Wednesday, April 8, 2009

நீங்கள் யாருக்காவது ஆறுதல் சொல்லியிருக்கிறீர்களா?

  • அப்பாவையோ அம்மாவையோ இழந்து தவித்த நண்பர்களுக்கு,
  • சொந்தங்கள் பிரிந்த அலுவலக சக பணியாளர்களுக்கு,
  • தன் காதலைப் புரிந்து கொள்ளாமல், தன்னை தட்டிக்கழிக்கும் காதலனை நொந்துகொள்ளும் உங்கள் தோழிக்கு,
  • நல்லவனாய் பழகி துரோகம் செய்து விட்டுச் செல்லும் நட்புகளைஅனுபவித்தவர்களுக்கு,
  • காதலில் மூழ்கித் திளைத்து, கரையேறும்போது தனியாளாய் வருபவர்களுக்கு,
நீங்கள் எப்போதாவது ஆறுதல் சொல்லும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறதா?

கல்லூரியில் படிக்கும் போது வாழ்க்கையே ஒரு விளையாட்டாய்ப் 
போய்க்கொண்டிருந்தது. படித்து முடித்து, வேலைக்கு வந்த பின்னும் அந்த மைதானத்தை விட்டு வெளிவரவில்லை மனது. அலுவலகத்திலும் அதே அரட்டை, அதே பொறுப்பில்லாத தன்மை. அந்த பெரிய மனுஷத் தோரணை ஏனோ வரவில்லை. பிரிவு, அதன் வலிகள், அதனிலிருந்து மீண்டு வருதல் - எதுவுமில்லாமல் சில ஆண்டுகள் ஓடிவிட்டன.

அம்மாவை இழந்த நண்பனுக்கு ஆறுதல் சொல்ல சந்தர்ப்பம் கிடைத்தும், தவற விட்டேன். சொல்லத் தெரியவில்லை-நேரில் பார்த்து சொல்லிக் கொள்ளலாம் - இப்படி எல்லாமே. அல்லது 'முதிர்ச்சி வரவில்லையா' என்று தெரியவில்லை. அப்படி இப்படி என்று பலமாதங்கள் கடந்துவிட்டது. 'தொலைபேசியில் ஓரிரு வார்த்தை பேசியிருக்கலாமோ' என்ற குற்ற உணர்வு தொடர்ந்து துரத்திக் கொண்டே இருக்கிறது.

'கல்யாணத்துக்கு கூட போகலைன்னா பரவாயில்ல, ஆனா சாவுக்கு கட்டாயம் போகணும்டா'-ன்னு ஊர்ப்பக்கம் சொல்வார்கள். அதைக்கூட செய்யாமல் இன்னும் சின்னப்பையனாகவே மனதில் நினைத்துக் கொண்டிருந்தால் என்னவென்பது?!


கடைசியாய் சமீபத்தில் மற்றொரு தருணத்தில், ஒருமுனையில் என்னால் வெறுமனே கேட்டுக்கொண்டுதான் இருக்க முடிந்தது. ஆனால் அதுவே ஒரு மன முதிர்ச்சி்யை அளித்தது. எனக்குத் தெரிந்துவிட்டது, இன்னும் எனக்கு 'ஆறுதல் சொல்லத் தெரியவில்லை'. ஆனால் காது கொடுத்துக் கேட்க அவ்விடத்தில் நான் இருந்தது, மறுமுனையில் சற்று ஆறுதலளித்திருக்கும்.

ஆறுதல் தேவைப்படும் உங்கள் உறவுகளுக்கு, உங்கள் செவிகள் 'செவிமடுக்கட்டும்', உங்கள் நாவுகள் 'ஆறுதலளிக்கட்டும்'. உங்கள் கரங்கள் அவர்களைத் 'தாங்கிப்பிடிக்கட்டும்'.

