Monday, June 27, 2011

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மெழுகுவர்த்தி ஏந்தல் நிகழ்வு

இடம்: மெரினா கடற்கரை, சென்னை
நாள்: ஜூன் 26, 2011.



சித்திரவதைக்கு ஆளானோருக்கு ஆதரவு தெரிவிக்கும் சர்வதேச நாள் 
(International Day in Support of Victims of Tortured)

சித்திரவதைக்கு ஆளானோருக்கு ஆதரவு தெரிவிக்கும் சர்வதேச நாளான ஜூன் 26-ல், இலங்கையில் போர் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்துவரும் அடக்குமுறைகள் அட்டூழியங்களால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்காகவும், இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டும் வதைக்கப்பட்டும் துன்பங்களை அனுபவித்துவரும் தமிழ் மீனவர்களுக்காகவும், மெழுகுதிரி(மெழுகுவர்த்தி) ஏந்தி ஆதரவு தெரிவிக்கும் நிகழ்வு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. இந்த நிகழ்வை முன்னிருந்து ஒருங்கிணைத்தது மே 17 இயக்கம்.

ஐயாயிரத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில், போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஆதரவு தெரிவித்தும், போர்க்குற்றங்கள் புரிந்த ராஜபக்சே மற்றும் கூட்டத்தாரை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தக் கோரியும், ஈழத்தில் மக்கள் அமைதியாக வாழ வழிகளை ஏற்படுத்தக்கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன!



ஈழம் குறித்த எண்ணத்தோடு கூடியிருந்த அத்தனை ஆயிரம் மக்களுக்கு நடுவே அமர்ந்திருந்த அந்த உணர்வு, மிக உன்னதமாக இருந்தது. ஈழமக்களுக்கு ஆதரவு தெரிவித்து நடந்த பொதுநிகழ்வுகளில் நான் கலந்துகொண்ட முதலாவது நிகழ்வு இது. பாதிக்கு மேற்பட்டோர் முதல்தடவை வந்தவர்களாகத்தான் இருப்பார்கள் என நினைக்கிறேன்.



வேதனைகளை அனுபவிக்கும் மக்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் ராஜபக்சே மற்றும் இலங்கை பேரினவாதக் கூட்டத்திற்கு தகுந்த தண்டனையும், அடைபட்டிருக்கும் மக்களுக்கு இயல்பு வாழ்வுமே தற்காலத் தேவை, என்பது யாரும் சொல்லாமலே விளங்கியது!

இலங்கை பேரினவாதத்தின் சித்ரவதைகளை அனுபவிக்கும் நம் மக்களுக்க்கு 
ஆதரவாக, எந்த அரசியல் கட்சிகளின் தலையீடும் இன்றி இத்தனை ஆயிரம் மக்கள் ஒன்றுதிரண்டது, இன்னும் கொஞ்சம் நம்பிக்கையையும், ஏராளமான நெகிழ்ச்சியையும் கொடுத்தது!  


நல்ல ஒருங்கிணைப்பு:
எல்லோரும் பாராட்டும் விதத்தில் நிகழ்வை ஒருங்கிணைத்த இந்தக் குழுவிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய விசயங்கள் நிறைய இருக்கின்றன.

படங்கள்:
நண்பன் குமார். இன்னும் சில புகைப்படங்களுக்கான சுட்டி இங்கே!

No comments: