Tuesday, September 27, 2011

சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக...


சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஆயிரம் குரல்களைத் தாங்கி வருகிறது இந்தப் பறையடி...




பரமக்குடி தலித் படுகொலைகள் - கருத்தரங்கு
தேவநேயப் பாவாணர் அரங்கம், அண்ணாசாலை, சென்னை.
24 செப்டம்பர் 2011.
புத்தர் கலைக்குழுவினர் நிகழ்த்திய பறையடியில் இருந்து ஒரு பகுதி.....


Thursday, September 1, 2011

சென்னை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றில் ஒருநாள்!

கடந்த செவ்வாயன்று மரண தண்டனை நாள் குறிக்கப்பட்ட 'பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன்' இவர்களது தண்டனையை 8 வாரங்களுக்கு நிறுத்திவைக்கக் கூறி, இடைக்காலத் தடை பிறப்பித்தது சென்னை உயர்நீதிமன்றம். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்விற்கு சில வினாடிகளுக்குப் பின்னர் நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான தமிழர்களின் மகிழ்ச்சிக்கொண்டாட்டங்கள் இதோ புகைப்படங்களாக.

மூன்று தமிழர்களையும் விடுவிப்பதில் கிடைத்திருக்கும் ஒரு முதல்கட்ட வெற்றியைக் கொண்டாடுகிறபோது உணர்ச்சிவெள்ளத்தில் சென்னை உயர்நீதிமன்ற வளாகம் மிதந்ததை இந்தப் படங்களில் பார்க்கலாம்!






இதைத்தொடர்ந்து கோயம்பேட்டில் உண்ணாவிரதப் பந்தலின் முன்பு தமிழார்வலர்கள் இனிப்பு வழங்கியும் மேளதாளத்தோடு ஆடிப்பாடியும் கொண்டாடினார்கள்.



ஐந்துநாட்களாகத் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த வழக்கறிஞர்கள் வடிவு, கயல் மற்றும் சுஜாதா - 'மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை' தீர்ப்பு கேள்விப்பட்டதும், மகிழ்ச்சியில்! 

Sunday, August 28, 2011

போர்க் குற்றம், இனப்படுகொலைக்கு எதிரான மன்றம் - அறிமுகக் கூட்டம்


சேவ்-தமிழ்சு முயற்சியால், ஜூன்-2 ல் பெங்களூரூவில் தொடங்கப்பட்ட, 'போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான மன்றம்' மூலம் பல்வேறு மாநில(கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்காளம், டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் கேரளா) மனித உரிமை மற்றும் மக்கள் இயக்கங்களின் ஆதரவை, இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கு எதிராகத் திரட்டி வருகிறது. அதன் மையமாக, நேற்று மன்றத்தின் தமிழ்நாடு பிரிவின் சார்பாக 'பத்திரிகையாளர்கள் சந்திப்பு' மற்றும் அறிமுகக் கூட்டமும் நடைபெற்றது. 

மாலை 3 மணியளவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஏராளமான ஊடகங்கள் கலந்துகொண்டு, மன்றத்தின் தமிழக வரவை நல்வரவாக்கிவிட்டன.  

மன்றத்தின் அரங்கக் கூட்டம் ''தெற்காசிய அரசுகளும் மானுட நீக்கமும்!'' என்ற தலைப்பில் மாலை 6:00 மணியளவில், தெய்வநாயகம் பள்ளி, தியாகராய நகரில் வைத்து நடைபெற்றது. தமிழினப் படுகொலை புரிந்துவரும் இலங்கை அரசு, நீதியற்ற முறையில் மரண தண்டனை விதிக்கும் இந்திய அரசு, இவற்றை முன்னிருத்தி கூட்டத்திற்கான தலைப்பு தெரிந்தெடுக்கப்பட்டிருந்தது. 

போர்க்குற்றம், இனப்படுகொலைக்கு எதிரான மன்றத்தில் மற்ற மாநில பிரிவுகள் சார்பில் வெவ்வேறு மாநில பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 

1.திரு. ஆஸிஸ் - ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் இயக்கம், டெல்லி
2. வழக்கறிஞர்.சந்திரசேகர் - ஆந்திரப்பிரதேச சிவில் லிபர்டி கமிட்டி(APCLC), ஆந்திரா
3. பேராசிரியர்.மணிவண்ணன் (சென்னை பல்கலைக்கழகம்)
4.திரு.கண.குறிஞ்சி -மக்கள் ஜனநாயக குடியியல் ஒன்றியம் (PUCL)
5. தோழர்.தியாகு - தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

இவர்களோடு, 
மும்பை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி. திரு.H.சுரேஷ் அவர்கள் கலந்துகொண்டு மரண தண்டனைக்கு எதிராக தன்னுடைய வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்தார். 