படம்: http://pro.corbis.com/

Sunday, April 5, 2009

மெரீனா பீச்சு காந்தி செலையாண்டை...அதிஷாவின் அதட்டல்

//மக்களே மறந்துடாதீங்கோ மறந்தும் வூட்ல தூங்கிடாதீங்கோ.. மருவாதியா வந்து சேருங்கோ அல்லாங்காட்டி பதிவு போட்டு உங்க நிஜார பேஜார் பண்ண வேண்டிருக்கும்..// 

அதிஷாவின் அதட்டலுக்கு இணங்கி இந்த ஊர் சுற்றியும், இன்று நடக்க இருக்கும் பதிவர் சந்திப்பில் ஒரு பதிவராக கலந்து கொள்கிறான். 

இடம் - கடலோரக் கவிதைகள்,  காந்தி சிலையருகில்.

காலம் -  அஞ்சு மணிக்கு சும்மா சும்மா,  5-ம் தேதி சும்மா சும்மா (இன்றுதான் 05-04-2009).

பொருள் - வானமே எல்லை.


நீங்களும் வந்துருங்க...

Friday, April 3, 2009

TN07 - AL 4621 விபத்தில் சிக்கியது!

TN07 - AL 4621
என்ற எண்ணுடைய இரு சக்கர வாகனம்
வேளச்சேரி, இரயில் நிலையத்திற்கு அருகே
விஜயநகர் செல்லும் வழியில்
சற்றுமுன் (40 நிமிடங்களுக்கு முன்) 
நிலைகுலைந்தது.

அடிபட்ட வாகன ஓட்டியை ''தமி்ழ்நாடு அரசு' 
அவசர ஊர்தி (108) அருகிலுள்ள 
மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றது.

இந்த வண்டி எண்ணுக்கு உரியவரைப் 
பற்றி உங்களுக்கு தெரிந்திருந்தால் 
அவருக்குத் தெரிந்தவர்களுக்கு 
தெரியப்படுத்துங்கள்.

இந்தியப் பொருளாதார நிலை உயர்ந்துள்ளதா? - புதுசு கண்ணா புதுசு

எங்கு நோக்கினும் 'இந்தியா அதை சாதித்துவிட்டது, இதை சாதித்துவிட்டது, இந்த துறையில் நாம்தான் முதலிடம், அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிவிட்டது, வல்லரசா எப்போ மாறும்?' என்பது போன்ற விடயங்கள் விரவிக்கிடக்கின்றன. (எங்க தமிழ்நாட்டுல அடுத்த 'சூப்பர் ஸ்டார்' யாரு? ங்கறது கூட இதுக்கு முன்னாடி சாதாரணம்). 

 இதைப்பற்றியெல்லாம் அதிகமாக சந்தேகம் வந்துவிட்டது எனக்கு. உண்மையிலேயே நம் நாடு மகத்தான சாதனைகளை செய்து வருகிறதா?, நம்முடைய பொருளாதார நிலை உயர்ந்துள்ளதா? என்றெல்லாம் ஏகப்பட்ட கேள்விகள். ஆனால், கடந்த வாரத்தில் ஊருக்கு சென்றிருந்த போது இதற்கெல்லாம் விடை கிடைத்தது. 

திருநெல்வேலியிலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு பேரூராட்சி அது. கிட்டத்தட்ட, 6 வருடங்களுக்கு பிறகு அந்த பேருந்து நிலையத்தில் அதிக நேரம் செலவிட்டு அதன் அக்கம் பக்கத்தை கவனித்தேன். 

அன்று - இன்று.... 

