓ.கே. சொன்னேன். இல்லேன்னா நானும் கூட வரலாம்னுதான் யோசிச்சேன். சொந்தக் காரங்கள்லாம் ஆயிரம் வேலையோட இருப்பாங்க. அவங்க வீட்டுக்குப் போனமா வந்தமான்னு இருக்கணும். அதுவுமில்லாம பல வருஷமா யாருகூடவும் பழகுனதும் கிடையாது....'' என்று பேசிக்கொண்டே போனார் புவனாவின் அம்மா.

ழியனுப்பி வைத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்.நடைபாதையில், ரயிலுக்கு எதிர்த் திசையில் நடக்க ஆரம்பித்தேன். 'ஐயகோ' என்று சத்தமிட்டு(SMS Tone) வந்தது ஒரு குறுஞ்செய்தி. 'ஐ மிஸ் மிஸ்ட் யூ சோ மச். ஐ ரியலி மிஸ்ட் யூ தீஸ் மெனி யியர்ஸ் பா' [I missed you so much. I really missed you these many years pa :(  ].