Monday, November 29, 2010

நந்தலாலாவும் அதன் மூலமும்!

நந்தலாலாவை, கிட்டத்தட்ட எல்லா வலைப்பதிவர்களும் 'உலகப்படம்' என்கிற அளவில் புகழ்ந்து தள்ளியாகிவிட்டது.

பாராட்டுபவர்கள் கூறும் விசயங்கள்
* இசை, காட்சியமைக்கப்பட்ட விதம், கேமரா கோணங்கள், பாசத்தை நோக்கிய கதாப்பாத்திரங்களின் பயணம், மிஷ்கினின் நடிப்பு, வசனங்களே இல்லாமல் காட்சிகளில் விளக்கிய விதம், இத்யாதிகள்.

இந்த விமர்சனங்களும் உணர்வுப்பூர்வமான பாராட்டுக்களும், இசை, கேமரா, இயக்கம் என்பவற்றையும் தாண்டி, பாசம் என்கிற ஒரு உந்துதலில் இருந்து வருவதாக எனக்குப் படுகிறது. இந்த வட்டத்திற்குள் இருந்தே பெரும்பாலும் நந்தலாலா படத்தின் விமர்சனங்களும் பார்வைகளும் குவிந்து கிடக்கின்றன(இது, படத்தில் இல்லாத ஒரு உயிரோட்டத்தை நிரப்பிவிடுகிறது என நான் நினைக்கிறேன்!). இதன் பின்னணியில் இருக்கும் உளவியலை ஆராய்ந்து யாராவது ஒரு இடுகை எழுதினால் தேவலை!

சரி, அதையெல்லாம் விடுவோம். நந்தலாலாவின் மூலமான 'கிகுஜிரோ(Kikujiro)' பார்த்தேன். நந்தலாலா அளவிற்கு, இதன் பாதிப்பு இல்லை என்றாலும், அதிலிருந்து சில விசயங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.

*முக்கிய கதாப்பாத்திரங்களான சிறுவன், அவனுடன் படம் நெடுக வருபவர், வழியில் வரும் கதாப்பாத்திரங்களான லாரி ஓட்டுனர், பைக்கில் வரும் இருவர், ஒரு புதமணத் தம்பதி, சந்தில் வைத்து சிறுவனிடமிருந்து காசு திருடமுனைபவன், சிறுவனது அம்மாவின் புதுக் குடும்பம், சிறுவனுடன் வருபவரின் மனநிலை பாதிக்கப்பட்ட அம்மா மற்றும் சிறுவனின் பாட்டி, என பெரும்பாலான கதாப்பாத்திரங்கள் மூலக்கதையில் சித்தரிக்கப்பட்டிருந்தபடியே (70%) இருந்தன.

*காட்சிகளில் இருக்கும் மௌனம், சொல்லப்போனால் சில காட்சிகள் அப்படியே எடுக்கப்பட்டிருந்தன. உ.ம்.  மூலக்கதையின் ஒரு காட்சியில், சிறுவனும் உடன் வருபவரும் ஏதோ ஒரு மர இலையை முதுகில் சொறுகி தலைக்கு மேலே வரும்படி வைத்து நடப்பார்கள். இதை அப்படியே, நம்ம ஊர் பனை ஓலையை வைத்து மிஷ்கின் எடுத்திருக்கிறார்.  இது ஏதேனும் பின்நவீனத்துவ குறியீடோ?! (அப்படி ஏதும் இருந்தால்தான் உலகப்படமா என்று தெரியவில்லை!).

*அப்புறம் இந்த பைக்கில் வரும் இருவர். அவர்களின் உடையலங்காரம் கூட, கிட்டத்தட்ட அதே முறையில் நந்தலாலாவில் ஜோடிக்கப்பட்டிருந்தது! அப்புறம் வழியில் அவர்கள் உறங்குவது (மூலக்கதையில் பெண் மற்றும் அந்தப் பாம்பு இல்லாமல் இருக்கும் - இதே காட்சி).

இதேபோல் இன்னும் சில...

