Saturday, October 15, 2011

"புதிய தலைமுறை"யின் அபத்தம்!

'அணுவின்றி' என்று தலைப்பிட்டு இந்தவார 'புதிய தலைமுறை(!)' (20 Oct 2011) தலையங்கம் எழுதியுள்ளது.

அதிலிருந்து சில வரிகள்...

//தமிழகம் மின்பற்றாக்குறையிலிருந்து விடுபட வேண்டுமானால், அதற்கு ஒரே வழி மின்சார உற்பத்தியை அதிகரிப்பதுதான். அதுவும் கணிசமான அளவு பெருக்குவதுதான். தமிழகத்தில் பாயும் நதிகளின் நீர்வரத்து, அண்டை மாநிலங்கள் அனுமதிப்பதைப் பொருத்து இருக்கிறது. காற்று ஆண்டு முழுவதும் கிடைக்காது. சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்வது அதிகச் செலவும் இடமும் பிடிக்கும். இவை எதைக் கொண்டும் கணிசமான அளவு மின்னுற்பத்தி செய்ய இயலாது. நிலக்கரி, பெட்ரோல் விளி மண்டலத்தில் கரிப்படலங்களை ஏற்படுத்தி பருவ நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும். இந்தச் சூழலில் அணு மின்சாரம்தான் கணிசமான உற்பத்திக்கான வழி...//

//ஓடுகிற ஆறு, ஓசையிடும் கடல், அடுப்பில் எரியும் நெருப்பு, மின்சாரம், போக்குவரத்து, இயந்திரங்கள், ஏன் உண்ணும் உணவில் கூட விபத்துக்கான சாத்தியங்கள், பக்க விளைவுகள் உண்டு. அதற்காக அவையே வேண்டாம் எனச் சொல்லி விடுவோமா? தினம் சாலை விபத்துகளைப் படிக்கிறோம். பயணங்களை நிறுத்தி விட்டோமா? ரயில்கள் விபத்துக்குள்ளாகின்றன எனத் தெரிந்தும் ஏன் முன்பதிவில் இத்தனை முண்டியடித்தல்?

உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொண்டு உற்பத்தியில் இறங்குவதுதான் நடைமுறைக்கு ஏற்றது. கூடங்குளப் போராட்டக் குழுவினர் எந்த மாதிரியான பாதுகாப்பு வேண்டும் எனக் கேட்டுப் பெறட்டும். அதை விட்டு பேச்சுவார்த்தையே நடத்தமாட்டோம், வல்லுநர்கள் உட்பட யார் சொன்னாலும் அதற்கு செவி மடுக்கமாட்டோம், அணுமின் நிலையத்தை மூடியே ஆக வேண்டும் எனக் கோருவது நியாயமானதல்ல. //

*******

அணுஉலையின் ஆபத்துகளை அறிந்துகொண்டு விழிப்புணர்வு பெற்று, உலகமே அணுஉலை வேண்டாம் என்கிற நிலைக்குச் சென்று கொண்டிருக்கும்போது,'புதிய தலைமுறை' (இனியொரு விதி செய்வோம்!) என்று பெயரை வைத்துக்கொண்டு, வெற்றிலை மெல்லும் பழையகால பாட்டிபோல ஒரு பக்கத்திற்கு புலம்பி வைத்திருக்கிறது. 

உலகத்தில் பல இடங்களிலும் மாற்று எரிபொருள், இயற்கை எரிபொருள், சூரிய சக்தியைப் பயன்படுத்துதல், உயிரியல் எரிபொருட்கள் என்று ஆராய்ச்சிகள் முடுக்கிவிடப்பட்டிருக்கும் இக்காலத்தில், அதற்கான உந்துதலை இங்கிருக்கும் மிகப்பெரிய சக்தியான இளைய சமுதாயத்திடம் விதைக்காமல்,  இயற்கை/மாற்று ஆற்றல் ஆராய்ச்சிகளில் இந்திய இளைஞர்களின் பங்கு என்ன? என்று கேள்வி கேட்காமல், இளைஞர்களிடம் அபாயகரமான அணுவின் மீது மோகத்தை விதைக்கிறது 'புதிய தலைமுறை(!)'.

இனி வரும் காலத்தில் இந்திய மக்களுக்குத்தான் அதிய மின்னாற்றல் தேவைப்படும். அதற்காக இந்தியா முழுவதும் அணுஉலைகள் வைத்தாலும் 10% ஆற்றல்தான் அதிலிருந்து பெறமுடியும் என்பது இந்த அணுஉலை வல்லுநர்களே ஏற்றுக்கொள்ளும் உண்மை. கோடிக்கணக்கான மக்களையும் அவர்களின் தலைமுறைகளையும் பணயம் வைப்பது வெறும் 10% ஆற்றலுக்காகவா? என்று கேள்வி எழுப்பாமல் இப்படி எழுதியிருப்பது, 'புதிய தலைமுறையினரை', 'புழுத்த தலைமுறையினராக' மாற்றவா?

Tuesday, September 27, 2011

சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக...


சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஆயிரம் குரல்களைத் தாங்கி வருகிறது இந்தப் பறையடி...




பரமக்குடி தலித் படுகொலைகள் - கருத்தரங்கு
தேவநேயப் பாவாணர் அரங்கம், அண்ணாசாலை, சென்னை.
24 செப்டம்பர் 2011.
புத்தர் கலைக்குழுவினர் நிகழ்த்திய பறையடியில் இருந்து ஒரு பகுதி.....


Thursday, September 1, 2011

சென்னை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றில் ஒருநாள்!

