Sunday, October 5, 2008

ஒரு அதிசயமான கல்லூரி பிரிவுபசார விழா!


அது சாதாரணமாக நீங்கள் எல்லோரும் கேள்விப்பட்டிருக்கக்கூடிய பிரிவு விழா அல்ல! அது எங்கள் ஆசிரியர்கள் மனமுவந்து எங்களுக்கு அளித்த கௌரவம் – திருவிழா. இன்றும் பசுமையான நினைவுகளோடு புல்லரிக்க(மயிர்க்கூச்செரிய) வைக்கிற நிகழ்வுகளை உள்ளடக்கியது.

2006 – ஏப்ரல் மாதத்தின் ஒரு நாளில் – இறுதி ஆண்டு மின்னணுவியியல் மற்றும் கருவியியல் (Electronics and Instrumentation Engineering) மாணவர்களாகிய எங்களிடம் “Farewell Party(பிரிவு விருந்து) வைச்சிருக்குப்பா, எல்லாரும் வந்திருங்க” என்று எங்கள் பேராசிரியர் சொன்னபோது, அது அப்படியே நடந்தபோது – எங்களுக்கு ஆச்சரியத்தை தவிர வேறெதுவும் தோன்றவில்லை.


முதல் காரணம்,
வழக்கமாக மாணவர்கள் தங்களுக்குள்ளே இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்து பின்பு ஆசிரியர்களை அழைப்பார்கள். ஆனால் ஆசிரியர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து எங்களை அழைத்தது.
இரண்டாவது,
கல்லூரி மேலிடத்திலிருந்தே, பிரிவு விழா (Farewell Day ) எல்லாம் கொண்டாடக்கூடாது, என்று அறிவித்திருந்த நேரத்தில் எங்களுக்கு மட்டும் வாழ்நாளிலே மறக்க முடியாத அந்த அனுபவம் கிடைத்தது.

அப்படி நாங்கள் என்ன செய்து விட்டோம் – எங்களுக்கு முன் இதே துறையில் (Department) படித்தவர்கள் செய்யாததை!

முதல் வருட இறுதியில், கல்லூரியிலேயே எங்கள் வகுப்பின் நிலைமைதான் மிகவும் மோசம். அனைத்து பாடங்களிலும் தேறியவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. விளையாட்டு மற்ற கல்லூரி அளவிலான Club activities (குழு நடவடிக்கைகள் - உதாரணம் JAYCEE, ROTARACT, RED CROSS & NSS) மிகக் குறைவு. போதாக்குறைக்கு எங்கள் துறை கட்டடத்திற்கு பட்டப்பெயர் கூட “பேய்வீடு”. மேலும், எங்கள் துறை எல்லா இடத்திலும் கடைசி நிலையிலும் ஒதுக்கிவைக்கப் பட்டதாகவும் இருந்தது.
இப்போதான் நாங்க இரண்டாவது ஆண்டுக்குள்ள அடியெடுத்து வைச்சோம்.
இது நல்ல விஷயமாண்ணு தெரியல, என்னண்ணா எங்க வகுப்பில உள்ளவங்க பெரும்பாலும் ஒண்ணாவே சேர்ந்து சுத்தினோம். விடுதியில் அரட்டையின்போது, நண்பர்கள் வீட்டுக்கு போகும்போது, சாப்பிடப்போகும்போது, இப்படி.

இந்த பழக்கம் எங்க வகுப்புல இருந்த எல்லாரையும் ஒரே அலைவரிசையில கொண்டு வந்தது. கல்லூரியோட எல்லா நிகழ்வுகள்லயும் பங்கெடுக்க ஆரம்பிச்சோம், எங்க துறை சார்ந்த நிகழ்வுகளை பெரிய விழாக்களா கொண்டாடினோம். தேர்வுகளுக்கான புத்தகங்கள் கட்டுரைகளை சேகரிக்கும்போது மொத்த வகுப்பையும் கவனத்துல எடுத்துகிட்டாங்க ஒரு சில நண்பர்கள். கல்லூரியில இருந்த கிட்டத்தட்ட எல்லா Club லயும் எங்க வகுப்பில இருந்து யாராவது ஒருத்தர் முக்கியமான பொறுப்புல வந்தாங்க. ஒரு கட்டத்தில கல்லூரி நிகழ்வுகள் எல்லாத்திலயும் எங்கள்ல ஒருத்தராவது பொறுப்பாளரா இருந்த நிலைமை வந்தது. படிப்புலயும் ஓரளவுக்கு முன்னாடி வந்தோம்.

ஆனா சாதாரணமா நடக்கக் கூடிய இந்த மாற்றங்களுக்காக, எங்களுக்கு எல்லா விதத்திலயும் உதவியா இருந்தது எங்க ஆசிரியர்கள்தான். கிட்டத்தட்ட காலேஜே ஒரு பள்ளிக்கூடம் மாதிரி ஆகிட்டிருந்த காலகட்டத்தில (இதைப் பத்தின என்னோட முந்தைய பதிவு இங்கே) எங்க துறை (Department) மட்டும் காலேஜாவே இருந்ததுக்கு காரணமும் இவங்கதான்.

அப்படிப்பட்டவங்ககிட்ட நாங்க கத்துகிட்டது பாராட்டு வாங்கினது எவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்கும்!!!