ம். நல்லாத்தான் இயக்கியிருக்காரு. நல்லாத்தான் நடிச்சிருக்காரு. படம் பாராட்டப்படவேண்டியதுதான். வித்தியாசமாக இருக்கிறது. கிகுஜிரோ-வை விட நன்றாக இருக்கிறது, அவருக்கே உரிய ஸ்டைல் - இடுப்பு அளவிற்கு கோணத்தில் இருந்து காட்சிகளைப் படமாக்குவது, காட்சி எடுக்கப்பட்ட விதத்திலேயே பல விசயங்களை விளக்குவது, இப்படி அடுக்கிக் கொண்டு போனாலும்,  ஏதோ ஒண்ணு மிஸ்ஸிங்க். 'நந்தலாலா' அப்படி சிலாகிக்கக் கூடிய அளவிற்கு எனக்கு ஏன் தென்படவில்லை என்று புரியவில்லை. அதில் வரக்கூடிய காட்சிகள் வலிய திணிக்கப்பட்டவை போல தோன்றுவதா(உ.ம். கலவரக் காட்சி - சம்பந்தமே இல்லை), இல்லை, தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் படங்கள் பார்த்ததால் ஏதும் குழப்பமா என்று தெரியவில்லை!!

Thursday, November 11, 2010

இவனையெல்லாம் நடு ரோட்ல நிக்க வச்சு சுடணும்!

செய்தி காதில் விழுந்ததும் மனதில் ஒருவிதமான ‘குறுநகை’ ஒருவினாடியில் தோன்றி மறைந்தது. ஆம்! நான் அந்த என்கவுன்டரை வரவேற்றேன்.

கோயம்புத்தூரில் சிறுவர்களைக் கடத்திக் கொலை செய்த கொலையாளி ‘என்கவுன்டரில்’ கொலை. மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
*****
தினசரிகளில் வாசிக்கும் மோசமான குற்றச் செயல்களைக் கேள்விப்படும்போது பொதுவாகவே நம் மக்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வது என்ன?

”இவனையெல்லாம் போட்டுத் தள்ள ஆள் இல்லையே?!”

”இவனுகளையெல்லாம் நடு ரோட்டுல நிக்க வைச்சு சுடணும்யா! அப்போதான் இவனைப் பார்த்து மத்தவனுங்க திருந்துவானுங்க!”

இதுபோலத்தானே பேசுவதை நாம் கேட்கிறோம். இங்கு யாரும் ”அவனைப் பிடிச்சி, போலீஸ்ல குடுத்து, கோர்ட்ல நிறுத்தி, நீதி விசாரணை பண்ணி, சரியான(!) தண்டனை கொடுக்கணும்யா. அப்போதான் நாடு அமைதியா இருக்கும்”, என்று பேசுவதில்லை.
ஆனால் சிலர், பழுத்த காந்தியவாதிகள் போல அல்லது ‘விருமாண்டி’ கிளைமாக்ஸில் பேசும் கமல் போல,

”இப்படி, சட்டத்தை இவங்களே கையில எடுத்துகிட்டா அப்புறம் எதுக்கு இ.பி.கோ., கோர்ட் இதெல்லாம்”

”என்னதான் இருந்தாலும், கொலைக்குக் கொலைன்னா அப்புறம் நாடு எங்க போகுறது”

”மரண தண்டனையையே ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறோம்! அப்படி இருக்கும்போது, இதுமாதிரி என்கவுன்டர் கலாச்சாரம் மிகவும் கொடியது”

என்றெல்லாம் பேசியதையும் எழுதியதையும், கேட்கவும் படிக்கவும் நேர்ந்தபோது, எனக்கு ஏதேனும் புத்தி பேதலித்து, வெறியனாகிவிட்டேனோ என்ற அச்சம் தோன்றியது. ஆனால், இதே சம்பவத்திற்காக இனிப்பு வழங்கியும், கூட்டங்கள் கூட்டியும், வெடிவெடித்தும், மகிழ்ச்சியாக ஒரு ஊரே (கிட்டத்தட்ட தமிழ்நாடே) கொண்டாடும்போது….

”மக்களுக்காகத்தான் சட்டம், சட்டத்துக்காக மக்கள் இல்லை”.

Wednesday, October 27, 2010

எந்திரன் 2.0 - the ROBOT is back!