அதே கடைகள் - டிஜிடல் பேனர்களுடன். 
நேரம் தவறிய அதிக சத்தமெழுப்பும் பேருந்துகள் - எண்ணிக்கை கொஞ்சம் அதிகம், சிற்றுந்து எக்ஸ்ட்ரா. 
அதே அழுக்கேறிய சீருடைகள், பட்டன் இல்லாமல் ஊக்குகள் அலங்கரிக்கும் அரசாங்க பள்ளி மாணவர்கள் - சீருடை நிறம் மட்டும் வேறு. 
பாஸ்டர்(போதகர்) மாருதி 800ல் சென்றவர் - 'ஒப்ட்ராவோ ஆப்ட்ராவோ', அந்த காரில் செல்கிறார். 
சிவன் கோவில் இடிந்து தகர்ந்த நிலையில் - புதுவித பூச்சுகளுடன் பல இலட்சம் விழுங்கிவிட்டு நிற்கிறது.
ஒத்தை காரில் பஞ்சாயத்து அலுவலகம் வந்த MLA - குறைந்தது 3 வாகனங்கள் புடைசூழ. 


என்னமோப்பா... ஏதோ 'இந்தியா ஒளிர்கிறது' ன்னீங்க. அப்புறம் இந்தியா உலகப் பொருளாதாரத்தில் சக்கை போடு போடுகிறதுங்கறீங்க. ஒண்ணுமே புரியலப்பா. உண்மையிலேயே இங்க என்னதான் மாற்றம் நடந்துகிட்டிருக்கு. 

எப்பவோ ஒருதடவை பேருந்து வருகிற ஊரில் கூட, முந்தாநாள் வந்த புது திரைப்படத்தோட திருட்டு குறுந்தகடு சர்வசாதாரணமாக உலாவிக்கொண்டு இருக்கிறது. ஒரு 'கடவுச்சீட்டு' (Passport) சம்பந்தமாக விசாரணைக்கு வந்த காவலர் அன்றைக்கு 100ரூ. கேட்டார்; இன்றைக்கு 300 ரூபாய் கேட்கிறார். சதவீதக் கணக்கில் பார்த்தால் 200 சதம் வளர்ச்சி.  இத்தனை நாள் இல்லாமல் 'புதுசு கண்ணா புதுசு' என்கிற ரீதியில் அரசுத் தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் - தேர்தல் நேரம்!. 

நல்லா இருக்குதுப்பா உங்க வளர்ச்சியும்.....!

Wednesday, April 1, 2009

காதலின் முதல் SMS (உண்மையில் கதை!)

உங்களில் காதலிக்காதவர் எவரேனும் இவன் மேல் கல் அடியுங்கள்!!! -காதல் க்ரைஸ்ட். 

நள்ளிரவு நேரம். சென்னையில் இருந்து சில நூறு கல் தொலைவில் தடதடத்துக் கொண்டிருந்தது அந்த இரயில். பாதித் தூக்கத்தில், S10 பெட்டியின் ஒரு பக்கவாட்டு மேல் படுக்கையில் நான். கடைசியாய் என் கைபேசியின் 'கேன்சல்' பொத்தானை அழுத்தியதாய் நினைவு. இரயில் ரிதத்திலிருந்து வித்தியாசப்பட்டு மிக அருகில் ஒலித்த 'டக் தடக் தடக்' என்ற சத்தம் தூக்கத்தை நிறுத்தியது. 'கைபேசி கைநழுவியிருந்தது!'. நண்பனின் கைபேசியில் இருந்து வந்த மங்கலான வெளிச்சத்தில் தேடிப் பார்த்தாகிவிட்டது. என் கைபேசி என்னிடமிருந்து விடுதலையாகி, ஜன்னல் கம்பிகளில் மோதி, இரயிலுக்கு வெளியே எங்கோ இருட்டில் தஞ்சமடைந்திருக்க வேண்டும்.