நிகழ்விலிருந்து சில படங்கள் உங்கள் பார்வைக்கு...










மரணதண்டனைக்காகச் சிறையில் காத்திருக்கும் மூவரில் ஒருவரான பேரறிவாளன் அவரின் தாய்.

மும்பை, முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி. H.சுரேஷ் அவர்கள் பேசியதை தோழர்.தியாகு மொழிபெயர்த்தார்.


மரண தண்டனைக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் - 2ம் நாள்

பேரறிவாழன், சாந்தன் மற்றும் முருகன் இம்மூன்று தமிழர்கள் சார்பாக குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்த கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து செப்டெம்பர் 9, அதிகாலை - தண்டனை தேதியாகக் குறிக்கப்பட்டது.

இம்மூன்று தமிழர்களின் மரண தண்டனையை ரத்துசெய்யக்கோரி, மூன்று வழக்கறிஞர்கள் வெள்ளிக்கிழமை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலேயே காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்கள். நேற்று(சனிக்கிழமை) இந்த உண்ணாவிரதம் கோயம்பேடு, ஆக்ஸிஸ் வங்கி அருகே தொடர்ந்து நடைபெற்றது. ஆர்வலர்களும் ஊடகங்களும் நிறைந்திருந்த உண்ணாவிரதத் திடலில் இருந்து சில புகைப்படங்கள்.







Wednesday, July 6, 2011

போர்க்குற்றம், இனப்படுகொலைக்கு எதிராக!

சேவ்-தமிழ்ஸ் (http://save-tamils.org) முயற்சியால், கடந்த ஜூன் 2 ஆம் தேதி பெங்களூரூவில், கேரள, ஆந்திர, கர்நாடக மற்றும் தமிழக மனித உரிமை அமைப்புகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து ‘போர்க்குற்றம், இனப்படுகொலைக்கு எதிரான மன்றத்தைத்(“Forum against War Crimes and Genocide”) தொடங்கின. அதன் தொடர்ச்சியாக, மன்றத்தின் கர்நாடகக் குழு(Forum Against War Crimes and Genocide - Karnataka State Committee), சார்பில் ஜூலை 2, பெங்களூருவில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த பல்வேறு மனித உரிமை அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலை குறித்து தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து ஈழத் தமிழர்களுக்கு தம் ஆதரவை வழங்கினர்.

மன்றத்தின் கர்நாடகக் குழுவில்: மக்கள் சனநாயக முன்னணி(PDF), தலித் சுயமரியாதை இயக்கம்(DSR), பெடஸ்ட்ரியன் பிக்சர்ஸ்(Pedestrian Pictures), கர்நாடக மாணவ அமைப்பு(KSO), கர்நாடக ஜன சக்தி & கர்நாடக வித்யார்தி வேதிகே, சமதா மகிள வேதிகே (All India Progressive Women’s Association), புதிய சோஷலிச மாற்று - Tamils solidarity, மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு(NCHRO) மற்றும் அனைத்து கர்நாடக தமிழ் அமைப்புகள் உள்ளன.

மாலை 4:30 மணியிலிருந்து 8:30 வரை நடந்த நிகழ்வில் சுமார் 100 பேர் கலந்துகொண்டனர். இதில் பெரும்பாலானோர் கன்னடர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்வு முழுவதும் கன்னடம் மற்றும் ஆங்கிலத்திலேயே நடத்தப்பட்டது. இலங்கையில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்டப் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் வெளிப்படும் புகைப்படங்கள் காட்சிக்கும் வைக்கப்பட்டிருந்தன.


நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துக்களை பதிவு செய்தவர்கள்:
*மக்கள் ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த திரு.நகரிகரே ரமேஷ்
*கர்நாடகாவில் முக்கிய எழுத்தாளரும், சுயநிர்ணய உரிமை போராட்டங்களுகு ஆதரவாகத் தொடர்ந்து எழுதிவருபவருமான திரு.ஜி. இராமகிருஷணன்
*பெங்களூரூ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் திரு. பால் நியூமன்
*பெங்களூரு சட்டப் பல்கலைக் கழகத்தில் கெளவரவப் பேராசிரியராக பணியாற்றிவரும் மனித உரிமை ஆர்வலரான திரு.ஹரகோபால் (APCLC)
*புதிய சோஷலிச மாற்று இயக்கத்தைச் சேர்ந்த திரு.ஜெகதீஸ்
*காஷ்மீரைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் திரு.காலித் வாசிம்

********