கி.பி.2030:
‘ஏன்னா நான் சிந்திக்க ஆரம்பிச்சுட்டேன்’ எனச் சொல்லும் அந்த ரோபோவின் தலையைப் பார்த்தபடியே செல்லும் சிறுமி, மெதுவாக அந்த காட்சிக் கூடத்தைக் கடந்து செல்கிறாள். தூரம் அதிகரிக்க அதிகரிக்க, ரோபோ பார்வையாளர் கண்களில் இருந்து மறைகிறது(சிறுமியின் கண்களிலிருந்து கேமரா கோணம்!).

கி.பி.2011:
*தேவதர்ஷினி கையில் இருந்த பையன், ரோபோ பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறான்(உபயம் - எந்திரன் முதல் பாகத்தில் எந்திரன்1.0 கொடுத்த அட்வைஸ்).
*எந்திரன் 1.0 வைத் தயாரித்த வசீகரனுக்கும் சனாவிற்கும் ஒரு பெண்குழந்தை பிறக்கிறது 
(ஐஸ்வர்யா ராய் 2.0?!).

கி.பி.2035:
*எந்திரனில் சாட்சியாக இருந்த ‘ரெட் சிப்’ ஆவணக் காப்பகத்தில் இருந்து காணாமல் போகிறது.
*சிறுவன் சிட்டி வளர்ந்து பெரியவனாகிவிட்டான். ரோபோக்களைப் பற்றி நிறையப் படித்துக்கொண்டிருக்கிறான். (இவன்தான் செகன்ட் ஹீரோ என்பதால், உங்களுக்குப் பிடித்த ஹீரோவை வைத்து இந்த கதாப்பாத்திரத்தைக் கற்பனை செய்துகொள்ளலாம்).
*இறந்துபோன ப்ரொஃபசர் Bhora-வின் பாழடைந்த ஆராய்ச்சிக் கூடத்தில் சில மர்ம உருவங்கள் எதையோ தேடி அலைகின்றன. (எந்திரன்1.0 அதே கூடத்தில் எந்திரன்2.0 என்ற தற்காலிக வில்லனாக மாறிய காட்சிகள், கஜினி ஸ்டைலில் ஃபிளாஷ்பேக்கில் காட்டப்படுகின்றன). அந்த மர்ம கும்பல் அங்கிருந்த கைவிடப்பட்ட கணிணிகளிலிருந்து எந்திரன் 1.0 வின் ‘நியூரல் ஸ்கிமா’வை லவட்டிக்கொண்டு எஸ்ஸாகிறது.
*ஐஸ்வர்யா 2.0 ஒரு கல்லூரியில் எதையோ படித்துக்கொண்டிருக்கிறார்(?!). சிட்டிக்கும் இவருக்கும் இடையே காதல் வருகிறது (எப்படி வருகிறது? என்றெல்லாம் கேள்வி கேட்கக்கூடாது! அது அப்படித்தான்).

இதேநேரம்,
எந்திரனில் கடைசிக் காட்சியில் காட்டப்பட்ட கண்காட்சிக் கூடத்தில் இருக்கும் சிட்டியின் பாகங்கள், Oceans 10,11 & 12 மற்றும் The Heist படங்களில் வருவது போன்று ஒரு ஹைடெக் திட்டத்தின் மூலம் திருடப்படுகின்றன.

