Sunday, August 28, 2011

போர்க் குற்றம், இனப்படுகொலைக்கு எதிரான மன்றம் - அறிமுகக் கூட்டம்


சேவ்-தமிழ்சு முயற்சியால், ஜூன்-2 ல் பெங்களூரூவில் தொடங்கப்பட்ட, 'போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான மன்றம்' மூலம் பல்வேறு மாநில(கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்காளம், டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் கேரளா) மனித உரிமை மற்றும் மக்கள் இயக்கங்களின் ஆதரவை, இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கு எதிராகத் திரட்டி வருகிறது. அதன் மையமாக, நேற்று மன்றத்தின் தமிழ்நாடு பிரிவின் சார்பாக 'பத்திரிகையாளர்கள் சந்திப்பு' மற்றும் அறிமுகக் கூட்டமும் நடைபெற்றது. 

மாலை 3 மணியளவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஏராளமான ஊடகங்கள் கலந்துகொண்டு, மன்றத்தின் தமிழக வரவை நல்வரவாக்கிவிட்டன.  

மன்றத்தின் அரங்கக் கூட்டம் ''தெற்காசிய அரசுகளும் மானுட நீக்கமும்!'' என்ற தலைப்பில் மாலை 6:00 மணியளவில், தெய்வநாயகம் பள்ளி, தியாகராய நகரில் வைத்து நடைபெற்றது. தமிழினப் படுகொலை புரிந்துவரும் இலங்கை அரசு, நீதியற்ற முறையில் மரண தண்டனை விதிக்கும் இந்திய அரசு, இவற்றை முன்னிருத்தி கூட்டத்திற்கான தலைப்பு தெரிந்தெடுக்கப்பட்டிருந்தது. 

போர்க்குற்றம், இனப்படுகொலைக்கு எதிரான மன்றத்தில் மற்ற மாநில பிரிவுகள் சார்பில் வெவ்வேறு மாநில பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 

1.திரு. ஆஸிஸ் - ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் இயக்கம், டெல்லி
2. வழக்கறிஞர்.சந்திரசேகர் - ஆந்திரப்பிரதேச சிவில் லிபர்டி கமிட்டி(APCLC), ஆந்திரா
3. பேராசிரியர்.மணிவண்ணன் (சென்னை பல்கலைக்கழகம்)
4.திரு.கண.குறிஞ்சி -மக்கள் ஜனநாயக குடியியல் ஒன்றியம் (PUCL)
5. தோழர்.தியாகு - தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

இவர்களோடு, 
மும்பை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி. திரு.H.சுரேஷ் அவர்கள் கலந்துகொண்டு மரண தண்டனைக்கு எதிராக தன்னுடைய வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்தார். 

நிகழ்விலிருந்து சில படங்கள் உங்கள் பார்வைக்கு...










மரணதண்டனைக்காகச் சிறையில் காத்திருக்கும் மூவரில் ஒருவரான பேரறிவாளன் அவரின் தாய்.

மும்பை, முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி. H.சுரேஷ் அவர்கள் பேசியதை தோழர்.தியாகு மொழிபெயர்த்தார்.


மரண தண்டனைக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் - 2ம் நாள்

பேரறிவாழன், சாந்தன் மற்றும் முருகன் இம்மூன்று தமிழர்கள் சார்பாக குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்த கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து செப்டெம்பர் 9, அதிகாலை - தண்டனை தேதியாகக் குறிக்கப்பட்டது.

இம்மூன்று தமிழர்களின் மரண தண்டனையை ரத்துசெய்யக்கோரி, மூன்று வழக்கறிஞர்கள் வெள்ளிக்கிழமை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலேயே காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்கள். நேற்று(சனிக்கிழமை) இந்த உண்ணாவிரதம் கோயம்பேடு, ஆக்ஸிஸ் வங்கி அருகே தொடர்ந்து நடைபெற்றது. ஆர்வலர்களும் ஊடகங்களும் நிறைந்திருந்த உண்ணாவிரதத் திடலில் இருந்து சில புகைப்படங்கள்.