கடந்த செவ்வாயன்று மரண தண்டனை நாள் குறிக்கப்பட்ட 'பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன்' இவர்களது தண்டனையை 8 வாரங்களுக்கு நிறுத்திவைக்கக் கூறி, இடைக்காலத் தடை பிறப்பித்தது சென்னை உயர்நீதிமன்றம். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்விற்கு சில வினாடிகளுக்குப் பின்னர் நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான தமிழர்களின் மகிழ்ச்சிக்கொண்டாட்டங்கள் இதோ புகைப்படங்களாக.

மூன்று தமிழர்களையும் விடுவிப்பதில் கிடைத்திருக்கும் ஒரு முதல்கட்ட வெற்றியைக் கொண்டாடுகிறபோது உணர்ச்சிவெள்ளத்தில் சென்னை உயர்நீதிமன்ற வளாகம் மிதந்ததை இந்தப் படங்களில் பார்க்கலாம்!






இதைத்தொடர்ந்து கோயம்பேட்டில் உண்ணாவிரதப் பந்தலின் முன்பு தமிழார்வலர்கள் இனிப்பு வழங்கியும் மேளதாளத்தோடு ஆடிப்பாடியும் கொண்டாடினார்கள்.



ஐந்துநாட்களாகத் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த வழக்கறிஞர்கள் வடிவு, கயல் மற்றும் சுஜாதா - 'மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை' தீர்ப்பு கேள்விப்பட்டதும், மகிழ்ச்சியில்! 

Sunday, August 28, 2011

போர்க் குற்றம், இனப்படுகொலைக்கு எதிரான மன்றம் - அறிமுகக் கூட்டம்


சேவ்-தமிழ்சு முயற்சியால், ஜூன்-2 ல் பெங்களூரூவில் தொடங்கப்பட்ட, 'போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான மன்றம்' மூலம் பல்வேறு மாநில(கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்காளம், டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் கேரளா) மனித உரிமை மற்றும் மக்கள் இயக்கங்களின் ஆதரவை, இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கு எதிராகத் திரட்டி வருகிறது. அதன் மையமாக, நேற்று மன்றத்தின் தமிழ்நாடு பிரிவின் சார்பாக 'பத்திரிகையாளர்கள் சந்திப்பு' மற்றும் அறிமுகக் கூட்டமும் நடைபெற்றது. 

மாலை 3 மணியளவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஏராளமான ஊடகங்கள் கலந்துகொண்டு, மன்றத்தின் தமிழக வரவை நல்வரவாக்கிவிட்டன.  

மன்றத்தின் அரங்கக் கூட்டம் ''தெற்காசிய அரசுகளும் மானுட நீக்கமும்!'' என்ற தலைப்பில் மாலை 6:00 மணியளவில், தெய்வநாயகம் பள்ளி, தியாகராய நகரில் வைத்து நடைபெற்றது. தமிழினப் படுகொலை புரிந்துவரும் இலங்கை அரசு, நீதியற்ற முறையில் மரண தண்டனை விதிக்கும் இந்திய அரசு, இவற்றை முன்னிருத்தி கூட்டத்திற்கான தலைப்பு தெரிந்தெடுக்கப்பட்டிருந்தது. 

போர்க்குற்றம், இனப்படுகொலைக்கு எதிரான மன்றத்தில் மற்ற மாநில பிரிவுகள் சார்பில் வெவ்வேறு மாநில பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 

1.திரு. ஆஸிஸ் - ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் இயக்கம், டெல்லி
2. வழக்கறிஞர்.சந்திரசேகர் - ஆந்திரப்பிரதேச சிவில் லிபர்டி கமிட்டி(APCLC), ஆந்திரா
3. பேராசிரியர்.மணிவண்ணன் (சென்னை பல்கலைக்கழகம்)
4.திரு.கண.குறிஞ்சி -மக்கள் ஜனநாயக குடியியல் ஒன்றியம் (PUCL)
5. தோழர்.தியாகு - தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

இவர்களோடு, 
மும்பை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி. திரு.H.சுரேஷ் அவர்கள் கலந்துகொண்டு மரண தண்டனைக்கு எதிராக தன்னுடைய வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்தார். 

நிகழ்விலிருந்து சில படங்கள் உங்கள் பார்வைக்கு...










மரணதண்டனைக்காகச் சிறையில் காத்திருக்கும் மூவரில் ஒருவரான பேரறிவாளன் அவரின் தாய்.

மும்பை, முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி. H.சுரேஷ் அவர்கள் பேசியதை தோழர்.தியாகு மொழிபெயர்த்தார்.


மரண தண்டனைக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் - 2ம் நாள்

பேரறிவாழன், சாந்தன் மற்றும் முருகன் இம்மூன்று தமிழர்கள் சார்பாக குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்த கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து செப்டெம்பர் 9, அதிகாலை - தண்டனை தேதியாகக் குறிக்கப்பட்டது.

இம்மூன்று தமிழர்களின் மரண தண்டனையை ரத்துசெய்யக்கோரி, மூன்று வழக்கறிஞர்கள் வெள்ளிக்கிழமை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலேயே காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்கள். நேற்று(சனிக்கிழமை) இந்த உண்ணாவிரதம் கோயம்பேடு, ஆக்ஸிஸ் வங்கி அருகே தொடர்ந்து நடைபெற்றது. ஆர்வலர்களும் ஊடகங்களும் நிறைந்திருந்த உண்ணாவிரதத் திடலில் இருந்து சில புகைப்படங்கள்.