விசயம் தெரிந்ததும் பரபரப்பாகிறது பத்திரிகை உலகம். வசீகரனின் (வயதான ரஜினி) வீட்டு முன்பு பத்திரிகையாளர்கள் குழுமுகின்றனர். கேள்விகள் கேட்டுத் துளைக்கின்றனர். ரோபோ தீவிரவாதிகள் கையில் சிக்கினால் உலகமே ஆபத்தில் சிக்கும் வாய்ப்பு இருக்கிறது என ஊடகங்கள் அறிவிக்கின்றன. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார். இந்த நேரத்தில், செகன்ட் ஹீரோ சிட்டி, வசீகரனைச் சந்தித்து ரோபோக்கள் மீது தனக்குள்ள ஆர்வத்தைப் பகிர்ந்துகொள்கிறார்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு தனது ஆய்வகத்தை மீண்டும் திறக்கிறார் வசீகரன்(ரஜினி). எந்திரன்2.0-வை உருவாக்குகிறார். அவருக்கு உதவுகிறார் நம்ம செகன்ட் ஹீரோ. இந்த நிலையில் எந்திரன்1.0 சீன உளவுத்துறையின் கைகளில் சென்று சேர்கிறது(எவ்வளவு நாளைக்குத்தான் பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்று சொல்லிக்கொண்டிருப்பது?! ஒரு மாறுதல் வேண்டாமா?).. ‘ரெட் சிப்’ உதவியால் எந்திரன்2.0 வில்லனை மீண்டும் உருவாக்குகிறார்கள், சீன உளவுத்துறையினர். மேலும், அவர்கள் வில்லன் ரோபோக்களின் கட்டுப்பாடுகளைத் தங்கள்வசமே வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். இதற்கான அட்வான்ஸ்ட் மென்பொருளைச் சீனாவிற்குத் தயாரித்து வழங்குகிறது ஓர் இந்தியன் எம்.என்.சி. கம்பெனி(!) . அதற்கான நிரல் கட்டமைப்பு, டெஸ்டிங், டெலிவரி எல்லாமே அதன் பின்னணி புரியாமல் செய்து கொடுக்கிறது இந்த நிறுவனம். வில்லன் ரோபோ தன்னைத்தானே தயாரித்துக்கொண்டு பல்கிப் பெருகுகிறது. சீனா, இந்தியாவின் மீது படையெடுக்கத் தயாராகிறது!

எந்திரன்2.0 வில்லன் தலைமையில் சீனப் படைகளுக்கும் ரஜினி உருவாக்கும் எந்திரன்2.0 விற்கும் இடையே நடக்கும் பயங்கர யுத்தங்கள் இரண்டாம் பாதியை ஆக்கிரமிக்க டெர்மினேட்டர் ஸ்டைலில் கிளைமாக்ஸ்.
இறுதியில் ரஜினி தயாரித்த எந்திரன்2.0 (நல்ல ரோபோ) சீனப் படைகளை வென்றுவிட, செகன்ட் ஹீரோ ஐஸ்வர்யா2.0 வை மணமுடிக்க - சுபம்!

*************
ஐஸ்வர்யா2.0 விற்குப் பதில் வேறு யாரையேனும் வைத்து கற்பனை செய்துகொள்ளலாம். 
*ரஜினி, எந்திரன்2.0 வை ஆய்வகத்தில் உருவாக்கும்போது, அவர் மகள் காஃபி கொடுக்கிற சாக்கில் செகன்ட் ஹீரோவை சைட் அடித்துவிட்டு ஒன்று இரண்டு டூயட் பாடல்ளுக்கு ஆடிவிட்டுச் செல்வது,
*வில்லன் ரோபோ நல்ல ரோபோவுக்கு விர்ச்சுவல் கான்ஃபரன்ஸில் தோன்றி பஞ்ச் டயலாக் பேசிவிட்டுச் செல்வது, 
*இமயமலையிலிருந்து படைகள் வந்து இறங்குவதால் ‘பரமசிவன் கோபாக்னியைக் கக்குகிறார், அவரைச் சாந்திப்படுத்த யாகம் நடத்துவோம்’ என்று ஒரு கும்பல் கிளம்புவது, 
*வில்ல எந்திரன்களைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட மென்பொருளைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காக ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியரை ரஜினி வரவழைப்பது, 
*அந்த ஸ்மார்ட்டான பையன், சாஃப்ட்வேரில் கண்டுபிடிக்கப்படாத ஒரு ‘பிழை’(Defect) இருப்பதை உன்னைப்போல் ஒருவன் ஸ்டைலில் கண்டுபிடித்து வசீகரனிடம் சொல்வது, 
*அந்த வீக்னஸை வைத்தே எந்திர வில்லன்களைச் சமாளிப்பது, 

என்று மசாலா ஐட்டங்களை இட்டு நிரப்பி ஒரு சூப்பர் ‘அறிபுனை’[Sci Fi] கதையை உருவாக்கலாம். 
***********
இந்தக் கதை பற்றி, இயக்குனர் சங்கரிடமோ, பீட்டர் ஜாக்ஸனிடமோ, ஜேம்ஸ் கேமரூனிடமோ இல்லை ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்-கிடமோ சொல்லி அவர்களை இதை இயக்குவதற்குச் சம்மதிக்க வைப்பவர்களுக்கு, தக்க சன்மானம் வழங்கப்படும் என்று கூறி முடிக்கிறேன்! 