திண்டுக்கல் வரை விழித்திருந்து நண்பனை வழியனுப்பிவிட்டு, அதற்கு அப்பால் நான் இன்னொரு பெட்டியில் பயணிக்க வேண்டும்(திண்டுக்கல்லில் இருந்து இன்னொரு பயண்ச்சீட்டு) என்பதை மறந்து அயர்ந்து தூங்கிவிட்டேன். கண்ணில் தெரிந்தது மதுரை இரயில் நிலையம்.
S7 நோக்கி நடந்தேன்.இருக்கை எண் 40-ஐ அடைந்ததும் ஒருமுறை கண்ணை கசக்கிக் கொண்டேன். அங்கு அவள் உட்கார்ந்திருந்தாள். இல்லை, அழகாக புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தாள். இல்லை, இல்லை அவள் மட்டுமே அந்த கம்பார்ட்மெண்டில் அமர்ந்து அழகாக புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தாள். மீண்டும் ஒருமுறை இருக்கை எண்ணை உறுதி செய்துவிட்டு உட்கார்ந்துகொண்டேன்.

'மதமும் பகுத்தறிவும்' என்ற ஒரு கட்டுரைகளின் தொகுப்பை கொண்ட புத்தகத்தை எடுத்துக் கொண்டேன். சற்றுநேரம் அதில் மூழ்கினேன். ஏற்கெனவே இரயில் தாமதமாய் சென்று கொண்டிருந்தது. வீட்டில் இந்நேரம் தேட ஆரம்பித்திருப்பார்கள்.  கைபேசி தொலைந்த தகவலை எப்படி வீட்டிற்கு தெரிவிப்பது என்ற யோசனையில் புத்தகத்தை மூடினேன். எதிரில் இருந்த அவளிடம் பேச்சு கொடுத்து அவளது கைபேசியை கேட்டேன். புதிராய்ப் பார்த்த அவளிடம், என் கைபேசியை தவறவிட்டதை கூறி என் நிலைமையை விளக்கினேன். தன்னுடைய 'NOKIA 6600'-ஐ என்னிடம் நீட்டினாள்.

வீட்டிற்கு தகவலை சொல்லிவிட்டு, "என் மொபைல் என்ன நிலைமையில இருக்குன்னு தெரியல, அதுக்கு ஒருதடவை டயல் பண்ணி பார்த்துடறேன்" என்றேன். "சரி" என்று தலையை மட்டுமே ஆட்டினாள். என்னுடைய எண் "தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாக" பதிவு செய்யப்பட்ட பெண்ணின் குரல் எந்த சுவாரசியமும் இல்லாமல் ஒலித்தது. அவளிடம் கைபேசியை திரும்ப கொடுத்துவிட்டு, நான் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் கவனத்தை திருப்ப கழுத்தை திருப்பினேன்.


அப்போதுதான் கவனித்தேன் அவள் கைகளில் இருந்த புத்தகத்தை. 'இம்மானுவேல் கான்ட்'(Immanuel Kant)-டின் 'Critick of Pure Reason'. ஓரிரு வினாடி ஆச்சரியத்தில் உறைந்து போனேன். தத்துவம் என்றாலே பொதுவாக பெண்களுக்கு ஆகாது. அதுவும் எந்த சமரசத்திற்கும் ஒத்துவராத மிகவும் இயந்திரத்தனமான வாழ்க்கை வாழ்ந்து மடிந்த, ஆனால் தத்துவ உலகிற்கு அழியா செல்வங்களையும் கொடுத்த, மேதை 'கான்ட்' பற்றி படிப்பது என்றால்!!! எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சி 'ரிக்டர்' அளவுகோலில் 9.4-ஐ தாண்டியிருக்கும்.

'நீங்க கான்ட் பத்தியா படிக்கிறீங்க?' என்றேன் அந்த ஆச்சரியத்துடனே.
'ம்ம்' என்று பதில்.


'ஃபிலாஸஃபி ல ரொம்ப ஈடுபாடு உண்டா உங்களுக்கு?'
என்றேன். 'ஆமா' என்று மறுபடியும் ஒற்றை வரியில் பதில். 20-30 நிமிடங்கள் ஆகியிருக்கும். வண்டி விருதுநகர் பக்கம் வந்துவிட்டது.