(படத்தில்: நடுவில் – பேராசிரியர் பிரம்மநாயகம், வலது – விரிவுரையாளர். அபுதாகிர் & இடது - விரிவுரையாளர். மோகன் குமார்) இவங்களை தெரிஞ்சுக்கணுமா? அப்போ வாங்க கோவில்பட்டிக்கு….

சென்னை பதிவர் சந்திப்பு(அக்டோபர் 4) - நானும் போயிருந்தேன்!

இவங்க எல்லாம் இங்க, இப்படி,

http://muralikkannan.blogspot.com/2008/09/4.html
http://www.athishaonline.com/2008/09/04-10-2008.html
http://venpu.blogspot.com/2008/10/blog-post.html
http://www.luckylookonline.com/2008/10/blog-post_03.html

எழுதின மாதிரி அக்டோபர் 4 - சென்னை பதிவர் சந்திப்பு நல்லபடியா நடந்து முடிஞ்சது.

http://dondu.blogspot.com/2008/10/04102008.html

நானும் கலந்துக்கிட்டேங்க!!!

அப்படியே, புகைப்படங்களை கிளிக்கித் தள்ளிய பாசக்கார பதிவர்கள் உடனே 'அக்டோபர் 4 - சென்னை பதிவர் சந்திப்பு - போட்டோ பதிவு' அப்படி ஏதாவது போட்டீங்கண்ணா நல்லாயிருக்கும்.

Saturday, September 20, 2008

சைக்கிளுக்கு ஹெல்மெட்டாஆஆஆஆ



இரண்டு வாரத்தி்ற்கு முன்பு என்னை மிதி வண்டியில் தலைக்கவசத்தோடு வேளச்சேரி தாம்பரம் சாலையில் பார்த்திருக்கலாம்!!!

(சும்மா – சைக்கிளுக்கு ஹெல்மெட் போட்டுட்டு போகணும்னு ரொம்ப நாள் ஆசை, அதான்)

இத பார்த்ததும் உங்களுக்கு என்ன தோண வாய்ப்பிருக்குன்னா….!!!!

1) சைக்கிளுக்கு ஹெல்மெட்டா – ஏதாவது பைத்தியமோ?
2) ஏதாவது பெட் கிட் வச்சிருப்பானோ?
3) சென்னை சைக்கோவா இருக்குமோ?
4) ரொம்ப வேகமா போறதா நெனப்போ?
5) ஹெல்மெட் போட சொல்லி விழிப்புணர்வு ஏதுமா?
6) சரியான பயந்தாங்கொள்ளியா(கோழை) இருப்பானோ?


நான் இப்படி போறத பார்த்துட்டு, பைக்ல போறவங்க சிரிச்சிட்டு போனது, office la Security ஒரு மாதிரியா பார்த்தது, ஒரு சின்ன பையன் 'சைக்கிளுக்கு ஹெல்மெட்டா' ன்னு கத்தினது, ரெண்டு பொண்ணுங்க 'ரோட் ஸேப்டி (Road Safety) ரொம்ப முக்கியம், அதுவும் இந்த மோசமான ரோட்ல' அப்படின்னு என்னை கடந்து போகும் போது 'க்ளுக்' னு சிரிச்சிகிட்டே பேசிட்டு போனது, இப்படி பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்துச்சி.

நீங்க கூட முயற்சி பண்ணலாம்..... ;)

Sunday, July 20, 2008

நள்ளிரவில் சைக்கிளில் ஏ.ஆர்.ரகுமான்...

துரைப்பாக்கம் - பல்லாவரம் சாலை, இரவு மணி 12:30. IT நிறுவன வாகனங்களின் அணிவகுப்பு இல்லாத அந்த நேரத்தில் ஒரு சில வினாடிகளில் எடுத்த முடிவு அது. ரோந்தில் இருந்த ஒரு காவல் அதிகாரி, டாஸ்மாக் கடை உண்மையாகவே பூட்டியுள்ளதா என கவனித்துவிட்டு டயூட்டியைத் தொடர, சற்று தூரத்தில் வாடகைக்கு விடுவதற்காக கட்டிவிடப்பட்டிருந்த கட்டடம் சுற்றியுள்ள ஏரியாவை மிரட்டிக்கொண்டிருக்க, என் பயணம் தொடர்ந்தது.

என்னை இந்த வழியாக இழுத்து வந்தது எது? மனதின் அமைதியா? நள்ளிரவின் நிசப்தமா? அல்லது அதோ அந்த புகை மூட்டத்தால் மங்கிவிட்ட முழு நிலவின் வெளிச்சமா?

எதுவாயினும் இந்த நள்ளிரவில் மனதைக் கவர்ந்த ஒரு சில ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களை சைக்கிளில் சென்று கொண்டே ரசிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததே!

இன்னொரு முறை எப்போது வாய்க்குமோ?!

மழை பெய்திருந்தால் இந்த பயணம் இன்னும் அழகானதாய் மாறியிருந்திருக்குமே?!!!

Friday, July 18, 2008

இப்போதைக்கு புதிய பதிவன்

நெடுநாட்களுக்கு பிறகு மீண்டும் பதிவெழுத வந்துள்ளேன்..... ஒரு பழைய வலையுலக வாசகன், இப்போதைக்கு புதிய பதிவன்.