படத்தில் வரும் மென்பொருள் சோதனையாளனாக (?!) (சாஃப்ட்வேர் டெஸ்டர்) நானேதான் நடிப்பேன் என்பதையும் கூறிக்கொள்கிறேன். :)

Wednesday, August 4, 2010

மேக் புக்கும் தமிழும் - MacBook Pro and Tamil

கடந்த மூன்று வாரங்களாக 'மேக்புக் ப்ரோ' எனப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கணிணியை (MacBook Pro), பணிநிமித்தம் பயன்படுத்தி வருகிறேன்.  இது என் கையில் கிடைத்ததும் முதல் நாள் பணிமுடிந்ததும் நான் செய்தது தமிழ் இணையதளங்களை வாசிக்க முயற்சி செய்தது. ஆனால், எல்லாமே கட்டம் கட்டமாகத் தெரிந்தன. இதோ பாருங்கள்...


நானும் என்னவெல்லாமோ செய்து பார்த்தேன். கூகிளாண்டவரிடம் கெஞ்சி கூத்தாடி கேட்டேன். ஆனால், என்னால் முடிந்தது எல்லாம் ஆங்கிலத்திலேதான் செய்ய முடிஞ்சது. அப்போதுதான் 'மேக்' குழுமத்தில ஒருவர் 'தமிழ் யுனிகோட் எழுத்துரு' ஏதாவது ஒன்றை நிறுவினால் போதும் என்றார். நானும் கையில் கிடைத்த தமிழ் எழுத்துருக்களையெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நிறுவிப் பார்த்தேன். இப்போது, கட்டம் கட்டமாக இல்லாமல் ஒரு புதிய வரிவடிவத்தில் எழுத்துக்கள் தோன்றின. ஒருவேளை நடைபெற்றுக்கொண்டிருக்கும் விவாதங்களைக் கருத்தில் வைத்து, தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை ஆப்பிள் மேக் நிறுவனத்தார் இப்போதே நடைமுறையில் கொண்டுவந்துவிட்டார்களோ! என்று ஒரு சந்தேகம் வந்துவிட்டது.  இதோ பாருங்கள் இந்தப் படத்தை!


'இப்படியே படித்துக்கொண்டிருந்தால், தமிழ் வரிவடிவ மாற்றம் வந்தாலும் எந்தச் சிக்கலும் இல்லாமல் வாசிக்க முடியும்' என என்னக்கு நானே நினைத்துக்கொண்டேன். இருந்தாலும் மூன்று வாரம் ஆகிவிட்டபடியாலும், அதற்கு மேல் கூகிளுவதற்குப் பொறுமையில்லாமலும் பதிவர்கள் சிலரிடம் உதவி கோரினேன். அப்போதான் செந்தழல் ரவி அண்ணா இந்த சுட்டியை அனுப்பினாங்க.

http://tamilcpu.blogspot.com/2010/04/106.html

இதப் படிச்சதுக்கு அப்புறம்தான் புரிஞ்சது. மேக் இயங்குதளத்தை நிறுவும்போது,  விருப்பத் தேர்வுகள் பிரிவில் இருக்கும் ஒரு எழுத்துருதான் 'Inaimathi.tff'. இதுதான் யுனிகோட் தமிழ் எழுத்துருக்களை மேக்புக் ப்ரோவில் காண்பிக்கும் வேலையைப் பார்க்கிறது. அது என்னுடைய கணிணியில் இல்லை - அதனுடனே சேர்ந்து இன்னும் சில தமிழ் எழுத்துருக்களும். பின்னர் அதற்கான குறுவட்டை எடுத்து இவற்றையெல்லாம் சேர்த்து நிறுவியதும் கணிணியில் தமிழ் எழுத்துக்கள் எந்த வரிவடிவ குளறுபாடும் இல்லாமல் தெளிவாகத் தெரிந்தன. இப்போது இந்த இடுகையை(ஒரு வாரத்திற்குப் பிறகு) எழுதி முடித்துவிட்டேன்.