'கான்ட் எழுதின புத்தகம் நீங்க ஏதாவது படிச்சிருக்கீங்களா?'
என்று எங்களிடையே குடிகொண்டிருந்த அந்த மௌனத்தை கலைத்து அவள் கேட்ட கேள்விக்கு, 'கான்ட் பற்றி கேள்வி ஞானம் மட்டுமே உண்டு' என்று பதிலளித்தேன்.

எப்படி இந்த புத்தகமெல்லாம் உங்களுக்கு அறிமுகமானது, கான்ட் கூறும் பல விஷயங்கள் குழப்பும் விதமாகவும், எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருக்குமே? அதிலும் ஒரு பெண், நீங்கள் எப்படி இந்த புத்தகத்தை அணுகுகிறீங்கள்? என்பன போன்ற என் (கடலை) கேள்விகளுக்கு பதிலளித்தாள்.

தான் எம்.பி.ஏ. படித்திருப்பதாகவும், விளம்பரத் துறையின் ஆர்வம் மிகுதியால் அதில் நுழைந்து கிளையன்ட் சர்வீசிஙகில் இருப்பதாகவும் சொன்னாள். இந்தத் துறையில் நுழைந்த பின்னர் கிடைத்த அனுவங்களும் நண்பர்களும் தத்துவம் பற்றி படிக்க காரணம் என்றாள். அவள், பேசிக்கொண்டிருந்த போது என் கண்கள் அவள் கண்களிலும், சில வினாடிகள் அவள் தடதடக்கும் அவள் உதடுகளிலும் நிலை கொண்டன.

சுதாரித்துக் கொண்டு, எனது ஆர்வமும் இதைச் சார்ந்தே இருப்பதை பகிர்ந்து கொண்டேன். புத்தகங்கள் எங்கள் பைகளுக்கு சென்று விட்டன. கோவில்பட்டி எப்போதோ கடந்துவிட்டதை காணவில்லை நான். எங்களின் விவாதங்கள் எங்கெல்லாமோ சென்று திரும்புவதற்குள்.....திருநெல்வேலி வந்து, இரயில் நின்றும் விட்டது. இரயிலுக்கு வெளியே அவள் அப்பா. கணநேரத்தில் கையசைத்துவிட்டு கடந்துவிட்டாள்.

ஊரில் மூன்று நாட்கள். திரும்பவும் சென்னை. வந்ததும் புதிய சிம் கார்டு வாங்கினேன். ப்ளாக்(block) பண்ணியிருந்த அதே எண்ணை திரும்பவும் ஆக்டிவேட்(Activate) செய்தேன். நண்பனின் கைபேசியில் சிம்மை இட்டு இயக்கியதும் வந்த முதல் SMS.

'ஹாய், இது புவனா. ரயில்ல சந்திச்சோமே? நீ எப்படி இருக்க? ரொம்ப சாரி, அன்னிக்கு பேச்சு சுவாரசியத்துல உன் பேரையே கேக்க மறந்துட்டேன்'

நீ்ங்க 'நீ' யாக மாறியிருந்தது! (தொலைந்துபோன என் நம்பருக்கு நான் அவள் கைபேசியிலிருந்து முயற்சி செய்தேனல்லவா? அதிலிருந்து என் எண்ணை எடுத்திருந்திருக்கிறாள்!)

அதைப் படித்து பிரமித்திருந்த நேரத்தில் இன்னொரு SMS. 'ஹேய், புது சிம் வாங்கிட்டியா?' (உபயம்: முந்தைய SMS-ன் டெலிவரி ரிப்போர்ட்).



இன்றோடு இரண்டு மாதங்களாகிவிட்டன, நான் அவளிடம் என் காதலை சொல்லி. 2 1/2 வருடங்களாகிவிட்டன அவளை இரயிலில் பார்த்து. உங்களுக்கு நினைவிருக்கிறதா, உங்கள் காதலின் முதல் SMS?