மேற்கண்ட சுட்டியில் மேக்புக்் 10.6 ல் இருக்கும் மிக எளிமையான தமிழ் உள்ளீடு முறை பற்றி அழகாக விளக்கியிருக்கிறார் ந.ர.செ. ராஜ்குமார்.

''அப்போ நீ என்னடா சொல்ல வர்றே؟'' என்கிறீர்களா....

இங்கு நான் சொல்ல வருவது ஒன்றே ஒன்றுதான். மேற்கண்ட சுட்டியைப் பயன்படுத்தி உள்ளீடு முறையைத் தேர்ந்தெடுத்த பின்பு ஆங்கிலம் மற்றும் தமிழுக்கு மாறுவதற்கு சில 'சுருக்கு விசை' களை நீங்கள் வைத்துக்கொள்ளலாம். எப்படியெனில்,

System Preferences -> Keyboard -> Keyboard Shortcuts -> Keyboard & Text Input -> Select the Previous Input Source

இங்கு உங்களுக்குப் பிடித்தமான 'சுருக்கு விசை(களை)' தேர்வு செய்து கொள்ளலாம். நினைத்த நேரத்தில் தமிழ் - ஆங்கிலத்தில் மாறி மாறி தட்டச்சலாம்.

"அது சரி 'ஆப்பிள் மேக்' னா என்ன؟" என்பவர்களுக்கு..... இதோ
நானும் இதப்பார்த்து கொஞ்சநாள்தாங்க ஆச்சு....

Friday, July 2, 2010

30 ரூபாய் பயணச்சீட்டும் மாநகர காவல்துறையும்

கடந்த வாரத்தில் ஒருநாள்:

அண்ணா சாலையில் டி.எம்.எஸ். நிறுத்தத்தில், நான் வந்துகொண்டிருந்த பேருந்து நீண்ட வரிசையில் நின்றது. முன்னால் ஏற்கெனவே சில பேருந்துகள். திடீரென்று சில காவலர்கள் பேருந்தினுள் நுழைந்து ஒவ்வொருவரது பை, மற்ற பொருட்களைச் சோதித்தார்கள். அதற்குப் பிறகுதான் அது நடந்தது. ஒவ்வொருவரது டிக்கெட்டையும் பரிசோதித்தார்கள். எனக்கு திக் திக்கென்றது.

பார்ப்பதற்கு 'காவல்துறையின் உயர் அதிகாரிகள் போல...!' என யோசிக்கும்போதே... அங்கு என்ன?..  அது கலைஞர் தொலைக்காட்சியின் செய்திப்பிரிவின் ஒரு அணி. இந்த திடீர் பரிசோதனையை கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்காக.

*****
காவலர்: டிக்கெட்ட காமி.
நான்: இந்தாங்க சார்

காவலர்: தம்பி 30 ரூபாய் பாஸ்ல எங்க போறீங்க?!
நான்: இல்ல வீட்டு ஓனர் இங்கேதான் இருக்காங்க, வாடகைய குடுத்துட்டு போக வந்தேன்.

காவலர்: அதுக்கு எதுக்கு 30 ரூபா பாஸு? தம்பி கீழ இறங்குங்க. ஐயாவ வந்து பாருங்க... சார் இங்க ஒருத்தன் இருக்கான் சார் (கீழே இருந்தவரைப் பார்த்து).

காவலர்: தம்பி பர்ஸ எடுங்க, பாக்கெட்ட செக் பண்ணுங்கய்யா... தம்பி எங்கயிருந்து வர்றீங்க?
நான்:வேளச்சேரியிலயிருந்து.


காவலர்: சரி என்னது இது? 30 ரூபா பாஸ்ல வர்றீங்க? மார்கெட்டிங்ல இருக்கீங்களோ?
நான்: இல்ல சார். சும்மாதான்.

காவலர்: எங்க போறீங்க?... பர்ஸ்ல ஒண்ணும் இல்லியா? (பர்ஸ் செக் பண்ணினவரைப் பார்த்து). எங்க காமிங்க. என்னய்யா போட்டா, யாரு இது?
நான்: "வேகா" சார்! இந்த 'பசங்க' படத்துல வருமே, அந்த பொண்ணு!

காவலர்: அதெல்லாஞ் சரி, 30 ரூபா பாஸுக்கு இன்னும் பதில் வரலியே! தம்பி எங்க வேல செய்றீங்க. ஐடி கார்ட காமிங்க!
நான்: (எ.கொ.இ.!!! இன்னிக்கு பார்த்து ஐடி கார்ட எடுத்துட்டு வரலியே! - மனதிற்குள் நினைத்துக்கொண்டே). சார் ஐடி கார்ட எடுத்துட்டு வரல சார். இன்னிக்கு நான் ஆஃபிஸ்க்கு போகல. வீட்டு ஓனரைப் பார்க்கத்தான் வந்தேன்.

காவலர்: அதான...., ஐடி கார்ட் இருக்காதே!
*****

இந்த மாதிரி நிச்சயம் நடந்திருக்கும் - அன்றைக்கு 30 ரூபாய் பயணச்சீட்டில் பயணித்திருந்தால்! வழக்கமாக, நேரம் கிடைக்கும் சனிக்கிழமைகளில் 30 ரூபாய் (ஒருநாள் விருப்பம்போல் பயணம் செய்யும் சீட்டு) பயணச்சீட்டு எடுத்துக்கொண்டு சென்னையை வலம்வருவது எனது பழக்கம். பொழுதுபோகாமல் அண்ணா நகர் மேற்கு, மணலி, காலேஜ் ரோடு என்று சம்பந்தமே இல்லாத இடங்களில் சுற்றிய அனுபவங்கள் உண்டு. இதுவரை 50-க்கும் மேற்பட்ட ஒருநாள் பயணச்சீட்டுகள் வாங்கியிருப்பேன்.

***** (விட்ட இடத்திற்கு வருவோம்) - டி.எம்.எஸ். நிறுத்தம்:

உயர் அதிகாரி ஒருவர் கலைஞர் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவு குழுவினருக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தார்.

"பஸ்ல திருட்டு போகுதுன்னு நிறைய கம்ப்ளெயின்ட் வருது. இப்ப ரீஸன்டா பார்த்தீங்கன்னா, இது கொஞ்சம் அதிகமாயிருக்குது. ஏதாவது பொருளை உங்ககிட்ட வச்சிகிடுங்கன்னு கொடுக்கிறது. அத கொடுக்கும்போது வாங்கும்போது உங்க பொருள் எதையாவது திருடுறது, இப்படி. இதுல பார்த்தீங்கன்னா, திருடிகிட்டு மாட்டிக்கிறவங்க பெரும்பாலும் ஒன்டே பாஸ்ல வர்ற ஆட்கள். இந்த ஒரு நாள் பாஸ் வைச்சிருக்கிறவங்க நினைக்கிற இடத்துல இறங்கி வேற பஸ்ல ஏறிக்கலாம். இது திருடறவங்களுக்கு வசதியாப் போகுது. அதனால இந்த மாதிரி திடீர் சோதனைகள் நடத்துறோம். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துற விதமா இது சம்பந்தமா அறிவுரையும் கொடுக்கிறோம்..... " 

இன்னும் பேசிக்கொண்டே இருந்தார். பயணிகளிடமும் இது குறித்து கருத்து கேட்கப்பட்டது!

*****

நல்ல வேளையாக அன்று நான் 30 ரூபாய் (ஒருநாள் பயணச்சீட்டு) வாங்கவில்லை. வாங்கியிருந்தால்....வாங்கி கட்டியிருப்பேன்!

படம்:http://velang.blogspot.com/2009/01/30.html 
(இப்போது பழக்கத்தில் இருக்கும் ஒருநாள் பயணச்சீட்டு வண்ணமயமாக இருக்கிறது!)